வேட்டைக்காரன் ஹிட் ஆகப்போவதற்கான வலிதான 5காரணங்கள்

வேட்டைக்காரன் படம் பற்றி பல கருத்துக்கணிப்புக்கள் ஏலவே வந்துவிட்டாலும் கூட இந்த படம் பற்றி எனது கணிப்பு யாதெனில் விஜயின் ஹட்ரிக் தோல்விக்கு பின் ஒரு வெற்றிப்படமாக இது இருக்கும். குறித்து வைத்துக்கொள்ளுங்கள வேட்டைக்காரன் விஜயின் வெற்றிப்படங்களில் ஒன்று. நான் விஜயின் ரசிகன் அல்ல. உண்மையில் விஜயை எனக்கு பிடிக்காது. இருந்தாலும் சில உண்மைகளை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.



இதோ நான் கூறும் காரணங்கள் 5....

1.மற்றையை நடிகர்களின் படங்களை போலன்றி இந்த படத்தின் விமர்சனபதிவை போட்டு செம ஹிட்டுகளை எடுக்க பதிவர்களும், வேறு பத்திரிகைகாரர்களும், ஏன் விஜயை வைத்து காமடியை போட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்போரும், ஏனையோரும் முதல்நாள் காட்சியை அடிபட்டு பாக்கபோவது உறுதி. எனவே முதல் நாள் காட்சிகள் ஹவுஸ்புல் காட்சிகளாகி நல்ல ஆரம்பத்தையும் போதிய வருமானத்தை ஈட்டிக்கொடுக்க போவது உறுதி. (பல பதிவர்கள் இப்போதே வேட்டைக்காரன் விமர்சனத்தை எழுதி Draftகளில் ஆயத்தமாக வைத்திருப்பதாக கேள்வி)




2.இப்படத்தின் பெயர் ஏலவே வந்த MGR படத்தின் பெயராகையால் விபரம் தெரியாத பெரிசுகள் பல, படத்தின் போஸ்டரையோ பெயரையோ வியம்பரங்களில் கேள்விப்பட்டு பழைய படத்தைதான் திரும்ப போடுறானுகள் எண்டு நினைத்து செல்ல சாத்தியங்கள் இருக்கின்றன.


3.ஏற்கனவே பாட்டுக்கள் விஜய் அன்ரனியின் அதிரடி இசையில் வெளிவந்து சந்து பொந்தெங்கும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இளசுகளுக்கு ஏற்ற செம Fast Beat ல் வந்திருப்பதால் படம் எப்பிடி சொதப்பலா இருந்தாலும் பறுவாயில்லை பாட்டை மட்டுமே தியட்டரில DTSஒலி நயத்துடன் கேட்டு ஆட்டம் போட்டா காணும் என்று இளசுகள் கூட்டம் கனக்க திரியுதுகள். (வேட்டைக்காரன் படம் எடுக்கும் தியட்டர்கள் இப்பவே ஆசனங்களை சரிசெய்ய காசை ரெடி பண்ணி வைச்சிருப்பது நல்லது பாடல் காட்சிகளுக்கு குத்தாட்டம் போட்டு பத்தையும் பலதையும் சேதப்படுத்த ஆயத்தமாக குஞ்சு குருமன்கள் தொடங்கி கிளடுகள் கட்டைகள் எல்லாம்.)







4.படத்தில் நாயகியாக அருந்ததி புகழ் அனுஷ்கா. ஏற்கனவே இப்படத்திற்கான இவரின் சூடான ஸ்ரில்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் ஹிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு புதிய அழகுப்பதுமை அனுஷ்காவை
பார்க்கவென ஒரு கூட்டம் தியட்டரை நிறைக்க போவது உறுதி.


5.இயக்குனராக இப்படத்தில் அறிமுகமாகிறார் தரணியின் சிஷ்யன் பாபுசிவன். இது இவரின் முதல்படமென்பதால் படத்தை எப்படியாவது வெற்றியடையச்செய்து தனது தடத்தை திரைத்துறையில் ஸ்திரமாக பதியசெய்ய இயக்குனர் கஷ்டப்பட்டு உழைத்திருப்பார். எனவே எல்லாரையும் திருப்தி செய்யும் வகையில் இப்படம் இருக்கும் என்பது பலரின் கருத்து.


இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு-2

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு-2


இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)
காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை(13-12-2009 )




நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • புதிய பதிவர்கள் அறிமுகம்
--- சென்ற சந்திப்புக்கு வராதவர்கள் மாத்திரம் தங்களைப் பற்றிய சிறு அறிமுகம்
  • கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
--- பதிவுகளின் தன்மை, எவ்வாறது இருக்கவேண்டும், அதன் வீச்சு, தாக்கம், எவ்வாறதை மேம்படுத்துவது போன்றன.
  • கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள் குறித்தான பார்வை
--- காத்திரமான பின்னூட்டம், பயன்தரு பின்னூட்டம், தனிநபர் தாக்குதல் பின்னூட்டம், அநாமதேயப் பின்னூட்டம், பின்னூட்டங்களுக்கான எமது தயார்படுத்தல், பின்னூட்டக் கடமை மற்றும் கயமை போன்றன
  • சிற்றுண்டியும் சில பாடல்களும்
--- வாய்க்குச் சுவையாக சில பலகாரஙகள், செவிக்கினிமை சேர்க்க சில பாடல்கள்


  • கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்துவது?
--- குழுமத்தை எவ்வாறு பாவிக்கவேண்டும், எவ்வாறு பாவிக்கக் கூடாது
  • கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
--- பதிவெழுதுதலில் பெண்களுக்கிருக்கக்கூடிய பிரச்சினைகளும் இருந்தால் தீர்வுகளும், குறிப்பாக இது இலங்கைத் தமிழ்ப் பெண்பதிவர்களைப் பற்றியதாக இருக்கும்
  • பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
--- கலந்துகொள்ளும் பதிவர்கள் சில குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுவாரசியமான போட்டி நடாத்தப்படும். வெல்லும் குழு புகைப்படத்தினுள் அடக்கப்பட்டு முடியுமெனின் பரிசுடன் சந்திப்பின் பின்னான பதிவுகளில் சிலாகிக்கப்படும்
  • உங்களுக்குள் உரையாடுங்கள்
--- கதைக்க விடயம் இல்லையெனும் வரை பதிவர்கள் மாறி மாறித் தங்களுக்குள் கதைத்து, சிரித்து மகிழ்தல்


இப்பதிவு இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்திலுள்ள மின்னஞ்சலை அப்படியே காப்பி செய்து பதியப்பட்டது

Expose 2009 – தொழில்நுட்ப கண்காட்சி

இலங்கையில் முதல் நிலையில் உள்ளதோடு மட்டுமன்றி, ஆசியாவிலும், ஏன் உலகவரிசையிலும் முன்னணியில் உள்ள பல்கலைக்கழகமாக பலராலும் அறியப்பட்ட பெருமையை கொண்ட பல்கலைக்கழகம்தான் மொறட்டுவைப்பல்கலைக்கழகம். கொழும்பு மாநகரத்திலிருந்து சற்று தள்ளி இயற்கையான, அமைதியான சூழலில் அமைந்திருந்து பற்பல மாணவர்களின் அறிவுதேடலுக்கு போதியளவு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது இப்பிரசித்தமான கலாசாலை.

 Department of Electronics & Telecommunication Engineering building

இம் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் பொறியியல் துறை (Electronics & Telecommunication Engineering) ஒவ்வொரு ஆண்டும் மிகப்பிரமாண்டமாகவும், பெருமையோடும், சிறப்போடும் நடாத்தும் தொழில்நுட்பம் சார்ந்த கண்காட்சிதான் எக்ஸ்போஸ்(Expose). சரியாக 40ஆண்டு காலமாக வெற்றிநடை போடும் Electronics & Telecommunication Engineering வருடம்தோறும் புதுமைபடைக்கும் திறமைகொண்ட 100பொறியியலாளர்களை உருவாக்கி, தற்போதைய காலகட்டத்தில் முதல் இடத்தை தனதாக்கியுள்ள பொறியியல் துறை என்பது குறிப்பிடத்தக்கது.

2009ற்கான உத்தியோகபூர்வ இலட்சிணை

இந்த வருடமும் வழமைபோல இக் கண்காட்சி "beyond imagination"  என்ற தொனிப்பொருளில் மிகவும் சிறப்பாக டிசெம்பர் 10ம் திகதி முதல் 13ம் திகதிவரை இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் பொறியியல் கட்டிடதொகுதியில் நடாத்தப்படவுள்ளது. அனுமதி அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளமையால் பெருந்தொகையான மக்கள் இதன் மூலம் பயனடையப்போவது வெளிப்படை. இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொடர்பான தற்போதைய நிலை, தொழில்நுட்பங்கள் பற்றிய இலகுவான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளது.

கண்காட்சி நடைபெறும் நாட்கள் காலை, மாலை என இரு காலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கேற்ப சிறப்பு நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்படுகிறது. அது தொடர்பான விபரங்கள் கீழே தரப்படுகிறது.

10 December காலை கண்காட்சி தொடக்க வைபவம்
                        மாலை ரோபோ காட்சிப்படுத்தல், E-juniors

11 December காலை ரோபோ காட்சிப்படுத்தல், E-juniors
                        மாலை ரோபோ காட்சிப்படுத்தல், E-juniors

12 December காலை Techfest iNexus சர்வதேச ரோபோ போட்டி
                        மாலை E-merge

13 December காலை ரோபோ காட்சிப்படுத்தல்
                         மாலை பரிசளிப்பு வைபவமும் நிறைவு நிகழ்வும்.


இக்கண்காட்சியில் உள்வாரி, வெளிவாரி மற்றும் வேறுபல்கலைக்கழக, உயர் கல்வி நிறுவன மாணவர்களின் இலத்திரனியல், தொலைத்தொடர்பாடல், Bio medical Engineering, Robotics and Image processing பிரிவுகளுடன் தொடர்புடைய பல projects கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

Techfest – iNexus சர்வதேசரீதியிலான ரோபோ போட்டி இரண்டாவது முறையாக இக்கண்காட்சியில் 12ம் திகதி நடாத்தப்படவுள்ளது. Techfest – iNexus ரோபோ போட்டியில் பங்குபற்ற விருப்பமான இலங்கையை சேர்ந்த போட்டியாளர்கள் இக்கண்காட்சியில் போட்டியிடவுள்ளனர். இதில் வெற்றிபெறும் அணிகள் ஜனவரி 22-24ம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறவுள்ள Techfest ரோபோ போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவார்கள்.

இந்தமுறை பொதுமக்களுக்காக ரோபோ காட்சிப்படுத்தல் மற்றும் தொழில்பட்டறை (workshop) ஒழுங்குபடுத்தப்பட்டள்ளது. இதன் நோக்கம் யாதெனின் வளர்ந்து வரும் துறைகளான robotics and automation தொடர்பாக தேவையான அறிவை சாதாரண மக்களுக்கு வழங்குதலாகும். நடைமுறையிலுள்ள சில பிரச்சனைகளுக்கு பொறியியல் தீர்வை வழங்கும் அறிவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிகமாக பல ரோபோக்களின் செயல்பாடுகளும் அதில் விபரிக்கப்படவுள்ளது.





கடந்த வருட கண்காட்சியின்போது

E-mergeல் வேறுபல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களின் இலத்திரனியல் தொலைத்தொடர்பாடல் தொடர்பான projectகள் போட்டியிடவுள்ளது. இதன் மூலம் அறிவை வளர்ப்பது மட்டுமன்றி மற்றைய பல்கலைக்கழக திறமையான இளம் மாணவர்களுடன் பரஸ்பரம் அறிவை பரிமாறிக்கொள்ளவும் முடியும்.

E-Juniors எனும் இப்பிரிவில் பாடசாலை மாணவர்களிற்கிடையான போட்டியும், தொழில் பட்டறையும்(workshop) இடம்பெறவுள்ளது. பாடசாலை மாணவர்கள் தங்களது சிறப்பான புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதற்கு இதன் மூலம் வழி பிறக்கிறது. நிலவும் அமைதியான சூழ்நிலை காரணமாக முதல்முறையாக யாழ் மாவட்ட மாணவர்கள் பலரும் ஆர்வத்துடன் இப்போட்டிகளில் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது. உயர்தர மாணவர்களுக்கான பௌதிகவியலிலுள்ள இலத்திரனியல் தொடர்பான ஆய்வுகூட பரிசோதனை அனுபவத்தை இத்தொழில் பயிற்சிபட்டறை வழங்கவுள்ளது. கொழும்பு மாவட்டத்திற்கு வெளியேயுள்ள போதிய வசதிகளற்ற ஆய்வுகூடத்தை கொண்ட பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் இதன்மூலம் பயனடையவுள்ளார்கள்.

மொத்தமாக நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இலங்கையின் சிறந்தவொரு தொழில்நுட்ப கண்காட்சியை இலவசமாக கண்டுகளிக்க தவறவேண்டாம். இல்லாவிடில் இன்னும் ஒருவருடம் காத்திருக்க நேரிடும். எனவே சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்.
http://www.expose2009.net/

பி.கு: இந்த ஆக்கம் தமிழ் பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்காக எழுதப்பட்டது. ஞாயிறு தினக்குரலில் சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.

”பொட்டலம்”ஆக மாறும் விடிவெள்ளி!!

வணக்கம் நண்பர்களே! காலை விடிந்ததும் அன்றும் வழமைபோல் வேறு தொழிலில்லாது வெள்ளி(?) பார்த்துக்கொண்டிருந்தபோது, சமயம் பார்த்து அந்த Gapல எனது புலொக்கின் பெயரை புல்லுருவிகள் யாரோ கடாசிவிட்டார்கள். படுபாதகர்கள்!!! தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அதுவும் விரும்பி சேர்ந்தல்லவா ஓடிவிட்டதாம்.
என்ன செய்யிறது அதுக்காக ஊரை கூட்டி ஒப்பாரியா வைக்கமுடியும். ஒண்டு போனால் என்ன? இன்னொண்டு ஆப்பிடாமலா போயிடும். அதுக்கிடேலேயே இன்னொன்றை பிடிச்சிட்டமில்ல. அவனவன் என்னத்த என்னத்தயெல்லாம் மாத்துறான். நாங்க இதயாவது மாத்த வேண்டாமா? ஒன்றையே கனக்கநாள் வைச்சிருந்தா அலுப்புத்தானே அடிக்கும்.
So இத்தால் யாவருக்கும் சொல்லிக்கொள்வது என்னெண்டால் இதுவரை காலமும் விடிவெள்ளி என்ற பெயரில் உங்களுக்கு விடிவை தராது உதித்த வெள்ளி இன்று முதல் அலேக்காக கட்டப்பட்டு ”பொட்ம்” ஆக உங்கள் கைகளில்.. (இது நிச்சயமாக அந்த பொட்டலம் இல்லை.) வழமைபோல் இதிலேயும் நல்லதுகள், கெட்டதுகள், குப்பைகள், சப்பைகள், கஞ்சல்கள், கெஞ்சல்கள், மிச்சங்கள், சொச்சங்கள், பொரியல்கள், பிரட்டல்கள் எல்லாம் சேர்ந்து உங்களுக்காக பொட்டலம் கட்டப்படும். சில புதுமைகள் எதிர்வரும் காலங்களில் அறிமுகப்படுத்தப்படும்.

மீண்டும் சந்திப்போம்.

ஈரம்=தரம் (பிந்திய திரைப்பார்வை)

ஈரம் படத்தைப்பற்றிய மிகவும் பிந்திய என்னுடைய பார்வை/விமர்சனம் இது. படம் வந்து ஏறாத்தாழ 2மாதம் ஆன பிறகு இதை பற்றி கதைப்பது அர்த்தமற்றதனமாக இருந்தாலும் கூட, இந்தப்படத்தை பற்றி போதிய அளவு கருத்துக்களோ, விமர்சனங்களோ இலங்கை பதிவர்களிடமிருந்து வந்ததாக தெரியவில்லை. (ஆதவன், வேட்டைக்காரன் படங்களை பற்றி கடும்போக்கான விமர்சனத்தையும், எதிர்வு கூறல்களையும் தந்த பதிவர்களுக்கு இதற்கு மட்டும் ஏனோ நேரம் கிடைக்கவில்லை போலிருக்கிறது).


அந்த குறையை தீர்க்குமுகமாகதான் இந்த பதிவு. இத்திரைப்படத்தை பற்றி முழுமையான அலசலை தரமுடியாவிடினும் ஏதோ என்னால் முடிந்தவாறு சில அம்சங்களை மட்டும் சுட்டிகாட்ட முயல்கிறேன்.

நடிகர்கள்: ஆதி, சிந்துமேனன், நந்தா, சரண்யாமோகன் etc...
இயக்கம்: அறிவழகன்
ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா
இசை: தமன்
தயாரிப்பு: இயக்குனர் சங்கர்


அறைஎண் 305ல் கடவுளின் சறுக்கலுக்கு பின்னர் சங்கரின் தயாரிப்பில் வந்த Qualityயான சூப்பர் படம் என்று இதை அடித்து சொல்லலாம். ஒரு ஹிட் படத்திற்குரிய அனைத்து தகுதிகளையும் கொண்டிருந்தும் கூட, போதிய விளம்பரப்படுத்தல்கள், பிரபலங்கள் இல்லாமையினாலோ என்னவோ Behindwoods இணையத்தளத்தில் இதன் நிலவரசுட்டி Above Average என்றே காட்டப்படுகின்றது. அதாவது படம் ஹிட் ஆகவில்லை. படத்தின் கரு பேயைப்பற்றியதெனினும், இடைவேளைவரை யாராலும் என்ன நடக்கின்றது என ஊகித்து கொள்ள முடியாது.


காதல், மர்மம் இரண்டையும் கலந்து விறுவிறுப்பாக வேகமாக ஒரு திரைக்கதையை தந்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அறிவழகன். ஊகிக்க முடியாத மர்மங்கள், அந்தாதி பாணியிலான பிளாஷ்பக் சொல்லும் பாங்கு (எந்த வசனத்தில் காட்சி முடிந்ததோ அந்த வசனத்தோடு தொடர்புபட்டதிலிருந்து பிளாஷ்பாக் தொடங்கி செல்லுதல்), நீரையும் சிவப்பையும் மரணத்தையும் தொடர்புபடுத்தல், அலட்டலில்லாத அளவான நச்சென்ற வசனங்கள், சிறப்பான ஒளிப்பதிவு, ரசிக்கும் வகையிலான பாடல்கள், திகில்படத்திற்கேற்ற பிரமாண்டமான பின்னணி இசை என்பன ஈரத்திலுள்ள பிளஸ் பாயிண்டுகள்.

பின்னணி இசை இடையிடையே ஹாரிஷ் ஜெயராஜை ஞாபகப்படுத்தினாலும் படத்தின் வேகத்திற்கு தமனின் இசையும் பக்கபலம். தமிழில் "சிந்தனை செய்" இற்கு பின்னர் இவரின் 2வது படம் இது. இவரை உங்களுக்கு முதலே தெரிந்திருக்கும். Boys பாய்ஸ் படத்தில் வந்த ஐவரில் இவரும் ஒருவர் ”கிருஷ்ணா”.
இசையமைப்பாளர் தமன்

மிருகத்தில் வந்த ஆதிதானா இது? என்று கேட்குமளவிற்கு மிடுக்கான குரலிலும் , கட்டுமஸ்தான தோற்றத்திலும் வந்து ஒரு கலக்கு கலக்கியுள்ளார் ஆதி. படத்தின் நாயகி சிந்துமேனன் (இதற்கு முன் சமுத்திரம், கடல்பூக்கள், யூத் படங்களில் தோன்றியிருப்பினும்) இப்படத்தின் பின் ரசிகர்கள் கூடியிருக்கும் என்பது உறுதி. குடும்பபாங்காக அழகாக காட்டியிருக்கிறார்கள் திரையில். பச்சையா சொன்னா "சூப்பர் பிகர்". நந்தா வித்தியாசமான கதாபாத்திரத்தில் வந்து திறமையை நிரூபித்திருக்கிறார். சரண்யா மோகன் வழமைபோல சுட்டித்தனமாக.


மொத்தத்தில் ஈரம் ஹொலிவுட் பாணியிலான, திரில்லான ஒரு தமிழ் திரைப்படம். எனினும் படத்தின் கரு சிலருக்கு பிடிக்காதிருக்கலாம். படத்திலுள்ள காட்சியமைப்புக்களை ஆங்கிலப்படத்திற்கு இணையாக செதுக்கியுள்ளார் இயக்குனர். (ஹொலிவுட் தரத்திலான படம் என்று சொல்லிக்கொண்டு டுபாக்கூர் படங்களை தந்த இயக்குனர்கள் இப்படத்தை பார்த்து தங்களை திருத்தி கொள்ள வேண்டும் உதாரணம் சரத்குமாரின் 1977)


இதையொத்த கதையம்சங்கள்(100% அல்ல) கொண்ட ஆங்கில படங்கள் வெளிவந்திருந்தாலும் கூட, தமிழ் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சிறப்பான ஒரு திரைப்படத்தை தந்துள்ள, இந்த படத்திற்காக உழைத்த கலைஞர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள். திரில் படவிரும்பிகளா நீங்கள்? சற்றும் தாமதியாது உடனே பாருங்கள் ஈரம்.

சுருங்ககூறின் ஈரம்===தரம்

பி.கு: யூத்ஃபுல் விகடன் குட் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்ட பதிவு

கஞ்சியும் Beerம்-சுட்டது

எனது அண்ணன் நிருத்தியுடம் இருந்து சுட்ட கவிதை இது. காலத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பதால் அவரின் அனுமதியுடன் இங்கே மீள் பிரசுரிக்கிறேன்.






சில்லறை மிச்சங்களை தேடிக்கொண்டு விதியின் வழியில் அவர்கள்
தறுதலை எச்சங்களாய் வெட்டிப்ந்தாவுடன் வீதியில் நாம்


‘War’களில் கால் இயங்காது பரிதாபாமான உயிர்களாய்
‘Bar’களில் கண் மயங்கி கேவலமான நாய்களாய்

சாப்பிட எதுவுமின்றி கொள்ளைப்பசியுடன் பரிதவிப்பு
Submarine தான் வேணுமென்று கொள்ளுப்பிட்டிக்கு படையெடுப்பு

Handle பிடித்து Montessoryக்கு சைக்கிளில் பிள்ளைகளின் Duty
Handbagல் Mobile Beauty Parlour சகிதம் போலியான Beauty












கரிப்பூச்சு முகத்தை மறைத்து கண் பனித்தபடி
Cream பூசிய முகத்தை காட்டி மினுக்கிக்கொண்டு

Urineஐதான் waterஎன குடிக்கிறான் அவன்
Mineral waterதான் வேணுமென கேட்கிறான் நம்மாள்

மணம் வீசும் ஆடை நாற்றமடித்தபடி பல நாட்களாய்
Denium Jeans புத்தம் புதுசாய் சில நாட்கள் மட்டும்

வெயில் மழைகளில் காய்ந்தும் உணர்ச்சி சிறிதும் குறையாது வெளிநாட்டுப்பணத்தில் குளிர்காய்கிறான் உணர்ச்சி சிறிதும் இல்லாது

சாதல் சாதல் என சாவின் முன்னால் பலிக்கடாவாய்
காதல் காதல் என பாவையின் பின்னால் வீணர்களாய்











பூரிப்பு புன்னகையுடன் தோள்களில் சுமக்கிறான் உறவுப்பாசத்தை
அமெரிக்க Visa எடுக்கிறேன் என பறக்குது பல பச்சைத்தாள்கள்

கிராமங்கள் தோறும் சகாக்களாய் பொறுப்புடன் Boys&Girls
கிராமப்புற சகாக்களை வெறுக்கிறார்கள் City(?) Boys&Girls

காலனவன் படலை தட்ட சீவன் பதறுகிறாள் அவள்
காதலுனுடன் கடலை போட KFC தேடுகிறாள் இவள்


















பள்ளியின் தேவையை உள்ளத்தில் உணர்கிறான்
கள்ளின் சுவையை நாவில் உணர்ந்து அலைகிறான்

சாக்குகள் கட்டில்களாய் சில நிமிடங்கள் ஓய்வு
சொகுசுக்கட்டிலகளில் நாள் முழுதும் புரளல்

கலப்பை பிடித்து வயிறு நிரப்ப அங்கே ஓட்டம்
கண்ணடித்து __________ பிடிக்க இங்கே போட்டி

காடுகளில் பாம்புகளுடன் தலைசரித்து கண்ணயர்வு
கடற்கரைகளில் பாலியல் சல்லாபம் தலையெடுப்பு













சல்லி உழைத்து குழந்தை சந்தோசம் வேண்டல்
சல்லாபம் முளைத்த சிந்தை உல்லாசம் தேடி

மண் சிறப்பு குறைபோகாது பெயராய் கல்விமான்கள்
பெண்கற்பு சூறையாட தயாராய் காமுகர்கள்

கனவிலும் நினைவிலும் அடுத்த வேளை உணவு
கனவும் நினைவும் Makeupதான் இந்த பெண்டிர்க்கு






















குருதி உறைந்த 'Route'களில் மனிதத்துவம்
சுருதி குறையாத 'Duet'களுடன் மன்மதங்களாய்

பொய் வார்த்தை மறுத்து பெரு உயிர்களாய்
தாயின் சொல் மறந்துதெரு நாய்களாக

துயில் விலக்கி கடமை எண்ணத்துடன் குயில் கூவல்
தாயை விரட்டி விடியல்காலையில் மயில்தாள்கள்

தேட்டத்துடன் பிழைத்து அமரர்களான _________ பூஜிக்கும் தெய்வங்கள் பகட்டாய் வாழ்ந்து பாவியரான சபிக்கும் காயங்கள்

பிற்குறிப்பு: மொறட்டுவை பல்கலைகழக தமிழ்மாணவர்களால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் சங்கமம் சஞ்சிகையில் 2008ல் வெளியான ஆக்கம் இது.

ஹாரிஷ் ஜெயராஜ்+வேறு இசையமைப்பாளர்கள்

பொட்டலம் சார்பாக அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இன்னும் இருண்டபடியே இருக்கும் எமது வாழ்வின் துன்பங்கள் துயரங்கள் தீர்ந்து சுதந்திரமாக வாழ இறைவனை பிரார்த்திப்போமாக. கிட்டத்தட்ட ஒரு மாதத்தின் பின்னர் இந்த தீபாவளி சிறப்பு பதிவு. பதிவுப்பக்கம் தலையே காட்டமுடியாத அளவிற்கு, நான் முதலே சொன்னவாறு கூடிய சுமைகள்.



இசையமைப்பாளர்களில் மெலடிகிங் ஹாரிஷ் ஜெயராஜிற்கு மற்றைய இசையமைப்பாளர்களை விட தனியான சிறப்பொன்று உண்டு. இவரது இசையில் வரும் பாடல்களில் பெரும்பாலானவற்றில், ஒரு புரியாத கவர்ச்சியான உற்சாகமான வார்த்தைப்பிரயோகம் வந்து அப்பாடலை அது சூப்பர் ஹிட்டாக்கும். அந்த சிறப்பையும் விடுத்து வேறு பல சக இசையமைப்பாளர்களுக்கு தனது படங்களில் பாடவாய்ப்பு கொடுக்கும் பெருந்தன்மையே அதுவாகும். இவ்வாறு மற்றவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகின்ற போதிலும் இருந்தபோதிலும், தனது சொந்தகுரலில் இவர் ஒரு பாடலையும் இன்னும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு பேட்டியில் இதை (மற்ற இசையமைப்பாளர்கள் பெரும்பாலானோர் அவர்களது சொந்த இசையில் பாடுகின்றனரே நீங்கள் பாடவிரும்பவில்லையா?) கேட்டபோது "என்னைவிட திறமையாக பாட கூடியவர்கள் நிறையபேர் வெளியே இருக்கின்றனர். நான் வீண் பரிசோதனையில் இறங்க விரும்பவில்லை" என்றார்.

A.R.RAHMANனுக்கு அடுத்தபடியாக தமிழில் கூடுதலாக ஒரு படத்திற்கு ஊதியம் பெறும் இசையமைப்பாளராக இருக்கும் ஹாரிஷ், திறமை உடையவர்கள் தன்னுடைய போட்டியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நல்ல குணம் கொண்டவராக இருக்கிறார்.

இவ்வாறு இவர் பாடவைத்த இசையமைப்பாளர்களின் பெயர் பட்டியலும் அவர்களுக்கு கொடுத்த பாடலும் படத்தின் பெயரும் கீழே உங்களுக்காக.

  1. ரமேஸ் விநாயகம்- ”யாரிடமும் தோன்றவில்லை” (தொட்டிஜெயா)
  2. ஜாஸி ஹிப்வ்ட்- ”அண்டங்காக்க்கா” (அந்நியன்)
  3. பிரேம்ஜி அமரன்-”Hey Girls” (12B), ”அடகடகட அடபம்பம்” (சத்தியம்)
  4. G.V.பிரகாஸ்குமார்- ”காதல் யானை” (அந்நியன்), ”Xமச்சி” (கஜினி) ”Hello Miss இம்சையே” (உன்னாலே உன்னாலே”)
  5. யுகேந்திரன்- ”முதன் முதலாய்” (லேசா லேசா), ”கல்யாணம்தான் கட்டிகிட்டு”(சாமி)
  6. கைலாஷ்கர்- ”ரங்கு ரங்கம்மா”(பீமா), "உய்யலால உய்யலால நீதான்"(தாம் தூம்)
  7. லெஸ்லி லூயிஸ்- ”கண்ணும் கண்ணும் நோக்கியா”(அந்நியன்)
  8. சங்கர் மகாதேவன்- ”குமாரி”(அந்நியன்) ”ரங்கோலா கோலா”(கஜினி)
  9. கரிகரன்- ”நெஞ்சுக்குள் பெய்திடும்”(வாரணம் ஆயிரம்) ”கொல்முக மலரே”(மஜ்னு)
  10. சுருதி ஹாசன்- ”அடியே கொல்லுதே”( வாரணம் ஆயிரம்)

மேலே குறிப்பிட்ட சிலரை இசையமைப்பாளர்கள் என்று உங்கள் சிலருக்கு தெரிந்திருக்காது. எனவே அவர்கள் பெயருடன் அவர்கள் இசையமைத்த படங்கள் கீழே..
  • ரமேஸ் விநாயகம் – அழகிய தீயே, நளதமயந்தி, ஜெர்ரி
  • பிரேம்ஜி அமரன் – நெஞ்சத்தை கிள்ளாதே, தோழா, அதேநேரம்அதேஇடம்
  • ஜாஸி ஹிப்வ்ட் – 4Students, தீநகர், பட்டாளம்
  • யுகேந்திரன் - வீரமும் ஈரமும், பலம்
  • கைலாஷ்கர் - Dasvidaniya, Pranali, The Traffic Signal அனைத்தும் ஹிந்தி படங்கள்
  • லெஸ்லி லூயிஸ் &கரிகரன் - மோதிவிளையாடு, Colonial Cousins(Fusion Album)
  • சங்கர் மகாதேவன் - ஆளவந்தான், யாவரும்நலம், Dil Chahta Hai, Bunty aur Babli (Hindi Films). சங்கர் மகாதேவன் இசையமைக்கும் போது Ehsaan-Loy இருவருடன் சேர்ந்தே இசையமைக்கின்றார். 3பேர் கொண்ட கூட்டணி.
  • சுருதி ஹாசன் - உன்னைப்போல் ஒருவன், வேறு ஆல்பங்கள்
பிற்குறிப்பு: எனது இந்தப்பதிப்பு யுத்ஃபுள் விகடனில் (youthful.vikatan) குட்பிளாக்ஸ் (Goodblogs) பகுதியில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதிலே எனக்கு பிடித்த "கண்ணும் கண்ணும் நோக்கியா'' பாடலின் வீடியோ காட்சி கீழே. பார்த்து ரசியுங்கள்.

BLOGற்கு வந்தது எப்படி?

அண்மையில் எனது ஒரு மாதகால விடுமுறையை யாழ்ப்பாணத்தில் சொந்தமண்ணில் நல்ல ஜாலியாக கழித்துக்கொண்டிருந்தபோது ஊஞ்சல் வலைத்தளத்தை வைத்துள்ள நண்பர் சுபானு அவர்களால் பதிவெழுத வந்ததை பற்றி எழுத அழைக்கப்பட்டேன்.
எனினும் யாழிலிருந்து எழுதுவதற்கு போதிய வசதி இல்லாமையால் நீண்ட நாளின் பின் அந்த அழைப்பை ஏற்று இன்றுதான் பதிவெழுதுகிறேன். இதை ஒரு சுயதம்பட்ட பதிவாக பதிகின்றேன். யாரும் என்ன நினைத்தாலும் பரவாயில்லை.



எனது பாடசாலைக்காலத்தில் நான் பார்த்த ”முதல்வன்”, ”ஆயுத எழுத்து” போன்ற அரசியல் படங்களாலும், ”இந்தியன்”போன்ற சமூக அக்கறை கொண்ட படங்களாலும், ”அன்பே சிவம்” போன்ற யதார்த்த படங்களாலும் என்னிடம் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாகவோ என்னவோ என்னால் மற்றவர்களுக்கு ஏதாவது பிரயோசனமாக செய்யவேண்டுமென்ற உணர்வு இருந்தது.



இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்லியே ஆக வேண்டும். ”அன்பே சிவம்” படத்தை பார்த்த பின்புதான் எனது வாழ்க்கையின் போக்கே மாறினது. அதுவரை காலமும் குப்பையாக ஒழுங்கற்று கிடந்த என் மனது ஒரு நிலைக்கு, கட்டுக்கோப்புக்கு வந்தது அதன்பின்னரே. அதன்பின்னே பல தொடர் வீழ்ச்சிகளிலிருந்து வெற்றிகரமாக எழுந்து நிமிர்ந்து வந்தேன்.


அரசியல் படங்கள் எதுவாக இருந்தாலும் நானும், அப்பாவும் விரும்பி பார்ப்போம். அப்பா நல்ல அரசியல் அறிவுடையவர். பழைய கால அரசியலை பற்றி போதியளவு சொல்லியிருக்கிறார். எனக்கு அந்த வயதில், பெரியாளா வந்தவுடன் நல்ல ஒரு கட்சியில் சேர்ந்து என்னால் இயன்றதை மக்களுக்கு செய்யமுடியும் என்ற நம்பிக்கை, ஆசை இருந்தது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பெருமளவு தேர்வு செய்யப்பட்டு நாடளுமன்றம் சென்ற காலம் அது. நல்லதுக்கும், நல்லவர்களுக்கும் காலம் உண்டு என இருந்த காலகட்டம் அது. ஆனாலும் பின்னர் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பல வேண்டத்தகாத சம்பவங்கள் எனது உள்மன ஆசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

எனினும் பல வெளிவராத, மக்களின் பிரச்சனைகளையும், உண்மைகளையும், எனது உணர்வுகளையும் வெளிக்கொண்டுவர ஆசையிருந்தும் அதற்குரிய தருணமோ இடமோ கிடைக்கவில்லை. இப்படியான காலத்தில்தான் படாதபாடுபட்டு ஒரு மாதிரி நானும் Campusக்கு தெரிவாகினேன். இணையப்பாவனை இந்தகாலத்தில்தான் அறிமுகமானது. பின் 3ம் வருடத்தில் Training காலத்தில் சும்மா வெட்டியாகத்தான் பெரும்பாலான நேரங்களில் இருந்தமையால் பல பக்கங்களை இணையத்தளத்தில் புரட்டலானேன். இத்தருணங்களில் பலரது Blogகளை பார்த்தபோதுதான் வீணே சும்மா இருப்பதிலும் எனது உணர்வுகளை கொட்டவும், எம்மக்களின் பிரச்சனைகளை, தேவையான தகவல்களை பரிமாறவும் Blog சரியான இடமாக இருக்குமென முடிவெடுத்து நானும் ஏதோ என்பாட்டிற்கு எழுதவந்தேன்.

சில தெரியவேண்டிய மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொணர வேண்டுமென்ற ஆவலிலும், வராத செய்திகளை சொல்வதற்காகவும் EXPOAIR, EXPOAIR Traveling Tips, A9ல் நடப்பதென்ன?, A9ல் பயணிப்பதற்கான நடைமுறைகள், புதிதாக முளைக்கும் புத்தர்சிலைகள், விகாரைகள் போன்ற பதிவுகளை எழுதினேன்.

இனி எனது பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு. இறுக்கமான, கடினமான ஆண்டாக இருக்கபோவதால் இனிபோதியளவு நேரம் இணையத்துடனோ, Blogஉடனோ செலவளிக்க முடியாது. எனவே எப்போதாவது இருந்துவிட்டுதான் எழுதுவேன். அப்பிடி எழுதினாலும் அதுவும் டூபாக்கூர் பதிவுகளாகவே வரும்.

இறுதியாக என்ன முறையில் நான் எழுதுகிறேன் என்று சொல்லிமுடிக்கிறேன். பதிவுகளை இடும்போது நான் பாமினி(Bamini) Fontஐ தான் உபயோகிக்கிறேன். ”அம்மா”வை Amma என்று Phonetic முறையில் எழுதுவதிலும் பாமினி மிகவும் விரைவானது. பழகிவிட்டால் இலகுவானது. முன்பு நான் இருந்த வீட்டில் Net connection 24 மணி நேரமும் இருந்தமையால் Browserல் Tamil Key Extension ஐ Install செய்து நேரடியாக பதிவுகளை Blogல் எழுதிவந்தேன். இப்போது கம்பஸிலும் நண்பர்களின் Dongle மூலமாகவும்தான் பார்க்கின்றமையால் நானும் NHM Writerல் Bamini Unicodeஐ கொண்டு முதலே எழுதிவிட்டு, பின்பு அதை அப்படியே Blogற்கு கொப்பி செய்து பதிவிடுகிறேன்.

புதிதாக முளைக்கும் புத்தர்சிலைகள், விகாரைகள்.

பதிவெழுத வந்த கதையை நண்பர் சுபானு எழுத கேட்டிருந்தாலும் கூட, அதைவிட முக்கியமான விடயம் இது என்பதால் அதைவிடுத்து இதை முதலில் தருகிறேன்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிளிநொச்சி, முல்லைத்தீவில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்படவில்லை என்று உறுதிகூறியமை யாவரும் அறிந்ததே.

அந்த செய்தியை யாரும் பாக்க தவறியிருந்தால் உதயன் பத்திரிகையிலிருந்து அதன் Screen shot உங்களுக்காக கீழே இதோ!


நன்றி உதயன்

ஆனால் A9 பாதையினூடு பயணித்த அனைவருக்கும் தெரியும் அவர் யாரை ஏமாற்ற முயல்கிறார் என்று. பரந்தன், கிளிநொச்சி, முரசுமோட்டை இடங்களில் முளைவிடுகின்றன இவை.

இதில் பரந்தனில் புதிதாக இப்போதுதான் விகாரைக்கான நிர்மாண வேலைகள் நடைபெறுகின்றன. கிளிநொச்சியில் நிலைவேறு. ஆலமரங்கள் சிலைகள் சுற்றுமதில்கள் போன்றன எல்லாம் கட்டப்பட்டு தூபி மட்டும் கட்டபடாமல் இருக்கிறது. விரைவில் அதுவும் வளரும் என்பதில் ஐயமில்லை. முரசுமோட்டை பகுதியில் ஆலமரத்திற்கு கீழே ஓர் புத்தர்சிலை காணப்படுகிறது.

நான் புத்தரின் போதனைகளுக்கோ பௌத்தமதத்திற்கோ எதிரானவன் அல்ல. ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் என்னத்தை இலக்கு வைத்து நகர்கின்றது என்பதை நீங்கள் எல்லோரும் புரிவீர்கள். இன்னும் மக்களை குடியேற்ற முடியாதாம் ஆனால் அதற்குள் மக்களுக்கு தேவையான(??????????) இதெல்லாம் என்ன?



இதை நான் சொல்ல கேட்ட நண்பன் ஒருவன் ”கொஞ்ச காலத்தால வரலாறு பாடப்புத்தகத்தில விஜயன் வந்து கட்டின விகாரைகள் என்றுதான் இவையெல்லாம் வரும்” என்றான் ஏக்கத்துடன் . அதுதான் கசப்பான உண்மையும் கூட.

""புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி""

யாழிலிருந்து ஒரு பதிவு

ஒரு மாத விடுமுறையை கழிக்க சொந்த மண்ணான யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ள நான் இங்கிருந்து ஒரு பதிவாவது கட்டாயம் எழுதிவிடவேண்டும் என்பதற்காக கஸ்டப்பட்டு இன்று அந்த வாய்ப்பை பெற்று எழுதுகிறேன்.

அண்மையில் என்னை பொறுத்தவரை இரண்டு வியக்கத்தக்க விடயங்கள் நடந்தது.

ஒன்று இறுதி ஆஸஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவை மண்கவ்வ செய்து இங்கிலாந்து கோப்பையை 2005ன் பின் மீண்டும் தூக்கியது. பலமான அணி என்று தற்போதைய அவுஸ்திரேலியா அணியை கூற முடியாவிட்டாலும் செத்தபாம்பைதான் இங்கிலாந்தினர் போட்டு அடித்தனர் என்று கூறுவதற்கில்லை. அவுஸ்திரேலியா எந்த அணியுடன் விளையாடினாலும் அதற்கு எதிராக இருக்கும் என் போன்றோருக்கு ரொம்ப மகிழ்சியான தருணம் அது.

அடுத்தது ஆகஸ்டு 21 பெரும் எதிர்பார்புடன் வெளிவந்த கந்தசாமியை பார்க்கும் வாய்ப்பு 23அன்று எனக்கு கிடைத்தது. இதில்லை வியப்பு. இந்த படத்தை பற்றி நல்லதோ கெட்டதோ விமர்சிக்க நான் வரவில்லை. நீங்களே பார்த்து அறிந்து கொள்ளுங்கள். விசயம் என்னென்டால் இந்த படத்திற்கு U சான்றிதழ் சென்சார் போர்ட்டினால் வழங்கப்பட்டிருந்தது. நானும் என்னவோ எல்லாரும் பாக்ககூடிய படம் எண்டு நினைத்தால்............. பிறகுதான் விளங்கியது படம் ஒரு பலான படவகையை சார்ந்ததெண்டு. நல்லகாலம் குடும்பத்துடன் படம் பாக்கபோகவில்லை. நண்பனுடன் போனதால் தப்பினேன் இல்லாட்டி இதைகாட்டவா கூட்டி வந்தாய் என்று வாங்கிகட்டியிருப்பேன். A சான்றிதழ் வழங்க வேண்டிய படம் என்னவென்றுதான் U கொடுத்தார்களோ?

எனக்கு தெரிந்தவரை ஆபாசகாட்சிகள் நிறைந்த படத்திற்கும், கொடுமையான வன்முறைகாட்சிகள் உள்ள படத்திற்கும் Aசான்றிதழ் வழங்கப்படும். "நான் கடவுள்" படம் இதில் 2ம் வகையை சார்ந்தது. கந்தசாமி 1ம் வகைக்குள் அடங்க வேண்டியது.
----------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த பதிவில் A9 பாதையில் பயணிக்க விரும்புவோர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பிபோயுள்ளார்கள் என்று கூறியிருந்தேன். கொழும்பு-யாழ்ப்பாணம் A9 பாதையினூடு வந்தவன் என்ற வகையில் தற்போதுள்ள நடைமுறைகளை கீழே தெரியாதவர்களுக்காக தருகிறேன்.
கொழும்பு-யாழ் பயணம் பற்றி பார்ப்போம்.
  • இதுவரை கொழும்பு-யாழ் நேரடி பஸ் சேவை ஆரம்பிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைவரும் வவுனியாவிற்கு ரயிலிலேயோ பஸ்ஸிலேயோ வந்தே, பின் யாழ் செல்லவேண்டும். அதற்கு பழைய கப்பலோ, விமான ரிக்கெட்டோ உங்களிடம் இருக்கவேண்டும். எந்த ஆண்டு ரிக்கெட்டும் செல்லுபடியாகும். உங்கள் பெயரும் NIC Noம் அதில் இருக்கிறதா என்றுதான் அவர்கள் பார்க்கிறார்கள்.
அப்படி ஒரு ரிக்கெட்டும் இல்லை என்றாலும் இருக்கிறது ஒரு கள்ளவழி. யாரிடமாவது பழைய விமான ரிக்கெட்டை வாங்கி உள்ளே அவர்களின் பெயர் இருக்கும் ரசீதை முழுவதுமாக கிழித்துவிடுங்கள். இப்போது வெறும் வெளிகவர் மட்டும் உங்களிடம் இருக்கும். இப்போது ரிக்கெட்டின் முன் கவரில் உங்கள் பெயரையும் NIC Noம் எழுதிவிட்டு காட்டுங்கள். கேட்டால் மட்டும் return ரிக்கெட் என்று சொல்லுங்கள். ஏனென்றால் உண்மையாகவே உங்களது ரிக்கெட் returnஆக இருந்திருந்தால் உங்களது பெயருக்குரிய உறுதி ஒன்றும் இருக்காது. இருவழிபயணத்தின் போது முழுவதுமாக கிழித்து விட்டிருப்பார்கள். எனவே நீங்கள் அந்த முறையை இங்கு உங்களிற்கு சாதமாக பயன்படுத்தலாம்.
  • வவுனியாவிற்கு 5.30ற்கு வந்ததும் ரம்யா ஹவுஸ் எனும் இடத்திற்கு சென்று காவல் இருங்கள். பயணத்திற்கான Token இங்குதான் வழங்கப்படுகிறது. ஆனால் 8.30 மணிக்கே பெரும்பாலும் Token வழங்க ஆரம்பிக்கபடும் . ஆனால் வேளைக்கே வருவதன் மூலம் முதல் இலக்கங்களை பெறகூடிய வாய்ப்பு கிடைப்பதுடன் உங்களது பயணமும் பெரும்பாலும் உறுதிபடுத்தபடுகிறது.

  • இந்த Token எடுத்ததும் அந்த இலக்கத்தின் ஒழுங்கில் உங்களை கூப்பிட்டு ரிக்கெட்டுகளை பார்த்து உங்களது பெயர்களை பதிந்து இன்னோர் Token தருவார்கள். இந்த Token பெற்றால் உங்களது பயணம் அன்று உறுதி.

  • பின் அவர்கள் கூறும் நேரத்திற்கு மீண்டும் சென்று உங்களது Token காட்டி பயணிக்கலாம். கிட்டத்தட்ட 4.30 மணிக்கே பஸ்ஸில் ஏற்ற தொடங்குவார்கள். அனைவரும் ஏற்றப்பட்டபின் 6.30மணியளவில் பஸ்கள் அனைத்தும் ஒன்றாக புறப்படும். 3.30 மணி பயணத்தின் யாழ் நகரை அடைவீர்கள். வவுனியா-யாழ் பயணகாசு 135மட்டுமே.
இந்த பயணநேரங்கள் பலவேளை முந்திபிந்த கூடும்.
இந்த பயணத்தில் தரப்படும் பஸ் ரிக்கெட் மற்றும் Tokenன் Photocopy கொடுப்பதன் மூலம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள Jaffna Civil Affairsல் நீங்கள் ஒரு மாதத்திற்கான Clearance பெறலாம்.
யாழிலிருந்து கொழும்பு செல்ல இவ்வாறு அலைய வேண்டியதில்லை. நேரடி சொகுசு பஸ்ஸில் பதிவதன் மூலமோ, யாழ்-வவுனியா, யாழ்-மதவாச்சி CTB பஸ்ஸில் பதிந்து Tokenஐ முதலில் பெறுவதன் மூலம் நீங்கள் பயணிக்கலாம்.

தற்போது அதிகரித்துள்ள மூட்டை கடிக்கு மத்தியில் கப்பலில் போவதிலும், வீணே காசை விமானத்திற்கு கொட்டுவதிலும் இலகுவான வழி A9 பாதையிலான பயணம்.

தகவல்: பிரபல பதிவர் சுபாங்கன் அண்மையில் யாழில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி குணமாகிவருகிறார்.

என்னதான் நடக்குது A9 றோட்டில்?

நாளைக்கு நாளைக்கு எண்டு சொல்லி ஒரு மாதிரி பாதையையும் திறந்தாச்சு எண்டு பார்த்தா அங்க என்னதான் நடக்குதெண்டு ஒண்டுமே சரியா புரியவில்லையே? அதால பயணத்தை போக விரும்பும் ஒருவருக்கு அது சம்பந்தமாக ஒரு விடயமும் தெரியாது இருக்கிறது. எப்பிடி போகலாம்? யாரும் போகலாமா? என்ன செய்யவேணும்? இது தொடர்பான பல குழப்பங்கள் இவை. இன்னும் ஒன்றுக்கும் சரியாக விடை தெரிந்த பாடில்லை.


ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு கதை. இது தொடர்பாக குழப்பத்திற்கும், சந்தேகத்திற்கும் உள்ளான இருவர் பேசிக்கொண்டபோது கேட்ட நான் அதை இங்கு தருகின்றேன். உங்களுக்கு பிரயோசனமாயிருக்கலாம். எனது சுகத்திற்காக 1, 2 என்று அவர்களை குறிக்கின்றேன்.

1: அடேய் பாதை திறந்திட்டாங்களாமே?
2: ஓமடா இந்த வருச தொடக்கத்திலிருந்து துறக்க தொடங்கி கடைசியா ஒருமாதிரி உண்மையா திறந்தே விட்டிட்டாங்கள்!



1: அவங்கள் விடுற பஸ்ஸிலதானே போகலாமாம் உண்மையா? சொகுசு பஸ் எல்லாம் ஓடப்போறதா கதை விட்டாங்களே? என்ன நடந்தது?
2: ஓமோம் நானும் கேள்விப்பட்டனான். 5 பஸ்தான் ஓடுது. இன்னும் சொகுசு பஸ் ஓடேல. இன்னும் கொஞ்ச நாளில வாத்து அமைச்சரின்ர தயவில ஓடப்போறதா கேள்வி. அதோட கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்திற்கு எண்டு இன்னும் நேரடி சேவை இல்லை. கொழும்பில் இருந்து போறாக்கள் வவுனியா போய்தான் என்னவும் செய்யோணும். யாழ்ப்பாணத்தில இருந்து வெளிக்கிடுற பஸ் மதாவாச்சியோட நிக்குமாம். பிறகு மதாவாச்சியில இருந்து கொழும்பு போறதுக்கு வேற பஸ் ஒழுங்கு மேற்கொள்ளப்படுதாம். அந்த வந்த பஸ்தான் வவுனியால இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஆக்களை கூட்டி கொண்டு போகுமாம்.

1: எவ்வளவு காசு வேண்டுறாங்கள்?
2: வவுனியா – யாழ் 195/= யாழ் – கொழும்பு 425/= காசென்னவோ ரொம்ப சீப்தான்

1: சும்மா எல்லோரும் போகேலாதாம்? என்னவோ பழைய ரிக்கெட் தேவையாமே? அதைப்பற்றி தெரியுமாடா?
2: கொழும்பில இருந்து யாழ்ப்பாணம் போக இந்த வருச யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்த பிளேனோ கப்பல் ரிக்கெட் தேவையாம். அப்பிடி போனாலும் திரும்பி வர VISA, sorry Clearance எடுக்கோணுமெண்டு கதைக்கிறாங்கள். இதுக்கு வேற வழி இருக்கோ தெரியவில்லை.

1: ஓ அப்பிடிதான் கதை வருது. ஆனால் நேற்று போனாக்களுக்கு டோகின்(Token) கொடுக்கப்பட்டிருக்கிறது. அவங்களுக்கு Clearance தேவையில்லையாம். இதெல்லாம் வாய் வழி கதைதான் எது உண்மை எது பொய் என்று ஒண்ணுமே தெரியல. தலையே சுத்துது. பேசாம பாதையே திறக்காம இருந்திருக்கலாம் போல கிடக்கிது. EXPOவோடயே குப்பை கொட்டியிருக்கலாம்.
2: கொழும்பில இருந்து போகோணும் எண்டா எப்பவும் போலாமா? இல்லாட்டி முதலேயே book பண்ண வேணுமா?

1: நான் அறிஞ்சவரை வவுனியா போய், உன்னட்ட தேவையான document எல்லாம் இருந்து பஸ்ஸில் ஆக்கள் கூட(crowd) இல்லாட்டி பிரச்சனை இல்லை. அண்டைக்கே போகலாம் இல்லாட்டி book பண்ணி அடுத்த நாள்தான் போகோணும். அதுக்கும் உரிய போற ஆள்தான் தேவை.
2: அப்ப பாதையால போறதெண்டாலும் சும்மா லேசுப்பட்ட விசயம் இல்லை எண்டு சொல்லு!! பாப்பம் பாத்து விசாரிச்சு போவம். இல்லாட்டி இங்கேயே இருந்து படிச்சு முன்னேறுவம்.

இதுதான் அந்த சம்பாஷணையின் தேவையான பகுதி. இவர்கள் தங்களுக்குள் கதைத்து கொண்டது மிக அண்மையில் அறிந்த தகவல்களை கொண்டாகும் பெரும்பாலும் அனைத்து தகவல்களும் சரியானது. சில சிறிய திருத்தங்கள் இருக்க கூடும். எதிர்காலத்தில் இந்த நடைமுறைகள் மாறகூடும். ஆனால் காலத்தின் தேவை கருதி உடனேயே பதிவிடுகிறேன்.

சும்மா செய்திகளை மட்டும் பார்த்திட்டு போறாக்களுக்கு A9 திறந்த பின் எல்லாப்பிரச்சனையும் தீர்ந்த மாதிரியே ஒரு தோற்றப்பாடு தோன்றலாம். (தமிழர்களுக்கு கூடி). இதில பயனையட முயலுபவர்களுக்குதான் எல்லா சிக்கலும், பிரச்சனையும் தெரியும்.


ஒரே நாட்டிலிருக்கிற சொந்த வீட்டுக்கு போக அதே நாட்டிலிருக்கிற தமிழ்மக்கள் படும்பாடு இது. பயங்கரவாதம்தான் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதே! இனியாவது ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் மக்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல அனுமதிப்பீர்களா? எங்கே வடக்கின் வசந்தம்?

வசந்தம் வெறுமனே சாமான் கொண்டு A9ல் செல்லும் லொறிகளின் பதாகைகளில் மட்டுமா?

கசப்பான அந்த நாள்-IVமுடிவு

இதன் முதல் பாகங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 1  2  3.

ஒருவாறு எமகண்டத்திலிருந்து தப்பியாச்சு. வேறுமாவட்ட மாணவர்கள் அவர்களது சொந்த இடங்களிற்கு செல்ல யாழ் மாணவர்கள் மட்டும் தங்களிற்கு தெரிந்த உறவினர்களின் கொழும்பு வீடுகளில் தங்கினார்கள். உடுத்த உடுப்போடு வேறு எதையும் எடுக்கமுடியாது போனமையால் அத்தியாவசிய பொருட்களை மீண்டும் வாங்கவேண்டி இருந்தது.

காலவரையறையின்றி கம்பஸ் பூட்டப்படும் என்ற வதந்தியின் மத்தியிலும், இவ்வளவு பிரச்சனைகள் நடந்திருந்தும் கூட திங்கட்கிழமை வழமைபோல் கம்பஸ் திறக்கப்பட்டது (சம்பவம் நடந்தது வெள்ளியில்). முதல்நாளில் ஒருசில தமிழர்களை தவிர ஒருவரும் பயத்தால் அந்த பக்கம் செல்லவில்லை. நிலமைகளை அவதானித்த பின்னரே செல்வது உசிதம் என்பதால் பலர் வீடுகளில் பதுங்கி இருந்தனர்.


சொந்தவீடுகளில் இருப்போருக்கு வேறு பிரச்சனைகள் இருந்திருக்கவில்லை. ஆனால் எங்களைபோல தூரத்து சொந்தங்களின் வீடுகளில் தங்கியிருந்தோர் பலர் அதை comfortable ஆக உணரவில்லை. எவ்வளவு விரைவாக எங்களது பழைய roomகளுக்கு செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாக செல்லசந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தோம்.

செவ்வாயன்று சில தமிழர்கள்(பெரும்பாலும் கொழும்பை சேர்ந்தோர்) சென்று அங்கே பதட்டமான சூழ்நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின், கொஞ்ச மாணவர்களை சேர்த்து கொண்டு புதனன்று நாங்களும் அங்கே சென்றோம். முதலிலேயே கதைத்து கொண்டபடி சத்தம் சந்தடி எதுவுமின்றி கம்பஸிற்குள் நுழைந்தோம். சுற்றாடலிலும், உள்ளேயும் பதாகைகளும் கொடிகளும் பறக்கவிடப்பட்டிருந்தது.

எமது Roomதொகுதியை சேர்ந்த 5பேரளவில் ஒன்று சேர்ந்து கன்ரீனில் சந்தித்து பேசி, எமது roomகளுக்கு சென்று நிலமையை பார்த்து வர முடிவு செய்தோம். நான் முன்னே சொன்னபடி எங்கள் அறைகள் கம்பஸிலிருந்து கிட்டத்தட்ட 300மீட்டர் தூரம். போக வேண்டுமெனில் முன்னே உள்ள ஓட்டோக்காரர்களையும் (குடுக்காரர்கள்) தாண்டியே செல்ல வேண்டும். அவர்களுக்கு நாங்கள் தமிழர்கள்தான் என்று தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது. எனவே வீணே கூட்டமாக சென்று யாரிடமும் அடி வாங்காது முதலில் ஒருவரை அனுப்பி பரிசோதித்து அவருக்கு எதுவும் நடக்கவில்லை எனின் மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்லலாம் என தீர்மானித்தோம்.


இவங்களபோலதான் நாங்களும் நல்ல colors ஆன பெடியள்

அதற்கு பொருத்தமான பருத்த, உயரமான தோற்றமுடைய (இராவண வம்சத்தின் எச்சமோ என பலரால் சந்தேகிக்கபடுபவரும் பண்ணாகத்தின் மைந்தனுமாகிய) ஒருவரை தேர்ந்தெடுத்தோம். இருப்பவர்களில் சிங்களம் பேச கூடியவரும், அடிவாங்க கூடிய தேகவளமுடையவருமாதலால் அவரின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அவரும் பதுங்கி பதுங்கி சென்று ஒருவாறு சேரவேண்டிய இடத்தை அடைந்து எமக்கு callசெய்து பிரச்சனை இல்லை என்பதை உறுதி செய்தார்.


இவரை போலதான் அவர் இருப்பார்

நாங்களும் இருவர் இருவாராக வேகமாக நடந்து ஒருமாதிரி போய் சேர்ந்தோம். எங்களது வீட்டு உரிமையாளர்(சிங்களவர்) நல்லவர். அவர், இப்போது பிரச்சனை பெரிதாக இல்லை என்றும் நீங்கள் இன்றே தங்கலாம் என்றும் நம்பிக்கை கூறினார். வேறு வீட்டு உரிமையாளர்கள் இவ்வாறு தமிழர்களை தங்க விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் நான் அன்று அங்கே தங்க விரும்பாது தேவையான சிலவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் உறவினரின் வீட்டுக்கு சென்றேன்.

எனினும் 2மாணவர்கள் அங்கே தங்கியிருந்து பரீட்சித்து பார்ப்பதென்று முடிவெடுத்து அன்றிரவு அங்கேயே தங்கினார்கள். அவர்கள் பிரச்சனையின்றி உயிரோடிருந்தால் அடுத்த நாள் நானும் தங்கலாம் என யோசித்து இருந்தேன். அன்றிரவே போன் பண்ணி அவர்களின் குசலம் விசாரித்தேன். அப்போது அவர்களின் குரலின் தொனியை கொண்டு அவர்கள் எப்படி பயந்து போய் இருந்தார்கள் என உணர முடிந்தது. பெரிதாக கதைக்காது, light போடாது இருப்பதாக கூறினார்கள். வீணாக வெட்டி கதைகதைத்து அவர்களை சிக்கலில் மாட்டாது உடனேயே நான் அழைப்பை துண்டித்தேன்.

அடுத்தநாள் நண்பர்களின் இருப்பை உறுதிப்படுத்தி கொண்டு நானும் அங்கேயே தங்க வீட்டில் அனுமதி பெற்றேன். இதிலே குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் கம்பஸ் சுற்றாடலில் இருந்த பெருமளவான தமிழர்களில் எல்லோருமே அந்தகாலத்தில் மீளகுடியமர பயப்பட்டார்கள் அல்லது தடுக்கப்பட்டார்கள். முதலாவதாக தனியே துணிச்சலாக சென்ற பெருமையை அந்த அறையில் தங்கியிருந்த நாமே பெற்றுக்கொண்டோம்.

“மாலை என் வேதனை கூட்டுதடி” என்ற சேது பட பாடல் என் காதில் situation songஆக ஒலித்தபடி இருந்தது. இரவும் நெருங்கியபடி இருந்தது. காடையர்கள் யாரும் இங்கே தமிழர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு வந்தால் அப்பீல் இல்லை. தப்பிக்கவும் ஒரு வழியுமில்லை.


வேளைக்கே (5மணிக்கே) இரவு சாப்பாட்டை எடுத்து வந்து 5.30மணிக்கெல்லாம் அறையில் பதுங்கி கொண்டோம். இரவு நெருங்க நெருங்க கால்களும் தன்பாட்டிற்கு மெட்டிசைக்க தொடங்கியது. சத்தம் போடுவதில்லை, lightகளை போடுவதில்லை என்ற முடிவுகளை நாங்கள் முன்பே எடுத்திருந்தோம். அறைகளில் இரகசியம் பேசியபடியும் நாய்கள் குரைக்கும்போது பேயடித்தது போல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தபடியும் இருந்து நேரத்தை ஓட்டினோம். Table lambஐ கொண்டு ஒருவாறு அவசிய தேவைகளை பூர்த்தி செய்தோம்.


எனது அறையும், நண்பர்கள் இருவரினது அறையும் இருந்தது முதலாவது தளத்தில். எனவே 1க்கு போவதென்றால் கீழே இறங்கி சிறிது தூரம் நடந்து செல்லவேண்டும். ஏனெண்டா பாத்றூம் இருந்தது கீழே. முதலேயே பயந்து வேர்த்து விறுவிறுத்து போய் இருந்த எங்களுக்கு கீழே போவதென்ற பேச்சுக்கே இடமில்லை. எனவே முதலாவது தளத்தில் உள்ள பல்கணியை பயன்படுத்தி கீழே இறங்காது வேலையை முடித்துக்கொண்டோம்.

இவ்வாறு நிம்மதியின்றி கழிந்தன பல இரவுகள். இனியும் ஏதாவது வெடித்தால் பிரச்சனை ஆகிவிடுமென்பதாலும் தொடர்ச்சியாக பயந்து கொண்டு இருக்கேலாது என்பதாலும் கிட்டதட்ட 2கிழமையின் பின்னர் கஷ்டப்பட்டு வெள்ளவத்தையில் வீடு தேடி அங்கேயே குடியேறினோம். பின்னர் என்ன நாங்களும் வெள்ளவத்தையில் தமிழ்கலர்களை பார்த்து ஜொள்ளுவிட்டபடி தெருக்களில் அலைந்து திரிந்து படிப்பையும் கோட்டைவிட்டோம்.


இப்பிடிதான் பின்னால அலைஞ்சு திரிஞ்சம்

வீடுதேடின படலத்தையே இன்னொரு பதிவில சொல்லலாம் அந்தளவு கஷ்டப்பட்டோம். இதுக்குமேலேயும் இதை இழுத்துக்கொண்டு போகமுடியாது. எனவே முடிக்கிறேன். கஷ்டப்பட்டு பொறுமையா வாசிச்ச எல்லோருக்கும் ரொம்ப நன்றீங்கோ.

சுபம்

பாண்புட்டியும்(Barn Buddy) FaceBookம்

இண்டைக்கு விடிய நான் கத்தரிக்காயும் தக்காளியும் பயிரிட்டிருக்கன்டா Fertilizerம் கணக்கா போட்டிருக்கு பின்னேரம் போய் உடன யாரும் ஆட்டையை போட முதல் அறுவடை செய்திடணும். இன்னும் நாய் வாங்கேல அதுதான் பெரிய சிக்கல்” எனது நண்பனொருவன் தனது சக நண்பனொருவனுக்கு இவ்வாறு கூறிக்கொண்டிருந்தான். அதற்கு மற்ற நண்பன் கூறுகிறான் ”என்னட்ட நாய் இருக்கு அதால பெரிசா யாரும் களவெடுக்க மாட்டாங்க.நேற்று நான் Maximum எல்லாருட்டையும் களவெடுத்து கனக்க சம்பாதிச்சன்டா. இணடைக்கு புதிசா ஏதாவது பயிரிட்டா சரி.”

இவர்கள் கதைப்பதை கேட்டுக்கொண்டிருந்தா எனக்கோ தலை சுற்றியது. என்னடாப்பா இவங்கள் கம்பஸிற்கு வந்தும் வீட்டுத்தோட்டம் செய்யுற நல்ல முயற்சியுள்ள பயபுள்ளகளோ என்று யோசிச்சேன். அந்தளவு நல்லபழக்கம் எங்களோட படிக்கிற எந்த நாதாரிகளுக்கும் இல்லை என்று வடிவா தெரியும் என்பதால் அவர்களிடம் கதைவிட்டு பார்த்தேன்.

பிறகுதான் புரிஞ்சது. அவர்கள் கதைச்சுக்கொண்டது, FaceBookல் உள்ள ஒரு Game Application ஆனா பாண்புட்டி விளையாட்டைபற்றி. (BarnBuddy என்பதுதான் அதன் உச்சரிப்பென்றாலும் எங்களால் பாண்புட்டி என்று செல்லமாக இந்த வியையாட்டு கூறப்படுகிறது)
Barn Buddy Logo

அந்த நேரத்தில் எனக்கு இதை பற்றி சற்றும் தெரியாதபோதும் எல்லோரும் இதைபற்றி பெரிசாக சொன்னதால் இதில என்னவோ நல்ல சுவாரஷ்யம் இருக்கு என்பதை புரிந்து கொண்டு அவர்கள் சிலர் விளையாடும்போது பார்த்தேன். சும்மா சொல்லகூடாது சுப்பராகதான் இருந்தது.

இந்த விளையாட்டின் theme, தோட்டம் செய்து points பெறுவது. FaceBookல பல Game Applications(Vampire, WereWolves, MouseHunt, KickMania..etc) இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் திடீரெண்டு எல்லோர் மத்தியிலும் பிரபல்யம் அடைந்து வெற்றிநடை போடுகிறது இந்த பாண்புட்டி மன்னிக்கவும் பான்படி(BarnBuddy).

எனது நண்பர்களில் Firstல் உள்ளவரின் தோட்டம் கோழி நாயுடன்

இந்தவிளையாட்டில் reallity என்பது சிற்பம்சம். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட விதைநிலத்தில் கொத்தி விதைத்து நீர் ஊற்றி உரமிட்டு பயிரிடலாம். அதைவிட வேறு நண்பர்களின் தோட்டத்திற்கு சென்று அவர்கள் பயிரிட்டதையும் களவெடுத்து காசு உளைப்பது மட்டுமன்றி அவர்களின் தோட்டத்திற்கு களைகளையும் பூச்சிகளையும் பிடித்து விடலாம். சுருக்கமாக சொல்ல போனால் சொந்தமாக தோட்டம் செய்யும் உணர்வை பெறலாம்.

களைகள் மற்றும் பூச்சிகளுடன் ஒரு தோட்டம்

விளையாடுவோர் எடுத்துள்ள Coints அடிப்படையில் உரங்களையும் விதைகளையும் வாங்கிபயிரிடலாம். இதுலுள்ள இன்னுமொரு காமடி என்னெண்டால் தோட்டத்துக்கு சொந்தமா நாயை வாங்கினா மாத்திரமே களவு போவதை கட்டுப்படுத்தலாமாம். இதற்கு குறிப்பிட்ட Credits இருக்கணும் இல்லாவிடில் அவரது Barn Buddy requestஐ 10பேர் accept பண்ண வேண்டும். இந்த requestகளை acceptபண்ண வைப்பதற்காகவே சிலர் நண்பர்களுக்கு Milk packet சிற்றுண்டிகள் போன்றவற்றை வேண்டி கொடுக்கின்றனர். இதைவிட மேலே சென்று இதுக்காகவே mail create பண்ணி Facebook account open பண்ணி அதற்கு requst அனுப்பி நாய் வாங்குகிறார்கள் சிலர்.

இந்த விளையாட்டில் Credit Cardம் Acccept பண்ணபடுகிறது. நல்ல காசுள்ளவரா நீங்கள்? அப்படிஎன்றால் உங்களுக்கு பாண்புட்டியில் ஒரு கலக்கு கலக்க முடியும் உங்களுக்கு தேவையான coints இல்லாவிடின் cerdit card பயன்படுத்தி தேவையானதை வாங்கி கொள்ளலாம்.

இதை விளையாடுவோர் சொல்கிறார்கள்: இதை விளையாடுவதால் மனதில் திருப்தியும், முகத்தில் ஒருவித பொலிவும் ஏற்படுகிறதாம். ஏனென்றால் சொந்தமாக தோட்டம் வைத்து பயிரிட்டு பணம் சம்பாதிக்கும் உணர்வை தருகின்றதாம் இது. Facebookல் இதை ஒத்த விளையாட்டுக்களான FarmVille, Farmpals, FarmTown இருந்தாலும் தற்போதைய நிலவரப்படி நம்பர்1 நிலையில் இருப்பது பாண்புட்டிதான். மற்றையதைவிட இதில் GUI(Graphical User Interface) சுப்பராகும்.


நீங்கள் இதுவரை இன்னும் பாண்புட்டி விளையாடாதவரெனின் இன்றே தொடங்குங்கள் உங்கள் தோட்டத்தில் பயிரிட...

தோட்டம் செய்வோம் பணம் சம்பாதிப்போம் சொந்த காலில் நிற்போம்.!!!!

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்