ராஜபாட்டை(போடா சொட்டை :P) - திரைப்பார்வை

வெண்ணிலா கபடிக்குழு, "நான் மகான் அல்ல", "அழகர்சாமியின் குதிரை" என்று முதல் மூன்று நல்ல படங்களை தந்த இயக்குனர் சுசீந்திரனிடமிருந்து இப்பிடியொரு படத்தை நான் எதிர்பாக்கவில்லை. நல்ல இயக்குனர், தமிழ்சினிமாவின் முதன்மையான திறமையான நடிகர் விக்ரம் இணையும் படம் என்பதால் நல்லவொரு சுவாரஸ்யமான பக்கா மசாலா படத்தை (என்னதான் கமெர்ஷியல் படமென்றாலும்) எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததுக்கு படத்தில ஒண்ணுமே இல்லை. இப்பிடியொரு சாட்டர் படத்தை நல்ல படமெடுத்த சுசீந்திரனே தரேக்க இந்த திரைப்பார்வையும் நான் எழுதினதுக்குள் சின்னனாதான் இருக்கும்.


பெரிதாக விளம்பரங்கள் ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வெளிவந்த இந்தப்படத்தில் வெறுமன 4பாட்டுதான் என்றாலும், யுவனின் இசையில் பாடல்கள் முதலில் வரவேற்பை பெற்றிருந்தன. "பனியே பனிப்பூவே", "பொடிப்பையன் போலவே" பாடல்கள் நன்றாக இருந்தன. முதல் பாதியில் கலகலப்பாக நன்றாக சென்றபடம் இரண்டாவது பாதியில் பெரும் சொதப்பலுடன் முடியும் எண்டு எதிர்பாக்கமுதல் திடீரென முடிந்து விட்டது. தியேட்டரில் படம்முடிந்தமாதிரி தெரிந்தாலும் இன்னும் இருக்குமோ என்ற எண்ணமே இருந்தது. பெரிய்ய டுவிஸ்டுகள் ஒண்ணுமே இல்லாமல் முடிக்கோணும் எண்ட மாதிரி முடிச்சே மாதிரி இருந்திச்சு. படம்முடிஞ்ச பிறகுதான் "லட்டு லட்டு" பாட்டை போட்டு ஸ்ரேயா, றீமாசென்னுடன் விக்ரத்தை ஆட வைத்தார்கள்.


சுசீந்திரன் எடுக்கும் முதலாவது பெரிய்ய பட்ஜெட் படம் எண்டு சொன்னதுக்கு படத்தில பிரமாண்ட காட்சிகளென்று ஒண்டையும் காண முடியல. ஆனா இந்தபடத்தில பாராட்ட வேண்டிய முக்கிய கண்டுபிடிப்புதான் ஹீரோயின் தீக்சாசேத். கத்ரினா கைப்பை போல முகவெட்டை கொண்ட இந்த நடிகைக்கு நல்ல வாய்ப்புக்கள் வரும். அழகாக அம்சமாக அடக்கமாக இருக்கிறார். (கார்த்தி ஜெனிலியா போனலென்ன தீக்சா உனக்குதான்). இந்த படத்தில் இவருக்கு காட்சிகள் மிகக்குறைவுதான். எண்டாலும் அப்பிடியே கண்ணில நிக்கிறா. சிம்புவின் வேட்டை மன்னனிலும் இவ இருப்பது ரொம்ப மகிழ்ச்சி. விக்ரமும் நல்ல Stylish ஆகதான் வாறார். இறுதிக்கட்டங்களில் பல வேடங்களில் வரும் காட்சிகள் வேண்டுமென்றே புகுத்தப்பட்டிருக்கு. (தசாவதாரத்தையும் விட கூட வேடம் போடலாம் எண்டு காட்டவோ தெரியல.)



யாரடி நீ மோகினியில் வந்த அந்த வயதுபோன நடிகர் விஸ்வநாத் முதல்பாதியில் விக்ரமுடன் சேர்ந்து நன்றாக நடித்திருந்தார். இளவட்டங்களுக்கு ஈடுகொடுக்கமுடியும் என்று காட்டியிருந்தார். இந்தபடத்திற்கென்று தனியான நகைச்சுவை நடிகர் இல்லை என்றாலும் விக்ரமோடு திரியும் அடியாடக்களும் தம்பிராமையா செய்யும் சேஷ்டைகளும் ரசிக்க முடிகிறது. வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் விக்ரத்திற்கு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு காமெர்ஷியல் ஹிட் கொடுக்கவேண்டிய கடப்பாடு இந்தப்படத்தில் நிறையவே இருந்தது. ஆனால் மீண்டும் விக்ரமிற்கு ஒரு சொதப்பல் படமே கிடைத்திருக்கு. 

Director Suseenthiran
மொத்தத்தில் என்னதான் வித்தியாசமான கதைக்களங்களில் சுசீந்திரன் தன்னை நிரூபித்திருந்தாலும் இதில் முதன்முதலில் சொதப்பியிருக்கிறார். முதல்பாதிய மட்டும் சும்மா பாக்கலாம். இரண்டாம் பாதி ஏனோதானோ. விக்ரமின் சொதப்பல் படங்களில் இதற்கும் முக்கிய ஒரு இடம்கிடைக்கபோவது தவிர்க்கமுடியாதது.

பி.கு: இந்தப்படத்திற்கு நிறைய எழுத என்னால முடியல. அந்தளவிற்கு படம்சொல்லக்கூடியதாக இல்லங்க. நீண்டகாலத்துக்கு பிறகு இன்றுதான் யாழ்ப்பாணத்தில் படம் பார்த்தேன் (செல்லா திரையரங்கில் பதிவர் எப்பூடியும் வந்திருந்தார்)

திரைதகவல் பெட்டகம்-VII (தமன், SolarSai, சத்யா)

Composer Vidyasakar
இசையமைப்பாளர் தமனின் வளர்ச்சி உண்மையில் class இசையமைப்பாளர் வித்தியாசகரின் வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கின்றது என்பது   (வித்தியாசாகரின் தீவிர ரசிகராக இருந்தும் கூட) ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. இதற்கு சான்று பகர்வதுபோல் தனது ஆஸ்தான இசையமைப்பாளராக இவ்வளவு காலமும் உபயோகித்து வந்த வித்தியாசாகரை இயக்குனர் தரணி முதல்முறையாக ”ஒஸ்தி” படத்தில் கழற்றி இளம்இசையமைப்பாளர் தமனிற்கு வாய்ப்பளித்திருந்தார். அதேபோல் தனது முதலிரு படங்களான ”ஜெயம்கொண்டான்”, ”கண்டேன் காதலை” போன்றவற்றிற்கு வித்தியாசாகரை மெட்டுபோடவைத்த இயக்குனர் கண்ணன் "வந்தான் வென்றான்"இற்கு தமனுக்கு வாய்ப்பளித்திருந்தார். தமிழ்சினிமாவில் வித்தியாசகரின் மெட்டுக்கள் யாராலும் இலகுவில் மறந்துவிடமுடியாத ஒன்றாக இருந்தாலும்கூட, அவர் இறுதியில் இசையமைத்த ”தம்பிவெட்டோத்திசுந்தரம்” ”இளைஞன்” ”சிறுத்தை” ”காவலன்” போன்ற அல்பங்களில் தனதுதனி முத்திரையை வழமைபோல் பதிக்க தவறிவிட்டார் என்று கவலையுடன் ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

Composer Thaman
மேலே குறிப்பிட்ட படங்களில் நல்ல பாடல்கள் இல்லை என்று நான்சொல்லவில்லை. ஆனால் வித்தியாசாகரின் பாணியிலான பாடல்கள் மிகவும் குறைவு. காவலன் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும் வித்தியாசாகரின் தனித்துவ பாடல்கள் அதில் மிஸ்ஸிங்தான். எனினும் வெட்டோத்திசுந்தரத்தில் ”நேற்று இல்லை இல்லை இந்த ஆனந்தம்” பாடல் வித்தியாசகரின் பலமான மெலடியை மீண்டும் நினைவூட்டியிருந்தது. ஆனாலும் மற்றைய பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இறுதியாக தனது Formஐ நிரூபித்த அல்பமாக இருந்தது ”மந்திரப்புன்னகை”தான். மற்றைய மேலே குறிப்பிட்ட அல்பங்களில் அவரின் தனிமுத்திரை மிஸ்ஸிங்தான்.
------------------------------------------------------------------------------

இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் மூலமாக அறியப்பட்டவர்தான் பாடகர் Solar சாய். வேட்டையாடுவிளையாடுவில் இவரும் பிராங்கோவும் சேர்ந்து பாடிய ”நெருப்பே சிக்கிமுக்கி நெருப்பே” பாடல் அந்தக்காலத்தில் பிரபல்யமாக இருந்தது. அதன்பின்னர் சோலர்சாய் சில பாடல்களை பாடியபோதும் அந்தப்பாடல்கள் ஒன்றும் பெரிதாக பேசப்படவில்லை. பின்னர் D.இமானின் இசையில் மைனாவிற்காக ”ஜிங்கு சிக்கு” என்று பெரிய்ய ஹிட் பாடலை பாடினார். ஆயினும் மற்ற பாடகர்கள் போல் ஒரு ஹிட் கொடுத்த பிறகு கிடைக்கும் பிரபல்யம் இவருக்கு கிடைத்ததா? என்று கேட்டால் இல்லை என்று ஒருவார்த்தையில் சொல்லிவிடலாம். பலருக்கு இவரை பாடகரென்றே தெரியாது கவலைக்குரிய விடயம்தான்.
Singer Solar Sai
தனது முதல்வாய்ப்பின்பும் ஹாரிஸ்ஜெயராஜ் வாரணம் ஆயிரத்தில் ”யெத்தி யெத்தி யேத்தி” மற்றும் ”கோ”வில் ”அக நக” என்ற இரு பாடல்களிலும் தனிக்குரலாக இல்லாமல் மற்றைய பாடகர்களுடன் சேர்ந்து பாடவைத்தார். அண்மையில் ஒஸ்தியிலும் ”கலாசலா கலசலா” பாடலிலும் இவரது குரல் வந்திருந்தது. ஆனால் வெளியில் LR.ஈஸ்வரி,  TR.ராஜேந்தர் பாடிய பாடல்என்று பேசப்பட்டமையால் இவரது பெயர் இந்தபாடலிலும் வெளியே தெரிந்த பாடாக இல்லை. உண்மையில் இந்த பாடலில் ஆரம்பத்தில் கொஞ்ச நேரம் வரும் ஆண்குரல் சோலர் சாய்க்குரியது. அதாவது படத்தில் சோனுசூட் பாடும் நேரத்தில் வரும் குரல்.
------------------------------------------------------------------------------

”எங்கேயும் எப்போதும்” படம்தான் இசையமைப்பாளர் சத்யாவின் முதல்படம் என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வேறுசிலரோ ”சேவற்கோடி”தான் முதல்படம் என்கிறார்கள். ஆனால் இரண்டும் பிழை. சத்யாவின் இசையமைப்பில் முதலில் வெளிவந்த படம்தான் ”எங்கேயும் எப்போதும்”. சேவற்கொடி பாடல்கள் வந்து பிரபல்யம் அடைந்ததோ தவிர படம் இன்னும் வெளியாகவில்லை. இவை எல்லாத்துக்கும் முன்னதாக சத்யாவிற்கு இவ்விரண்டு வாய்ப்புக்களை வழங்கியது ”சில்லென்று ஒரு காதல்” புகழ் இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இன்னும் வெளிவராமல் இருக்கும் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படபாடல்கள்தான்.

Composer Sathya
பரத்வாஜ், சிற்பி, பாலபாரதி போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய இவர் இசையமைப்பாளராக உருவாகியது இயக்குனர் கிருஷ்ணாவின் ”ஏன் இப்படி மயக்கினாய்?” படம்மூலமாகதானாம். அண்மையில் ஒரு தொலைக்காட்சிப்பேட்டியில் இதை நான் அறிந்துகொண்டேன். இந்தபாடல்களை கேட்டுத்தான் ”சேவற்கொடி” ”எங்கேயும் எப்போதும்” வாய்ப்புக்களை இவருக்கு வழங்கியுள்ளார்கள். இவரின் 3வது படம்தான் எங்கேயும் எப்போதும். ஆனால் மற்றபடங்கள் இன்னும் வராததால் Debutant Composer and MovieDirectorன் படம் எங்கேயும் எப்போதும் என்று சொல்கிறார்கள். உண்மையில் அது பிழை.

முந்தைய பாகங்களுக்கு
I  II  III  IV  V  VI 

ஒஸ்தி-திரைப்பார்வை

ஒஸ்தி: இயக்குனர் தரணியின் இயக்கத்தில் குருவியின் சொதப்பலுக்கு பிறகு நீண்டகால இடைவெளிவிட்டு வரும் படம். மசாலா அக்சன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான தரணி இயக்கிய தில், தூள், கில்லி படங்கள் பெற்ற பாரிய வெற்றி அவரை முக்கிய இயக்குனராக நிலை நிறுத்தியிருந்தது. ஆனால் அதன்பின்னர் கடைசியாக வந்த ”குருவி” அவரது பெயரை கெடுக்கும்விதமா செம மொக்கையாக வந்திருந்தது. விஜயுடன் கில்லி கொடுத்த மெஹா ஹிட்டுக்கு பிறகு பலத்த எதிர்பார்ப்புடன் மீண்டும் இணைந்திருந்தனர் இருவரும் குருவிக்காக. ஆனால் எதிர்பார்ப்புக்கு தலைகீழாகவந்து, விஜயின் தொடர்ச்சியான புளொப்படங்களில் ஒன்றாக இருந்து விட்டிருந்தது.

அதன்பின் 3வருட இடைவெளிக்கு பிறகு வரும் படம்தான் இந்த ஒஸ்தி. குருவியில் வீழ்ந்த தனது மதிப்பை நிலைநிறுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இந்த படத்திற்கு இருந்தது. அத்துடன் ”விண்ணை தாண்டி வருவாயா” ”வானம்” என்று தனது இறுதி இரண்டு வெற்றிகரமான, வரவேற்பு கிடைத்த படங்களில் நடித்திருந்த சிம்புவும் இணைவது படத்திற்கு பலமாக இருந்தது. மேலும் வெளிவந்திருந்த ஒஸ்தி படத்தின் Trailer இளவட்டங்களிடையேயும், அக்சன் மசாலா படவிரும்பிகளிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் எதிர்பார்பை கூட்டியிருந்தது.

எனினும் தனது ஆஸ்தான இசையமைப்பாளராகிய ”வித்யாசாகரை” இந்தப்படத்தில் முதன்முறையாக தரணி கழற்றிவிட்டு தமனை பயன்படுத்தியமை பலருக்கு முதலில் ஏமாற்றமாக இருந்தாலும் தற்காலத்தில் வேகமாக முன்னேறிவரும் இசையமைப்பாளர் தமன் பொறுப்பறிந்து போட்ட மெட்டுக்கள் அனைவரையும் குத்தாட்டம் போட வைந்திருந்தது. ஒரு பாடலும் மெலடி என்றில்லாமல் அனைத்தும் fastbeat பாடல்களாக வந்திருந்தமை இந்த அலபத்தின் சிறப்பாக இருந்தது.

மேலும் ஹிந்திபடமான ”தபாங்”ன் றீமெக்கான இந்த ஒஸ்தி படத்திற்கு ஒறிஜினல் படத்தில் வந்து பிரபலமானதைபோல் ஒரு டப்பாங்கூத்து பாடல் தேவைப்பட்டதாம். அதற்காக நீண்டடடடடடடடட காலத்திற்கு பிறகு பழம்பெரும் பாடகி LR.ஈஸ்வரி, Solar சாய், TR.ராஜேந்தருடன் சேர்ந்து ”கலாசலா கலசலா” என்று தொடங்கும் ITEM SONGஐ பாடியிருந்தார். இந்தப்பாடல் காட்சியை மேலும் பிரபலபடுத்தும் நோக்குடன் ஹிந்தி கவர்ச்சி நடிகை ”மல்லிகா செரவாத்” இந்தப்பாடலிற்கு மட்டும் ஆட அழைக்கப்பட்டார். அதனால் இந்தப்பாடலில் ”மைடியர் டார்லிங் உன்ன மல்லிகா கூப்பிட்றா. மல்லிகா மை டார்லிங் வாம்மா கலாய்க்கலாம்!” போன்ற வரிகள் பயன்படுத்தப்பட்டன. பாடலும் நல்ல ஹிட்டானது.

இந்தப்பாடல்கள் நன்றாக வந்திருந்ததை போல வரிகளும் அதிரடியாக அமர்க்களமாகவே அமைக்கப்பட்டிருந்தது. வாலியின் வரிகளில் வந்த ”கலாசலா”, ”தமிழ்நாட்டு Copதான்” யுகபாரதியின் வரிகளில் "நெடுவாலி” பாடல்களும் வரிகளிலும் அதிரடியை வெளிப்படுத்தியிருந்தது. மொத்தத்தில் படத்தின் எதிர்பார்ப்பை பாடல்கள் மேலும் அதிகரித்திருந்தன. அத்துடன் வித்தியாசாகரை விட்டுட்டு தனக்கு கொடுத்த நம்பிக்கையை தமன் பாடல்கள் மூலம் காப்பாற்றியிருந்தார்.

இப்படி நல்ல எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை ஓரளவு திருப்தி செய்திருக்கிறார் இயக்குனர் தரணி. படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே படம் பயணிக்கபோகும் பாதையை நீங்கள் இலகுவில் ஊகித்துவிடக்கூடிய வழமையான பாணியிலான கதை இருப்பது ஒஸ்தியின் பலவீனமே. படம் றீமெக்காக இருப்பதால் (தபாங் நான் பாக்கல) கதையில் பெரிசா மாற்றத்தை எதிர்பாத்திருக்க முடியாதென்றாலும் எதாவது டுவிஸ்டுகளை வைச்சாவது நல்லவொரு வேகமான அக்சன் படமாக சிங்கம் மாதிரி கொடுத்திருக்கலாம். குருவி மாதிரியான ஒரு படத்துக்கு இது எவ்வளவோ பெட்டர்.


Trailerல பாத்த மாதிரியே சிம்பு பஞ்சுகளை அள்ளி விசிறுகிறார். சிம்புவின் ஓவர்பில்டப்புகள் பிடிக்காதவர்களுக்கு சரியான சலிப்புகளை இக்காட்சிகள் ஏற்படுத்தகூடும். மற்றப்படி பொலீஸ் கெட்ப்பில் நல்ல ஸ்மாட்டாக தெரிகிறார் ஆரவாரமாக எடுப்பாக தனது அக்சன்களை போடுகிறார். பாடல்களில் வழமைபோல உடலைவருத்தி லாவகமாக நடனமாடுகிறார். ”குருவி” படத்தில் வருவது போல், சிம்பு கட்டிடத்துக்கு கட்டிடம் பாயும் காட்சிகளை இதிலும் புகுத்தி சலிப்பூட்ட வைக்கிறார் தரணி. சிக்ஸ்பக் வைத்த காட்சி இருக்கு என்று சொன்னபடியா இறுதிக்காட்சியில் 6பக்  என்று உணரமுடிகிறதே தவிர பெரிதாக சிம்புவிற்கு சிக்ஸ்பக் வந்ததாக காண முடியில்லை.


ஆனால் ரிச்சா இந்தப்படத்தில் சும்மா ஹீரோயின் இருக்கோணும் என்பதற்காக சேர்க்கப்பட்டவர் போலவே வந்து போகிறார். முக்கியமி்லாத நடிப்பு திறமையை காட்ட முடியாத காட்சிகள். ஒஸ்தி, மயக்கம்என்ன விற்கு முதல் வந்திருந்தால் ரிச்சாவிற்கு நடிக்கவே தெரியாது என்று கருத்து அனைவரிடமும் ஏற்பட்டிருக்ககூடும். இந்த படத்திலும் கொஞ்சம் தைரியமுள்ள பெண்ணாக காட்டப்படுவதாலோ என்னவே பெரும்பாலும் முறைச்சபடிதான் தெரிகிறார். (இல்லாட்டி சாதாரணமாவே டெரர் லுக்குதானோ தெரியேல?).

பெரிசா ஹீரோயினுக்குரிய அழகுமில்லை. ஏன் மினக்கெட்டு தெலுங்கில நடிச்சவவ  இங்க கொண்டுவந்தாங்களோ? தமிழ்நாட்டில வடிவான பெண்கள் இல்லையா? புதுஆக்கள்தான் வேணுமெண்டா யாரையும் ஒண்ட தூக்கி போடலாம்தானே? ஒரு மசாலா அக்சன் படத்தில நல்ல கலர்புள்ளான ஹீரோயின எதிர்பார்த்தம் தரணி சார்.


சந்தானம் மயில்சாமி வையாபுரி தம்பிராமையா போன்றோர்தான் படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதில் முக்கியபங்கு. வழமைபோலவே சந்தானம் இந்த கூட்டத்தோடு சேர்ந்து கலாய்க்கிறார். டுமிலுதான் டுமிலுதான் பாடலில் சிம்பு ஆடினதுபோலவே ஆடுவதற்கு நாலு பேரை தனது கை காலை தூக்கச்சொல்லி ஆட வெளிக்கிட்டது காமெடியின் உச்சமாக இருந்தது. சிம்புவின் இறுதி 3படங்களிலும் கணேஷ்(இங்க என்ன சொல்லுது? ஜெசி ஜெசின்னு சொல்லுதா?) இருக்கிறமை குறிப்பிடவேண்டிய விடயம்.

மல்லிகா, சோனுசூட்

வில்லானாக வரும் சோனு சூட்டை நீங்கள் பல தமிழ்படத்தில் பாத்திருக்கலாம். ஹிந்தி ஒறிஜினல் தபாங்கிலயும் இவர்தான் வில்லனாம். நெஞ்சினிலே, கள்ளழகர், மஜ்னு போன்ற தமிழ் படங்களில் தீவிரவாதியாக வந்தவர். இந்தபடத்திலும் நல்ல திடகாத்திரமாக வருகிறார். சிக்ஸ்பக் சிம்புவைவிட இவரின் கட்டுமஸ்தான உடற்கட்டு நல்ல ஒரு ஹீரோக்குரிய லுக்கை தருவதுடன் 6பக்கையும் இலகுவாக காட்டிவிடுகிறது.

மேலும் ஜித்தன் ரமேஷ், சரண்யா மோகன், நாசர், ரேவதி, நிழல்கள் ரவி என முக்கிய நடிக நடிகைகளும் இதில் தரணியால் உபயோகப்பட்டிருக்கின்றனர். ஹீரோவாக தொடர்ச்சியாக தோல்விப்படங்களையே கொடுத்த ரமேஷ் தனது தனிஹீரோ பாதையிலிருந்து விலத்தி குணச்சித்திர வேடங்களையும் இந்த படத்தின் பின் தாராளமாக எடுப்பார் போலதான் தெரிகிறது. 

படத்தில் பாடல்கள் நன்றாக வந்ததைபோல அதை அழகாக, நல்ல அதிரடியாக, ஆட்டம், செட் மூலம்  படமாக்கியிருக்கிறார் தரணி. இதற்கு ஒளிப்பதிவாளர் கோபிநாத்தின் பங்கும் முக்கியமானது. ”தமிழ் நாட்டு copதான்” எடுக்கப்பட்ட காட்சியமைப்பும்   ”நெடுவாலி” பாடலுக்கான சிம்புவின் ஆட்டமும். ”கலாசலா”வில் மல்லிகாசெரவாத்தின் குத்தாட்டமும் படத்தில் பாடல்களுக்கு மெருகூட்டும் பிளஸ் பாயிண்டுகள். ”வாடி வாடி Cute பெண்டாட்டி” பாடலுக்கு மட்டும் வெளிநாடு சென்று வந்திருக்கிறார்கள்.

தரணி குருவியில் விட்ட பெயரை நிலைநாட்ட இதில் சரியாக கஸ்டப்பட்டிருப்பது தெரிந்தாலும், படத்தை ஓரளவு நல்லாக தனது இயக்கும் திறனால் கொண்டு சென்றிருந்தாலும், நல்ல வித்தியாசமான கதை இல்லாத குறையினால் இது பலரிடையே தாக்கத்தையோ சூப்பர் படமென்ற ஒரு பிரமையையோ ”ஒஸ்தி” ஏற்படுத்தமாட்டாது.
மொத்தத்தில் ஒஸ்தி ”பரவாயில்லை & பாக்கலாம்” ரகமே.
ஒஸ்தி - அஸ்திவாரம் சரியில்லைங்கோ!

மயக்கம் என்ன (உணர்ச்சிப்பெருக்கு) - திரைப்பார்வை

டிஸ்கி: முதலில் நேரம் கிடைக்காததால் மயக்கம் என்ன-திரைப்பார்வை எழுதுவதி்ல்லையென்றே நினைத்திருந்தாலும், நல்ல படத்தை பற்றி கொஞ்சமாவது சொல்லோணும் என்கிறதால நல்லா பிந்தியும் எனது  பதிவையும் வரவு வைக்கிறேன்.

தனது முந்தைய படமான ஆயிரத்தில் ஒருவனில், தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றசெல்வராகனின் இயக்கத்தில் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில், பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் (முதலில் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது) காலம் தாழ்த்தி வந்த படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தூள்ளுவதோ இளமை மூலம் திரைத்துறைக்கு செல்வராகவன் காலடி எடு்த்து வைத்திருந்தாலும் ”காதல்  கொண்டேன்”  மூலம்தான் இயக்குனராக உலகறியப்பட்டார்.


பின்னர் 7G Rainbow Colony, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தொடராக வித்தியாசமான படங்களால் தனக்கான இடத்தை உறுதியாக பிடித்த இவர், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர் என்று இலகுவாக கூறிவிடலாம். இவரின் படைப்புகளில் எனக்கு பிடித்ததும் இதுவரை (என்னைப்பாறுத்தவரை) தமிழ்சினிமாவை வேறுகோணத்தில் உலகசினிமாக்களுக்கு ஒப்பாக காட்டிய, ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அதகளப்படுத்திய ”ஆயிரத்தில் ஒருவன்”ஐதான் குறிப்பிடமுடியும்.

தீபாவளிக்கு வந்த இரண்டு திரைப்படமும் பொதுவான சினிமா ரசிகர்களிடைய பலத்த வரவேற்பை பெற்றிராத நிலையிலும், போதியளவு தியட்டர்களை பெறமுடியாத நிலையிலேயே தீபாவளிப்போட்டியிலிருந்து ”மயக்கம் என்ன” தானாக விலகிப்போயிருந்தது. பின்னர் தீபாவளிக்கு வெளியான படங்கள் தியட்டர்களிலிருந்து ஓரளவு தூக்கப்பட்ட நிலையில் November25அன்று பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. செல்வராகவன் இயக்கம் என்பதுதான் படத்தின் பெரிய்யயயயய பிளஸ் பொயின்ற் என்பது மறுபேச்சில்லாத உண்மை. (தனுஷ் படத்தில் இருந்தாலும் கூட)

அதற்கு மேலதிகமாக இந்த படத்தின்பாடல்கள் முன்னமே வெளிவந்து அனைத்து தரப்பையும் நன்றாக திருப்திப்படுத்தியிருந்தது. ”ஓட ஓட தூரம் குறையல”, ”அடிடா அவள உதைடா அவள” பாடல்கள் இளைஞர்களையும்  + டப்பாங்குத்து பாடல் விரும்புவோரையும் ”நான் சொன்னதும் மழை வந்துச்சா”, "பிறைதேடும் இரவிலே உயிரே” பாடல்கள் பெண்கள் + மெலடி ரசிகர்களையும் கவர்ந்து மயக்கம் என்னவை ஆகா ஓகோ என எதிர்பார்க்க வைத்திருந்தன.

செல்வராகவன் கதையாசிரியராக இருந்த ”துள்ளுவதோ இளமை” முதல் பின்னர் அவர் இயக்கத்தில் வந்த படங்களில் புதுப்பேட்டை வரை செல்வாவின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த யுவன்சங்கர்ராஜா ”ஆயிரத்தில் ஒருவன்” படத்தில் விலகியதால் (செல்வாவுடன் ஏற்பட்ட ஏற்பட்ட பிரச்சனை காரணம் என்று அப்போது கூறப்பட்டது. உண்மை தெரியவில்லை. தெரிந்தால் யாராவது உறுதிப்படுத்துங்கள்) அந்தப்பட வாய்ப்பு அப்போது ஜீவி.பிரகாஸ்குமாருக்கு வந்தது.

Rich, GV, Dhanush, Selva, Selva's Wife
 அதில் ஜீவி.பிரகாஸ்குமார் தனது பின்னணி இசையில் பின்னிப்பெடலெடுத்திருந்தார். அந்த Theme Music வெகுவாக பாராட்டப்பட்டிருந்தது. பாடல்களும் நல்லா வந்திருந்தாலும் 3 பாடல்கள் மட்டுமே அந்த படத்தில் பயன்பட்டிருந்தது. அதன் பின் அப்படியே ”மயக்கம் என்ன”விலும் GV.PrakashKumarயையே அழைத்தார் செல்வா. அந்த நம்பிக்கையை பாடல் மூலம் 100க்கு 200% ஜீவீ.பிரகாஸ் திருப்திபடுத்தியிருக்கார் என்று சொல்லலாம். வழமையாக செல்வராகவன் படங்களில் பாடல்களையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சிறப்பாக அந்தப்படத்திற்குரிய Theme Music இருக்கும். மயக்கம் என்னவிலேயும் அதற்கு ஒரு குறையுமில்லாமல் GV.Prakash நல்லவொரு இசைக்கலவையை வழங்கியிருக்கிறார்.

மயக்கம் என்ன எதிர்பார்ப்பை திருப்தி செய்ததா இல்லையா? என்ற கேள்விக்குமுன் வழமைபோல் அரைச்ச மாவையே அரைக்கும் இயக்குனர்கள் போலல்லாது வித்தியசமாக ஒரு யதார்த்தமான சினிமாவை தந்ததில் இந்தமுறையும் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம். தனது 5வது படத்தில் 3வது முறையாக இணையும் செல்வராகவன் பலரை ”மயக்கம் என்ன” மூலம் திருப்திப்படுத்தியிருந்தாலும் கூட மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதையால்; கலர்புள், வேகமாக நகரும் அக்சன் படவிரும்பிகளை இப்படம் திருப்திப்படுத்தவில்லை.அதற்காக ”மயக்கம் என்ன” சரியில்லாத படமி்லை. அவர்களின் ரசனைக்கு ஏற்ற படம் இது இல்லை. அவ்வளவும்தான்.

கதையின் கருவின் மூலம் படத்தை இதைவிட வேகமாக நகர்த்த முடியாதென்பது கண்கூடு. அத்துடன் படத்தை உயிரோட்டமாக தருவதில் படத்தின் காணப்பட்ட தொய்வுநிலை தவிர்க்க முடியாததொன்றாகியிருக்கலாம். அத்துடன் முதல்பாதியில் பல காட்சிகளில் Background score தவிர்க்கப்ட்டிருந்தது. படத்தில் ஒரு Natural flowஏற்படுத்த இது கையாளப்பட்டிருந்தாலும் பலருக்கு இது படம் சரியான இழுவை போன்ற உணர்வை ஏற்படுத்தியிருக்ககூடும்.

இந்தப்படத்தில் தனுஷ், குணச்சித்திர நடிகர் ரவிப்பிரகாஸ் தவிர மிச்ச அனைவரும் பெரும்பாலும் புதுமுக நடிகர்கள்தான். தனுஷ் நடிப்பில் அசத்தல்+கலக்கல். படத்தில் பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருந்தார். முதல் தமிழ்படத்திலேயே நடிகை ரிச்சாவிடம் நல்ல முதிர்ச்சி. படத்தில் துணிச்சலான பெண்ணாக வருவதால் எப்பவும் சற்று முறைச்சபடியே நன்றாக நடித்திருந்தார். படத்தின் 2வது பாதியில்தான் ரிச்சாவின் நடிப்பு பளிச்சிடுகிறது. ரவிப்பிரகாஸ்வழமைபோல இந்தப்படத்திலும் HiFiயாக  வந்து பலரது எரிச்சலை தனது பாத்திரம்மூலமாக பெற்றுவிடுகிறார்.


இந்தப்படத்தில் ஆரம்பத்தில் இடம்பெறும் ஹீரோயினின் காதல் தொடர்பான முடிவுகள் பலருக்கு (காதல் செய்யும் பெரும்பாலானோருக்கு) பிடிக்காமலும், ”எமது கலாச்சாரத்தில இப்பிடியா காட்டுவது கேவலம்” என்று சொல்வோரும் தற்காலத்தில் இப்படி இடம்பெற்ற எத்தனை நிகழ்வுகளை பார்க்கவில்லையோ? அல்லது உண்மையை படமா எடுத்தா ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லையா? என்றுதான் கேட்க தோன்றுகிறது. என்னதான் முதலில் உண்மைகள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாமல் வந்தாலும் பின்னர் அதேபோல் கணவன்-மனைவி உறவின் சிறப்பை வெளிச்சம்போட்டு காட்டி பலரின் கைதட்டல்களை பெற்றுள்ளார் செல்வா.

”என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி.
உனக்கென என மட்டும் வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி” பிறைதேடும் இரவிலே பாடலில் வரும் இந்த வரிகள் இதற்கு சான்று பகர்கின்றது.

படத்தில் வரும் ”காதல் என் காதல் அது கண்ணீரில” பாடல் படத்தின் கதைக்கு சம்பந்தமில்லாமல் வேண்டுமென்று புகுத்தப்பட்ட இடைச்செருகலாக வருகிறது. இந்தப்பாடல் "Why This Kolaveri" பாடல் பாணியில் முதலே வந்த fast beat காதல்தோல்வி பாடலாகும். "Why This Kolaveri"யைவிட இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்துடன் ஹாரிஸ்ராகவேந்திரா பாடிய ”என்னென்ன செய்தும் இனி” பாடல் திரைப்படத்தில் இடம்பெறவில்லை.



படம் மிகவும் மெதுவாக நகருவது போல தோன்றுவது படத்தின் பலவீனம்தான் என்றாலும் அனைவரும் பாக்கவேண்டிய உணர்ச்சி ததும்பும் நல்ல படம்தான் இந்த ”மயக்கம் என்ன”. தொடர்ந்தும் வித்தியசமான படங்களை தரும் செல்வராகவனுக்கு பாராட்டுக்களும் பொட்டலத்தின் கைதட்டல்களும். மயக்கம் என்ன - உணர்ச்சிப்பெருக்கு

பதிவர் கார்த்தியின் Ideaகளை ”ஒஸ்தி”க்காக யுகபாரதி சுட்டாரா?

அதிரடி மசாலா இயக்குனர் தரணியின் இயக்கத்தில் சிம்பு நடித்து இந்த மாதம் 18ம் திகதி வெளிவரவுள்ள படம்தான் ஒஸ்தி. படத்தின் பாடல்கள் ஏறத்தாழ 2கிழமைக்கு முதலே வெளிவந்திருந்தது. அதிரடியாக தமனின் இசையில் வந்திருந்த பாடல்களுக்கு இளவட்டங்கள் மத்தியில் பயங்கர வரவேற்பு கிடைத்திருக்கின்றது. 

சிம்பு மல்லிகாசெராவத்
இந்த பாடல்களில் ”நெடுவாலி அடியே நெடுவாலி” என்று தொடங்கும் ராகுல் நம்பியார் மற்றும் மகதி பாடும் பாடல் யுகபாரதியால் எழுதப்பட்டிருந்தது. அதில் வரி ஒன்று ”கண்” "GUN" என்று rhymingஆகாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த வரிகள் கீழே

அட டுமீலுதான் அட டுமீலுதான்
மாமன் Gunல சுட்டா டுமீலுதான்!!
அட டம்மாலுதான் அட டம்மாலுதான்
மாமி கண்ணுல சுட்டா டம்மாலுதான்!!
யுகபாரதி
 ஆனால் இதே மாதிரி rhymingகான வரியை பதிவர் ”கார்த்தி” (அங்கென்ன பார்வை? அதாங்க நான்) 2011 காதலர் தின பதிவில் (2011-02-14) உபயோகித்திருந்தார். அதைப்பார்த்து impress ஆகிதான் கவிஞர் யுகபாரதி தனது பாடலில் இதே மாதிரி வரிகளை சிறப்பாக உபயோகித்திருக்கிறார். 2000ல் வெளிவந்த Memento பார்த்து AR.முருகதாஸ் அதைவிட சிறப்பாக திரைக்கதை அமைத்து ”கஜினி” தந்தது மாதிரி. கார்த்தியின் வரிகள் கீழே உங்களுக்காக.

உன் கண்ணை பார்த்தே
பலருக்கு இதயம் துடிக்கவில்லையாம்
உன் கண் என்ன GUNஆ? 
இப்ப சொல்லுங்க சார். கார்த்தியிட்ட சொல்லாம யுகபாரதி Ideaவை ஆட்டைய போட்டது தப்பா இல்லையா? தப்புதானே? உங்கட ஆதரவ பொறுத்து நஷ்டஈடு வழக்கு போடுற பிளான்ல இருக்கிறேன். 
 
டிஸ்கி: இது ஒரு செமமொக்கை பதிவு மாமு! யாரும் சீறியஸா எடுத்து சொறிஞ்சா நான் பொறுப்பில்ல. ஏன் டிஸ்கிய பதிவின்ர தொடக்கத்துலதான் போடணுமா? நாங்க கடைசியா போடுவமுல்ல.

7ம் அறிவு - திரைப்பார்வை (Neutral Review from Surya's Fan)

டிஸ்கி: நான் சூர்யா ரசிகன். விஜய் ரசிகனில்லை.
7ம் அறிவை தீபாவளியன்றே மாலை 5அளவில் பாத்திருக்க வேண்டியது 2மணி நேரம் காத்திருந்து முட்டி மோதி Ticket counterக்கு செல்ல கொஞ்சம் முதலே, முன்னே சென்றவர்கள் ஐஞ்சாறு எண்டு டிக்கெட்டுக்களை முழுவதுமாக வாங்கி முடித்து விட்டிருந்தனர். அதன் பின் நேற்று வெள்ளிக்கிழமை இரவுக்காட்சியிலேயே Concord திரையரங்கில் பார்க்கமுடிந்தது. கொட்டிய மழையையும் தாண்டி கூட்டம் அலையென வந்திருந்தது.


-----------------------------------------------------------------------------------------
படத்தை பற்றி பாக்கமுதல் தீபாவளியன்று சென்று ரிக்கெட் கிடைக்காம திரும்பி பலத்த ஏமாற்றத்தோட வந்திருந்தாலும் அங்கே நடைபெற்ற ஒரு சம்பவம் படம் பார்த்ததைவிட டபுள் மடங்கு மனநிறைவை அள்ளிதந்திருந்தது. கடவுள் என்பவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மீண்டும் என்னிடத்தில் உறுதிப்படுத்தி சென்றிருந்தது.

4.30க்கே காட்சி ஆரம்பமாகும் என்று சொன்னாலும் முதல் காட்சிகளின் தாமதத்தால் காட்சி நேரம் பிந்தும் என்று தெரிந்தபோதும் நானும் இன்னும் இரு நண்பர்களும் 3.30மணியளவிலேயே சென்று விட்டிருந்தோம். ஒப்பீட்டளவில் கூட்டம் குறைவாக இருக்கும், பல்கனிக்குரிய நுழைவாயில் வழியே சென்று ODC Ticket எடுப்பதே எங்கள் வழமையான திட்டம். அந்த பயங்கர கூட்டத்தில் நாங்களும் சென்று எமது நிலைகளை பலப்படுத்தி உள்ளே நுழைவதற்கு காத்திருந்தோம்.

அப்போதுதான் அந்த கூட்டத்தில் அந்த நாதாரியை கண்டோம். முதலில் தன்பாட்டுக்கு அலம்பியபடி இருந்த அந்த எருமை மெல்லம் மெல்லமாக தான் பெரிய ரவுடி என்ற மாதிரி பில்டப்பை அங்கே ஏற்படுத்திகொண்டிருந்தான். தண்ணியடித்திருந்த அவன் ”தாங்கள் 12மணியிலிருந்து வந்திருக்கிறம். செற்றா வந்திருக்கிறம். எங்கட செட் போய்முடியதான் மற்ற ஆக்கள் போகலாம் என்று சொல்லி கூட்டத்திலிருந்து பலரை தள்ளியும் பலருடன் அடிதடிக்கும் போனான். இத்தனைக்கும் அந்த செற் எண்டு சொன்ன ஆக்கள் பெரிய வயதில்லாத வட்டுகள் அதோட அவர்கள் ஏற்கனவே நல்ல முன்னுக்கு இடத்தை உறுதிப்படுத்தி வைத்திருந்தனர்.

ஆன இவர் தான் பெரிய ஆள் எண்ட பில்டப்ப ஏற்படுத்தி தன்ர பாட்டுக்கு தான் நினைச்ச இடமெல்லாம் போய்வந்து தான் நிக்க ஒழுங்கா வழிவிடோணும் எண்டு கூறி தனக்கு பின்னால் முன்னால் இருந்தவர்களுடன் வீணாக சண்டைக்கு போய்க்கொண்டிருந்தான். பலருடன் முண்டி கடைசியாக என்னோடயும் சண்டைக்கு வந்தான். என்னை தட்டி ”ஏன் இதில நிக்கிறாய்? பின்னுக்கு போ” என்றான் கறாராக. முதலே இதெல்லாம் பாத்துக்கொண்டிருந்த எனக்கு அவன பாக்கவே செம கடுப்பா இருந்தது. ஆனால் அவனுடன் வந்த ஆக்கள்கூட. SO கடும் கோபத்தில இருந்தாலும் வாயை திறக்காது கடுமையாக முறைச்சு பாத்தேன்.


அது அவனுக்கு கோபத்தை வரவழைத்திருக்கவேண்டும். சிங்கள தூசனத்தால் திட்டினான். (எனக்கு பெரிய டவுட். ஏன் கொழும்பில தியட்டருக்கு வருகிறாக்கள் மற்றவய  திட்டுறதுக்கோ ஏதாவது கேக்கவோ சிங்களத்த பாவிக்கினம்? பாக்கவந்தது தமிழ் படம் வருறதில 99% தமிழாக்கள். ஏன் சிங்களத்தில் பந்தா விடுகினம்?) உண்மையில் அவனை திருப்பி திட்டுற அளவுக்கு எனக்கு சிங்களம் தெரியாது. அதால ”உனக்கு தமிழ் தெரியாதா? சிங்களத்தில பெருசா விடுறாய்” என்று கடும்தொனியில் கேட்டேன். வாயை வைத்தால் வீண் சிக்கல்கள் வருமெண்டு பொறுத்திருந்தாலும் கோபமேலிட்டால் கதைக்காமல் இருக்க முடியவி்ல்லை.

உடனே அவனோடு வந்திருந்த மற்ற எருமைகள் எல்லாம் ”ஏய் டேய்” எண்டு கத்த அவனும் என்ர சேட்டைபிடித்து இழுத்து அடிக்கிற அளவுக்கு வர மற்றவர்கள் ஒரு மாதிரி பிடித்து எனக்கு அடிவிழாமல் காப்பாற்றி விட்டனர். ஆள் பலம் எம்மிடத்தில் இல்லையென்பதால் பம்மிக்கொண்டு கோபம் வந்தும் அடக்கிகொண்டு சத்தம்போடாம அப்பிடியே இருந்து விட்டோம். அவனது மண்டையை கோடாலியால் பிளக்கோணும் என்கிற அளவுக்கு எனக்கு கோபம். மற்ற நண்பனுக்கு அவனின்ர மண்டையை சுவரில போட்டு அடிக்கோணும் என்கிற அளவுக்கு இருந்ததாக சொன்னான்.

அவன் தொடர்ந்தும் தனது சாகசங்களை மற்றவர்களிடமும் அரங்கேற்றிக்கொண்டிருந்தான். என்ன செய்ய மற்றவர்களும் ஆள் பலம் இல்லாது கம்முன்னு இருந்தார்கள். அவனுடன் ஏட்டிக்போட்டியாக சண்டையிட போன இன்னொருவரும் போதிய அதரவில்லாமல் கொஞ்சம் அமைதியாக நின்று கொண்டிருந்தார். அந்தநேரத்தில் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கடுப்பாகி ஒரு சண்டியனிடம் phoneபண்ணி சொல்லியிருக்கவேண்டும். தூரத்திலிருந்தே கத்தியபடி அந்த குழப்பம்காசியை சிங்களத்தில் பெரிசாக வைதபடி ஒருவர் வேறு இருவருடன் வந்து கொண்டிருந்தார். அவரது உடற்கட்டும் பேச்சின் கடுமையையும் பார்த்து அவ்வளவு நேரமும் பிலிம் காட்டியவர் கதிகலங்கியே போனார். தனது பேச்சைக்குறைத்து அடங்கிப்போனார்.

முதலே கடுப்பிலிருந்த மக்கள் கூட்டமும் புதிதாக வந்தவருடன் சேர்ந்து வசை மாரி பொழிய தொடங்கினர். அவனுக்கு என்ன செய்யவதென்றே புரியவில்லை பெட்டிப்பாம்பு போல் அடங்கிப்போனான். ஆனால் வந்தவர் விடுவதாக இல்லை ”வெளிய வா உனக்கு சாத்துறன்” எண்டு அந்த இடத்தை விட்டு அகலாமலேயே நின்று கொண்டிருந்தார். அவனுக்கு ஐஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு வாயில் வார்த்தைகளே வர தந்தளித்தது கையால் ”சும்மா தானே நிக்கிறன். நீங்க போங்க” என்பதுபோல் சைகை காட்டினான்.

அவ்வளவு நேரமும் கைப்பிள்ளைகளுடன் தன்ர வீரத்த காட்டியவருக்கு இப்ப கதைக்கவே முடியாத நிலை. பட்ட நோண்டி. தூக்கு போட்டு சாகிற அளவுக்கு பலத்த அவமானம். தலையையே வெளியே காட்ட முடியாமல் அப்பிடியே கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டுவிட்டான். எங்களுக்கு தியட்டருக்கு வெளியிலேயே நல்ல படம் பாத்த திருப்தி. அவனிட்ட சேட்டைக்கு உடனேயே பதிலடி கொடுக்கப்பட்டது. எது நடக்க வேண்டுமென எதிர்பார்த்தோமோ அது அப்பிடியே அச்சொட்டாக நடந்தது.

மேலதிக தகவல்: அந்த எருமையின் பெயர் நர்மதன். கறுப்பான  உயரமானவன். வலது காதில் வளைந்த தோடு போட்டவன். இவனை பற்றி தகவல்தெரிந்தவர்கள் பாத்து  கவனித்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------------
சில படத்துக்கு கொடுக்கும் பில்டப்புக்கள் கூரையை பிச்சுகிட்டு போயி படத்தின் எதிர்பார்ப்புக்களை எகிறவைத்துவிட்டு படம் வெளிவந்த பிறகு அந்த பில்டப்பே படத்துக்கு ஆப்பாக முடிந்து விடுவதுண்டு. என்னைப்போறுத்தவரை அப்படியொரு படம்தான் 7ம் அறிவு. AR.முருகதாஸ், சூர்யா, ஹாரிஸ்ஜெயராஜ், அன்டனி, பீட்டர்ஹெயின் என்று பாரிய நட்சத்திரப்பட்டாளங்கள் சேர்ந்து ஒரு சூப்பர் படம் தருவார்கள் என்று பார்த்தால் நினைத்தது நடக்கவில்லை.


படம்வருவதற்கு முதலே பாடல்காட்சி எடுத்த விதம் என்று போட்ட அலப்பறைகள் எல்லாம் செல்லாக்காசாகின. படத்தின் trailerஐ பார்த்தே படத்தின் கதையை அச்சொட்டாக பலரால் ஊகிக்க முடிந்தமையாலோ என்னவோ படத்தில் thrillingகையோ சுவாரஸ்ய தன்மையையோ கடைசிவரை காணமுடியவில்லை.

நான் படம்பார்த்தபோது படத்தில் பேசப்பட்டிருந்த தமிழ் உணர்வை தூண்டும் இலங்கைக்கு எதிரான வசனங்கள் நீக்கப்பட்டிருந்தன. இலங்கையில் வெளியிட்ட முதல் காட்சிகளிலேயே இவை அகற்றப்பட்டிருந்தனவா என்பதை முதல்காட்சிகள் பார்த்தவர்கள் யாராவது சொல்லுங்கள். இவ்வசனங்கள் உள்ள காட்சிகள் முகப்புத்தகத்தில் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. யாராவது பார்க்காமல் தவறவிட்டிருந்தால் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்திலே சொல்லப்பட்ட, சொல்லவந்த விடயங்கள் பாராட்டுதற்குரியது. துணிச்சலுக்குரியது. பழைய வரலாற்றையும், தமிழர் பெருமைகளையும் மக்கள் மறந்து விடக்கூடாது என்ற நல்ல செய்தியை படம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறது. ஆனால் பொழுதுபோக்கு ஊடகமாக மாறிவிட்ட இந்த சினிமாத்துறையில் படம் ஒன்று வெற்றிபெற, மக்கள் மனதில் நிலைத்துவிட பல விடயங்களிலும் மிகவும் கரிசனையாக இருந்திருக்கவேண்டும். Memento படத்தை ஆட்டையை போட்டு ”கஜினி” படத்தை முருகாஸ் தந்திருந்தாலும் அதில் screenplayல் தனது தனிமுத்திரையை பதித்திருந்த இவரால் 7ம் அறிவில் அதன் 20%ஐ கூட தரமுடியவில்லை. தீனா, ரமணா, கஜனி என்று ஹட்ரிக் அடித்த இவர் இந்த படத்தில் சறுக்கியது சூர்யா ரசிகனாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டே ஆகவேண்டிய ஒன்று.(படம் வெல்கிறதோ வெல்லாமல் விடுகிறதோ அது வேறு விடயம்)


படத்தின் ஆரம்ப காட்சிகள் நன்றாக அழகாக எடுக்கப்பட்டிருந்தாலும் கதை சொல்லப்படுவது போல் (like documentary film) எடுக்கப்பட்டிருந்தமை Discovery channel programஐ பார்ப்பதை போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அது ஆரம்பத்திலேயே படத்தின் slowness உணர்வை ஏற்படுத்திவிட்டிருந்தது. அதிலும் தாங்கமுடியாம ”போதிவர்மன் யார்? உங்களுக்கு தெரியுமா?” என்று பொதுமக்களை கேட்பதை கூடி படத்தில் புகுத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது. தாங்கள் படம் எடுப்பதற்கு இவ்வளவு study & work பண்ணியிருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லவே இதை புகுத்தியிருப்பதாக உணர முடிகின்றது.

6பக்ஸுடன் சூர்யா

படத்திற்கு தேவையான கதையை, அதன் கோர்வைகளை நன்றாக ஆராய்நது கஸ்டப்பட்டு எமக்கு தெரியாத வரலாற்றை அறிந்தே முருகதாஸ் உருவாக்கியிருக்கிறார் என்பது உண்மை. ஆனால் தான் அறிந்ததை அப்பிடிய சொல்லிடோணும் என்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு Over confidenceல் திரைக்கதையில் சொதப்பிவிட்டார் AR.முருகதாஸ். 6வருடங்களாக புதிதாக படம் எடுக்காமல் (இந்தி கஜினி தமிழின் றீமேக் அதை புது படமாக கருத முடியாது) இருந்த இவரால் எல்லாவற்றிலும் கரிசனையெடுத்து சிறப்பாக ஒரு படத்தை தரமுடியாதது சூர்யா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே.

படத்தில் வரும் ஆரம்ப சண்டைக்காட்சிகளும், டொங்லீயாக வரும் ஜொனி றீநிகுயேன் (Johny TriNguyen) தோன்றும் action காட்சிகளும், மற்றைய சில சண்டைக்காட்சிகளும் பிரமாண்டத்தை ஏற்படுத்த முயன்றிருக்கின்றது. ஆனால் இவர்கள் கொடுத்த ஓவர்பில்டப்பிற்கு ஏற்ற மாதிரி ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.
Johny TriNguyenk (Dong Lee)

போதிதர்மராக வரும் சூர்யா இன்னும் அசத்தியிருக்கலாமோ என எண்ண தோன்றுகிறது. மற்ற சூர்யா வழமைபோல. ஸ்ருதியின் பின்னால் சுற்றும் காட்சிகளில் வாரணம் ஆயிரம் போலவே யதார்த்தமாக நடித்திருந்தார். ஆனால் இன்னும் சூர்யாவை திறமையாக பல இடங்களில் பயன்படுத்தியிருக்கலாம். தமிழில் இந்த படத்திலேயே ஷ்ருதிஹாசனும்  வியட்நாம் நடிகர் Johny TriNguyenkம் அறிமுகமாகின்றனர்.


ஷ்ருதிஹாசன் சில இடங்களில் அழகாக தெரிகிறார். ஆனால் பல இடங்களில் அப்பிடி தெரியவில்லை. உயரமாக இருக்கிறார். தலைமயிர் டோப் போட்டுவிட்டமாதிரி செயற்கைதனமாக தெரிகிறது. வருகிறார் ஓரளவு நடிக்கிறார். குற்றம் சொல்வதற்கில்லை. Johnyக்கு பெரிதாக வசனங்கள் இல்லாதபடியால் தனது Smartnessஆலும் Body Languageஆலும் தேவையானதை செய்துவிடுகிறார். இந்தப்படத்தில் தியட்டரில் பலத்த ஆரவாரம் இவருக்குதான் கிடைக்கிறது. சிறிய சிறிய காட்சிகளில் வந்து போகும் குள்ளர் பக்ருதான் படத்தில் வரும் ஒரிரு நகைச்சுவைக்கு காரணம். படம் சுவரஸ்யமாக செல்வதற்கு குறைந்தது நல்ல நகைச்சுவை நடிகரையோ அல்லது படஓட்டத்துடனேயோ(கஜினி போல்) நகைச்சுவைகளை சேர்த்திருக்க வேண்டும்.

படத்தின் பாடல்களும் எதிர்பார்த்த அளிவில் பெரிய ஹிட் ஆகாத நிலையில் மீண்டும் ஹாரிஸ் அரைச்சமாவையே திருப்பி அரைப்பதாகவும் வேறு பாடல்களை சுட்டுதான் பாடல்களை போடுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டு இந்த பாடல்கள் வெளியிட்டபின்னரும்  அதிகரித்தே காணப்பட்டது. இளவட்டங்களுக்கு பிடித்த பாடலாக SPB பாடிய ”யம்மா யம்மா” என்னும் காதல் தோல்வி பாடல் அமைந்துவிட்டிருந்தது. வீர உணர்ச்சியை விதைக்கும் பல்ராம் பாடிய ”இன்னும் என்ன” பாடலும் பலரது வரவேற்பை பெற்றிருந்தது.


Oh Ringa Ringa பாடலிற்கு பல dancersஐ விட்டு ஆடவிட்டு படமாக்கியது ஒரு ஒழுங்கற்று குப்பையாக அசிங்கமாக இருந்ததுடன் இவ்வளவு பேர் ஆடினார்களா? என்பது ஒழுங்காக ஒளிப்பதிவில் தெரியவில்லை (பாடல்கள் உருவான விதத்தில் அவர்கள் சொன்னதை வைத்தே பிடிக்க முடிந்தது). ஒளிப்பதிவாளர் ரவிசந்திரன் ஒருக்கா இரண்டு தரம் மட்டும் சற்று உயரத்திலிருந்து சரிவாக ஒளிப்பதிவு செய்திருந்தார். பல நேரங்களில் கிடையாக ஆடுவோருக்கு பக்கத்திலயே எடுத்து அனைவரையும் ஒருசேர lensற்குள் கொண்டுவர தவறியிருந்தார்.


அதுபோலவே ”யம்மா யம்மா” பாடலுக்கும் சூர்யாவை மட்டும் தெளிவாகவும் சுற்றியுள்ள காட்சிகளை blurred ஆக வித்தியாசமான  lensஐ பயன்படுத்தி எடுத்த பாடல் காட்சியும் சொதப்பிபோய் விட்டிருந்தது. பெரும்பாலான இடங்களில் சூர்யாவும் சேர்ந்தே blurredஆகியிருந்தார். ஆனால் ”யெல்லேலமா” பாடல்காட்சி எடுக்கபட்ட விதம்  நன்றாக இருந்தது. ”முன் அந்திசாலை” பாடலிற்குரிய காட்சியமைப்பும் எதிர்பார்த்த அளவு வரவில்லை. இன்னும் சிறப்பாக இயற்கை அழகுடன் எடுத்திருக்கலாம்!
AR.Murugadas + Udhyanithi Stalin + Surya

நல்ல விடயங்களை வித்தியாசமாக, உணர்வோடு சொல்லவந்த AR.முருகதாஸை பாராட்டலாம். எனினும் இன்னும் காத்திரமான வகையில் மக்களை படத்தோடு கட்டிப்போடும் வகையில் சொல்லியிருக்கலாம். கொடுத்தபில்டப்புக்கும் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பையும் ”7ம்அறிவு” திருப்தி செய்யவில்லை. A, B சென்ரர் ரசிகர்கள் படத்தை விரும்பி பார்த்தாலும் Cசென்ரர் ரசிகர்களிடத்தே இந்தப்படம் பெரிய வரவேற்பை பெறுமா எனபது மிகப்பெரிய கேள்வி. மொத்தத்தில் இந்தப்படமும் ”பரவாயில்லை” ரகம்தான்.

ஆனால் ”வேலாயுதம்” ”7ம்அறிவு” இரண்டிற்குமிடையிலான போட்டியில் வேலாயுதம்தான் 7ம் அறிவைவிட நகைச்சுவைகள் மூலம் கவர்ந்து,  மக்களை ஜாலியாக வைத்திருந்து ஒரு படி மேலே நிற்கிறது என்பது பொதுவான கருத்து. C சென்ரர் ரசிகர்களின் அமோக ஆதரவு வேலாயுதத்திற்கான அதிக பலம். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக படங்களை விரும்புவோருக்கு நிச்சயம் வேலாயுதத்தைவிட 7ம் அறிவு கூடுதலாக பிடிக்கும். 

வேலாயுதம் - திரைப்பார்வை (Not from Vijay's Fan)

டிஸ்கி1: மேலே தலைப்போட அடைப்புக்குறிக்கு ”Not from Vijay's Fan” எண்டு போட்டது, கடும் சினிமா விரும்பி எழுதுற பதிவா இதை எடுத்துக்கொள்ளவே  ஆனா நான் விஜய்க்கு ஒருபோதும் எதிரானவனோ விரும்பாதவனோ இல்லை. அப்பிடி டவுட் இருந்தா எனது காவலன்-அதிரடி வெற்றி நோக்கி திரைப்பார்வையை ஒருக்கா பாருங்கோ.

டிஸ்கி2: வேலாயுதம் trailerஐ பாத்து இது பழைய மசாலாதான் எண்டு  ஊகித்த போதும். VIP showகளை பாத்திட்டு வந்தாக்கள் Mass Entertainment Movie, Super Duper Hit எண்டு கொடுத்த ஓவர்பில்டப் சவுண்டுகளை கேட்டுட்டு கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்துதான் படம் பாக்க போனனான். So அவற்றின்ர தாக்கங்கள் எனது விமர்சனத்தில் இருக்க கூடும். 


அஜித்தின் ”மங்காத்தா”வுடன் போட்டியாக வெளிவரும் என கருதப்பட்டு, பிறகு நன்றாக திட்டமிடப்பட்டு வசூலை தீபாவளிக்காலத்தில் அள்ள Remake-King இயக்குனர் ராஜாவால் களமிறக்கப்பட்ட படம்தான் இந்த வேலாயுதம். இளைய தளபதி விஜய், ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன், சாயாஜிசிண்டே + இன்னும் பல நட்சத்திர பட்டாளங்களுடன் வழமையான விஜயின் படங்களிற்குள்ள எதிர்பார்பை போல் (அதயும் விட கூட) எதிர்பார்ப்புடன் இலங்கையிலும் இந்தியாவிலும் தீபாவளிக்கு முதல் நாள் பின்னேரமளவிலேயே விசேட காட்சிகளாக வெளிவந்திருந்தது. வேலாயுதம் தீபாவளியன்று இலங்கையில் ஈரோஸ் திரையரங்கில் முதல் காட்சியில் வேலாயுதத்தை பாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

விஜயின் முந்தைய படம் காவலன் action இல்லாத, காதல் படமாக வந்து அனைவரையும் ஆகா ஓகோ எண்டு சொல்லவைத்து விஜயின் ரசிகர் இல்லாதோரையும் அவரை வியந்து பார்க்க செய்திருந்தது. ஆனால் இந்தப்படம் ஒரு typical vijayன் action மசாலா படமாக இருக்கும் என தெரிந்திருந்தபோதும் எதாவது வித்தியாசமாக இதில் செய்வார்கள்/ சொல்வார்கள் என என்னைபோல சாதாரண சினிமா ரசிகர்கள எதிர்பார்த்திருந்தனர். எதிர்பார்ப்பை டபுள் மடங்கு திருப்தி செய்யும் விதமாக முதலாவது பாதி அட்டகாசமாக சிரிப்பு வெடிகளுடனும் அதிரடி பாடல்களுடனும் ஒரு தொய்யலோ அலுப்பே இல்லாமல்  சென்று எமது எதிர்பார்பையும் இன்னும் எகிறவைத்தது. விஜய், சந்தானம், MS.பாஸ்கர், சூரி, சிங்கமுத்து என்று அனைவரும் தங்கள் பங்கிற்கு படத்தின் ஓட்டத்தை(flow) குறைய விடமால் செய்து கலக்கியிருந்தனர். 

Comedian Soori
இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம், நடிகர் சூரியை தற்போதைய அனேக படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் காணமுடிகிறது. ”வெண்ணிலா கபடிக்குழு”வில் நடித்த மற்றையவர்கள் அடைந்த பிரபலத்திலும்/ வாயப்புக்களையும் விட இவர் அதில் பறோட்டா சாப்பிட்டு உலகளாவிய ரீதியிலேயே பிரபலமாகிவிட்டார். இவரது மிகப்பெரிய பிளஸ் பாயிண்டு இவரது குரலிலுள்ள ஒரு யதார்த்தமான நழுவல்தன்மையான தொனிதான். இதிலும் அலட்டலில்லாமல் கலக்கி தனது எதிர்கால வாய்ப்புக்களை இன்னும் அதிகமாக்கிவிட்டார்.

காமெடிகளில் Rhyming கலந்த காமெடிகளும் இந்த படத்தில் கூடுதலாக காணப்பட்டிருந்தது. படத்தில் ஹன்சிகாவை ஏன் போட்டார்கள்? வேறு ஆக்களா இல்லை?. குண்டுப்பிசாசு போல வரும் இதை கட்டாயம் ஜிம்முக்கு போய் at least வயிறயாவது குறைக்கச்செய்யவேண்டும். அஜித்துக்கு வண்டி இருந்தா சகிக்கலாம் ஏனெண்டா அவர் Hero, ஹீரோயினுக்கு இருந்தா என்ன செய்யுறது? கொஞ்சம் வடிவான முகவெட்டு இருக்கிறதுபோல இருந்தாலும் அதிக எடையால் பல இடங்களில் அசிங்கமாக இருக்கிறார். ஏன் ராஜாவுக்கு வேற ஆக்கள் கிடைக்கலையா? வழமைபோல் ஜெனிலியா அழகாக அடக்கமாக ஜொலிக்கிறார். இந்த படத்திலயே எனக்கு பிடிச்ச ”முளைச்சு மூணு இலையே விடல” பாடலுக்கு trailerஐ பாத்து தனிய ஜெனிலியா தான் வருவா எண்டு பாத்தா அதில ஹன்சிகாவையும் போட்டு பாட்டையே கேவலப்படுத்திவிட்டார்கள். என்னுடன் படம் பார்த்த என் நண்பர்களும் இதையேதான் சொன்னார்கள். அவர்களுக்கு ஹன்சிகாவை கண்ணிலயும் காட்டேலாது.

முதல்பாதி படத்தின் கதைக்கு தேவையான ஆரம்ப கட்டவேலைகள் தான் போய்க்கொண்டிருந்தமையால் கதை ஓட்டத்துடன் யதார்த்தமாக நகைச்சுவைகளை அள்ளிக் கொட்ட முடிந்திருந்தது. ஆனால் 2ம் பாதியில்தான் கதைக்கு உரிய முக்கியமான அதிரடி அக்சன் வேலைகள் களை கட்டியமையால் முதல் பாதி போல் நகைச்சுவைகள் அதிகமாக இல்லாது  சொல்லவந்த கதையை சொல்லி முடிக்கும் வேலையை மறக்காம செய்திடோணும் என்ற போக்கில் இயக்குனர் ராஜா அப்பட்டமாக சொதப்பியிருப்பது தெரிகிறது. ஆரம்பத்தில் கதை தெரிவில் விட்ட பிழைதான் இது.
உண்மையில் படம் தொடங்கியபோது இயக்குனர் ராஜா சொந்தக்கதையில் (றீமெக் இல்லாது) எடுக்கும் முதல்படம் என்று பேச்சடிபட்டிருந்தது எனினும் இடையிலேயே இது தெலுங்கு படமான ”ஆசாட்”இன் தழுவல் என்று தெரியவந்தது. இயக்குனர் ராஜா கதையில் மாற்றங்களுடன்தான் வேலாயுதம் தயாராகிறது என அப்போது தெரிவித்திருந்தார். ஆனால் படத்தின் தேவையான conceptஅவ்வளவும் அப்பிடியே உருவப்பட்டிருப்பதாகவே எனது நண்பர்கள் சொன்னார்கள். என்னனென்ன மாற்றங்களுடன் படம்வந்திருக்கிறதென்பது ஆசாத் பாத்தவர்களுக்கே வெளிச்சம். ஆக மொத்தத்தில் இயக்குனர் ராஜா Remake படத்தை விட்டிட்டு சொந்தமா யோசிச்சு படம் எடுக்கிறது சூரியன் மேற்கில உதிச்சாலும்  வராது போலதான் கிடக்கு. 


என்னதான் remakeஆ இருந்தாலும் இதே மாதிரி கதைகள் ஏற்கனவே பல வந்துவிட்டதால் 2ம்பாதி பெரும்பாலும் சலிப்பாகவே விஜய் ரசிகராக இல்லாதவர்களுக்கு இருந்துவிட்டது. சில serious காட்சிகளையும் பகிடியாக்கி அசத்தியிருந்தாலும் (”நான் எங்க குதிரையில வந்தன். குதிரைதான் என்ன தூக்கிட்டு வந்தது” என்று விஜய் சொல்லும் காட்சி இதற்கோர் உதாரணம். இதை பாக்கும்போது விஜய் தனது பழைய Over buildஐ குறைத்து விட்டார் என்றே சொல்ல தோணுகிறது.)  இயக்குனர் ராஜா அரைச்சமாவான பழைய கதையை  மீண்டும் தூக்கி படத்தை கெடுத்துவிட்டார். 

அப்பிடியே முதல்பாதியை போலவே பகிடியாக கொண்டு சென்றோ (அது நிச்சயமாக விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தாது என்பதால் சாத்தியமே இல்லை என்று நீங்கள் சொல்வது புரிகிறது) அல்லது நல்ல ஒரு அக்சன் thriller storyயையாவது புகுத்தி படத்தை நகர்த்தியிருக்கலாம். அப்படி செய்திருந்தால் ”படம் மக்ஸா  சான்ஸே இல்லை” என்று அனைவரும் சொல்வதை யாராலும் தவிர்க்க முடியாது போயிருக்கும். 

Director Raja, Hanshika, Saranya & Vijay
படத்தில் பாடல்கள் பலரை முதலே கவர்ந்திருந்திருந்தது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான். (ஆனால் வேட்டைக்காரனுக்கு விஜய் அன்ரனி கொடுத்த அதிரடி பாடல்களுடன் ஒப்பிடும்போது ஒரு40% கூட வேலாயுதம் பாடல்களில் இல்லை என்பது எனது கருத்து). ஆனால் வழமையான விஜய் படபாடல்கள் போல அனைத்து பாடல்களும்  எவ்வாறோ ஹிட் அகிவிட்டிருந்தது. உண்மையில் எனக்கு பிடிக்காமல் இருந்த பாடல்கள் கூட dTs ஒலிநயத்துடன் சத்தமாக கேக்கும்போது மிகவும் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன். 

ஒரு பாடலும் வெளிநாடு சென்று படமாக்கப்படவில்லை போலதான் தெரிகிறது. ”மாயம் செய்தாயோ” பாடல் எடுக்கப்பட்ட விதமும் செட்டும் எடிட்டிங்கும் விஜயின் costumes and style அற்புதமாக இருந்தது. Editor VT.விஜயன் நன்றாகவே பாடுபட்டிருந்தமை அதில் தெரிகிறது. Chillaxபாடல் என்று நினைக்கிறேன் அதில் விஜயின் ஆட்டம் வழமைபோல் Super.

மொத்தத்தில் வேலாயுதம் விஜய் ரசிகர்கள் இல்லாதவர்களுக்கு ”பரவாயில்லை- Average" ரகப்படம்.  விஜய் ரசிகர்களுக்கு  நல்ல-Good படம்.
சுறா மாதிரி படங்களே Collectionல பரவாயில்லாம போன படியா இந்தப்படம் நிச்சயம் collectionல அள்ளும்.

வந்தான் வென்றான் (கவிண்டான் விழுந்தான்) - திரைப்பார்வை

என்னைபொறுத்தவரை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிச்சயமாக சொதப்பாது என்று கணிக்கப்பட்ட படம்தான் இந்த ”வந்தான் வென்றான்”. அதற்கு முக்கிய காரணமாக இருப்பார் என கணிக்கப்பட்டவர் படத்தின் இயக்குனர் ”கண்ணன்”தான். இயக்குனர் மணிரத்தினத்தின் சிஷ்யப்பிள்ளையான இவர் தனது முதல் படமாக கொடுத்த ”ஜெயம் கொண்டான்” வர்த்தகரீதியாக ஹிட் இல்லாவிடினும் பல மக்களின் பாராட்டைப்பெற்றிருந்தது. அதற்கு பின் இவர் "கண்டேன் காதலை" எனும் Re-Make படத்தை இயக்கினார். இந்தப்படம் வர்த்தகரீதியில் நல்ல வெற்றியை பெற்றது. இவர் இரண்டு படங்களை கொடுத்திருந்தாலும் ”வந்தான் வென்றான்” படத்தின் எதிர்பார்ப்பு ”ஜெயம் கொண்டான்” படத்தின்மூலமாக எனக்கு அதிகரித்திருந்தது.


 இயக்குனரை தவிரவும் அண்மைக்காலத்தில் மிகப்பிரகாசமான தமிழ் சினிமாவின் நாயகனாக மாறிவரும் ஜீவா [கோ படத்திற்கு பின் இவர் சங்கரின் நண்பன், கௌதமின் நீதானே என் பொன் வசந்தம் என்று இப்பவே எதிர்பார்ப்புள்ள படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது], ஆடுகளத்தின் பின் நாயகி தப்சி, ஈரத்திற்கு பின் மீண்டும் மாறுபட்ட பாத்திரத்தில் நந்தா, கலாய்க்க சந்தானம் என்று நடிகர்கள் ஆளுமையுள்ளவர்களாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.  

ஜீவா கண்ணன் தப்சி
 ஆனால் வெளிவருவதற்கு முன்னதாக போதியதாக இந்தப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடம் போய் சேரவில்லை. ஏன் பலருக்கு இந்தப்படம் நேற்றுதான் (2011-09-16) திரையிடப்படுகின்றதென்பது கூட தெரிந்திருக்கவில்லை. எனினும் இந்தப்படம் தொடர்பான பேச்சு படம் வெளிவர முன் மக்களிடம் எழ முக்கிய  காரணமாக இருந்தவர் படத்தின் இசையமைப்பாளர் ”தமன்”தான் என்பதில் மறுபேச்சுக்கே இடம் இல்லை. 

இவரது திரையுலக பயணத்தின் முக்கிய மைல்கல் அல்பமாக இது இருந்துவிட்டது. ”காஞ்சனமாலா”, "அஞ்சனா”, ”திறந்தேன் திறந்தேன்” என மூன்று பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ரகமாக பாடல்கள் வெளிவந்து பலரை கொள்ளையடித்திருந்தது. எனவே படமும் எப்பிடியும் நல்லாயிருக்கும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் இருந்தாலும் அதை அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டார் இயக்குனர். படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றில்  சந்தானம் "TRAILER பாத்திட்டு படம் நல்லாயிருக்குமெண்டு நினைச்சிருப்பியே. ஆனா அப்பிடி இல்லை” எண்டு வேறோர் விடயத்திற்கு சொல்வது இந்தப்படத்திற்கு 100% பொருந்திவிட்டது.


அப்பிடி இப்பிடி என்று சலிப்பூட்டும் காதல் காட்சிகளுடன் செல்லும் முதல்பாதி பின்னர் ஏனோதானோ என்று ஒரு யதார்த்தமே இன்றி காட்சிகள் ஒழுங்காக பின்னப்படாது சென்று ஏதோ முடிகின்றது. படத்தில் பாடல்களையும் சந்தானத்தின் நகைச்சுவையையும் தவிர சொல்வதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. நிழல்கள்ரவி, மனோபாலா, ரகுமான் என்று நல்ல நடிகர்களுக்கு சிறுபாத்திரங்களை மட்டும் வழங்கி படத்தில் அவர்களும் இருந்தார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளார் இயக்குனர். படத்தில் தப்சி ஒரு வேஸ்ட்டு சொப்சி. சும்மா வெள்ளையடிச்சுவிட்ட உருவ பொம்மை மாதிரி வந்து போகிறார். நடிக்கவும் தெரியவில்லை அழகாகவும் இல்லை. சும்மா அவிச்ச றால் மாதிரி மட்டும் இருக்கிறார்.

நந்தா கொடுத்தவேலையை செய்கிறார் ஆனால் படத்தில் ஒழுங்கான கதையோ at least சுவரஸ்யமான திரைக்கதையோ இல்லாமையால் சும்மா வீணடிக்கப்பட்டுவிட்டார். ரௌத்திரத்திற்கு பிறகு ஜீவாவிற்கு இது மீண்டும் ஒரு சறுக்கலாக இருக்கும். பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ”காஞ்சனமாலா” பாடல் காட்சி எடுக்கப்பட்டவிதம் அழகாக ரசிக்ககூடியதாக இருக்கிறது. முதல் பாடலான ”ஏஞ்ஜோ” பாடலில் இசையமைப்பாளர் ”தமன்” டரம்ஸ் வாத்தியத்துடன வருகிறார். Base Guitar உடன் பாடகர் அலாப் ராஜுவே வந்தார் என நினைக்கிறேன். யாரும் தெரிந்தால் உறுதிப்படுத்துங்கள்.

”வந்தான் வென்றான்” எனது குறைந்தளவு எதிர்பார்ப்பை கூட திருப்தி செய்யவில்லை. நேரம் கிடைத்தால் சும்மா பார்க்கலாம் ரகம் படம் அவ்வளவும்தான்.

மங்காத்தா (Tasty ”மங்கோ”) - திரைப்பார்வை

டிஸ்கி: வழமைபோல படத்தின் ஒரு துளி கதையும் இதில் சொல்லப்படவில்லை. நான் அஜித்தின் ரசிகனோ விஜயின் எதிர்ப்பாளரோ இல்லை. நான் ஒரு சூர்யா ரசிகன்.

இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் படம் தொடங்கிய காலத்திலேயே அதிகரித்திருந்தமைக்கு இருவர் மட்டுமே காரணமாக இருந்திருந்தனர். இவர்களில் முக்கியமானவர் ”தல” அஜித் மற்றையவர் இளவட்டங்களின் அபிமான இயக்குனர்களில் ஒருவராகியுள்ள வெங்கட்பிரபு. ஒரு மாஸ் ஹீரோ, பல ரசிகர்களின் அபிமான நடிகராகவுள்ள அஜீத் நடிக்கும் எந்தவொரு (யார் இயக்குனர் என்று பார்க்காமல் கூட) படத்திற்கும் எதிர்பார்ப்புகள் அபரிமிதமாக கிளம்புவது வழமை அது தவிர்க்கமுடியாததும் கூட. அதேபோல் மங்காத்தா படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது கடந்த படங்கள் மூலம் பெற்ற  நன்மதிப்பு போன்ற 2முக்கிய காரணங்களால் ”மங்கத்தா” படம் ஆரம்பித்த காலத்திலிருந்து  இந்தப்படம் பற்றிய எதிர்பார்ப்புக்கள் பலதரப்பட்ட இடங்களில் பேசப்பட்டு வந்திருந்தது. 


இவர்கள் இருவர்தான் படத்தின் தூண்களாக ரசிகர்களால் ஆரம்பத்தில் பார்க்கப்பட்டாலும் வெங்கட்பிரபுவுடன் வழமைபோல் இணையும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரம் இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா படத்தின் எதிர்பார்ப்புக்களை படம் வருவதற்கு இரண்டு மாத்திற்கு முன்பிருந்து, இன்னும் பல மடங்காக அதிகரித்திருந்தார். பாடல்கள் வந்து ஒரு மாதம் கூட முழுதாக ஆகாத போதிலும் ஏலவே ஒரு பாடல் வெளிவந்தகாலத்திலிருந்தே பாடல்கள் மற்றும் படம் பற்றிய பேச்சுக்கள் பலமாக அனைத்து தரப்பிலிருந்தும் எழ ஆரம்பித்திருந்தது. தரமான ஒலித்தெளிவு + ஒழுங்கமைப்பான இசை + பலராலும் ரசிக்கும் பாடல்கள் மூலம் "மங்காத்தா" பாடல்கள் பலரிடம் வரவேற்பை பெற்றது. மங்காத்தாவின் சில பாடல்கள் முந்திவந்த பாடல்களை நினைவுபடுத்தினாலும் ரசிக்கும் ரகத்தில் அனைத்து பாடல்களும் இருந்தது. 


வெங்கட்பிரபு இயக்கிய சென்னை600028, சரோஜா  வெற்றிப்படங்களிற்கு மத்தியில் ”கோவா” சற்று சறுக்கியிருந்தாலும்  அதுவும் இளைஞர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தது. எனவே ”மங்கத்தா”வும் நிச்சயம் கேவலமாக இருக்காது என்ற மினிமம் கரன்ரியை வெங்கட்பிரபு இந்தப்படத்திற்கு,  படம்பார்க்க முதலேயே ஏற்படுத்தியிருந்தார். அஜித்குமாரின் அண்மைய படங்கள் ”ஏகன்”, ”அசல்” மெகா மொக்கைகளாக இருந்திருந்தாலும் தனது 50வது படமான ”மங்காத்தா” மூலம் அனைத்தையும் நிவர்த்தி செய்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்களுக்கும் இருந்தது. 
வைபவ், வெங்கட்பிரபு, அஜித்
இவை அனைத்தையும் இவர்கள் பூர்த்தி செய்தார்களா? என்று கேட்டால் ஆமாம் என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். அஜித் மட்டுமல்லாது அர்ஜுன், பிரேம்ஜீ, வைபவ், அரவிந், ஜெயபிரகாஷ், லக்ஸ்மிராய், திரிஷா, அஞ்சலி, அண்ரியா என்று பல நன்றாக அறியப்பட்ட நடசத்திரங்களை கொண்டு கோர்க்கப்பட்டு வந்திருக்கின்றது ”மங்கத்தா”. வெங்கட்பிரபுவின் படங்களில் வழமையாக வரும் நடிகர்களே இதிலும் ஏராளம். மிகவும் சிறிய கதைக்கருவை கொண்டு படத்தை சுவாரஸ்யமாக ரசிக்கும்படியாக தேவையான மசாலா அம்சங்கள் அனைத்தையும் கலந்து அடித்து சிறப்பாக கொடுத்து தனது முத்திரைய மீண்டும் பதித்து விட்டார் இயக்குனர். ஆங்கில படங்களிலிருப்பது போலவே படத்தின் கதை செல்வதாலோ என்னவோ படத்தில் உள்ள பல லாஜீக் மீறல்கள் கூடுதலாக உறுத்தவில்லை. 


எனது நண்பன் ஒருவன் கூறியது போல வழமையான வெங்கட்பிரபுவின் படத்தை போலவே பல நடிகர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் காட்சி நேரங்கள் பாத்திர முக்கியத்துவம் பெரும்பாலும்  சமமாகவே உள்ளது. ஏன் அஜீத்துக்கு கூட மற்றவர்களையும்விட கூடுதலான காட்சிகள் என்று இல்லை. அதேபோல் முத்துக்கு முத்தாக 4ஹீரோயின்கள் இருந்தும் வெங்கட்பிரபுவின் முந்தைய படங்களை போல தேவையான குறைவான காட்சிகளுடன் வெறும் டம்மி பீசுகளாக வந்து போகின்றனர். அவர்களுக்கு கதைப்படி முக்கியமான பாத்திரங்கள் எதுவுமில்லை.

பல இடங்களில் அஜித்தின் நடிப்பு நன்றாக இருக்கின்றது. நரைமுடியுடன் அழகாக தெரிகிறார். வழமைபோல கையை மட்டும் வைத்து நடனமாட முயற்சிக்கிறார். படத்தின் முதலில் வரும் சண்டைக்காட்சியில் பெரிய வயிற்றுடன் கஸ்டப்பட்டு தடுமாறி சண்டையிடுவது திரையில் தெளிவாக தெரிகிறது.இந்தப்படத்தில் வரும் தியேட்டர் காட்சி ஒன்றில் ”விஜய்” நடித்த காட்சி ஒன்று காட்டப்படுகின்றது. அதன்மூலம் தாங்கள் இருவரும் நண்பர்கள் என்று அஜித் மறைமுகமாக சொல்ல முயல்வது போல தெரிகிறது. ஆனால் எங்களில சிலதுகள் இன்னும் தல தளபதி எண்டு சண்டை போட்டுக்கொண்டு இருக்குதுகள். ஓய்நதபாடைக்காணவில்லை.

”விண்ணைத்தாண்டி வருவாயா”வில் உள்ள காட்சிகளினதும் கதையினதும் முக்கியத்துவத்தோடு ஒப்பிடும்போது இதில் திரிஷாவே நடிக்கவில்லை எனலாம். சும்மா எழுத்தோட்டத்தில போட்டு ஏமாத்திட்டாங்க சார். த்ரிஷாவைவிட லக்ஸ்மிராயிற்கு காட்சிகள் அதிகம்.(ஒப்பிடும்போது அண்மையில் வெற்றி பெற்ற காஞ்சனா முனி2 ல் கூட லக்ஸ்மி ராயிற்கு குறைவான காட்சிகள் போல்தான் தெரிகின்றது). 

அஜித் திரிஷா லக்ஸ்மிராய்
அஞ்சலி, அண்ரியா படத்தில் இருக்கின்றனர் அவ்வளவுதான். அஞ்சலி ஒரு பாடலிலும் வருகின்றார். பிரேம்ஜி, வைபவ், மகத், அஸ்வின், அர்ஜுன், ஜெயப்பிராகாஸ் போன்றோர் படத்தில் முக்கியமானவர்கள் என்பதால் கூடுதலாக படத்தில் பரவிக்கிடக்கின்றனர். பிரேம்ஜியின் நகைச்சுவைகள் பல சீரியஸான காட்சிகளிலும் வந்து சிரிப்பை வரவழைக்கின்றது. கூடுதலான சண்டைக்காட்சிகள் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். 

யுவனின் இசையாலும் ஒளிப்பதிவாளரின் குளுகுளு காட்சிகளாலும் பாடல்கள் கண்ணிற்கும் செவிக்கும் இனிமையாக இருக்கின்றன. முக்கியமாக இதில் உள்ள அருமையான Theme Music பல இடங்களில் Background scoreஆக பயன்பட்டு ஒரு பிரமாண்ட படம் என்ற தோற்றப்பாட்டை பிரமையை ரசிகர்ளிடத்தே ஏற்படுத்துகிறது. ”வாடா பின்லேடா” பாடல் காட்சியில் எடிட்டரின் பங்கு நன்றாக தெரிகிறது. அந்தப்பாடல் முழுவதும் வெவ்வேறு ஆடம்பர வீடுகளின் உள்ளே எடுத்தது போல் செயற்கையான காட்சிகளாக அமைந்துள்ளன. ஆரம்பத்தில் அந்தக்காட்சிகள் கண்ணிற்கு இனிமையாக அமைந்தாலும் தொடர்ந்து பார்க்கும்போது ஒருவித எரிச்சலை உண்டு பண்ணுவதுபோல தோன்றுகின்றது. ஆனால் ஒருவித்தியாசமான முயற்சியை பாராட்டலாம்.

மொத்தத்தி்ல ”மங்காத்தா” ஒரு சுவையான ”மங்கோ” சாப்பிட்ட திருப்தியை தருகின்றது.  

எனக்கு இந்த பாடலில் பிடித்த வரியையும் பதிந்து விடுகிறேன். 
ஆடாம ஜெயிச்சோமடா! நம்மேனி வாடாம ஜெயிச்சோமடா! ஓடாம ரன் எடுத்தோம்! சும்மாவே உக்கார்ந்து வின் எடுத்தோம்!

பிற்குறிப்பு: மேலே நான் கூறிய கருத்துக்கள் எல்லாம் இது எந்தவொரு மொழி படத்தையும் அப்பிடியே கொப்பி செய்து உருவாக்கவில்லை என்ற கணிப்புடனேயே சொல்லப்படுகிறது. அப்பிடி எதாவது நடந்து இருந்தால் மேலே சொன்னவற்றுக்கு நான் பொறுப்பாளி அல்ல.

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்