அந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம்

வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி செய்யலாம் என்ற முடிவோட கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே பழைய வேலையை விலகி, யாழ்ப்பாணத்தில் போகும்வரை நிம்மதியா தங்கியிருந்தேன். இருக்கறதவிட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படுறது கூடாதெண்டாலும் அண்ணா மற்றும் பல நண்பர்கள் சிங்கப்பூரில் இருக்கும் நம்பிக்கையுடன் அந்த Risk உள்ள முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

இருக்கிற நேரமெல்லாம் StarCricket, TenCricket, DiscoveryChannel, VijayTV எண்டு TVயோடயும் நல்ல நித்திரையோடும் நாட்கள் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் போகவேண்டிய நாள் கிட்டகிட்ட டென்சனும் எகிறிக்கொண்டிருந்தது. அப்பதான் சைனீஸ் New Year வந்த நேரம். சிங்கப்பூரில இருந்த எங்கட கனக்க பசங்க இந்தோனிசியாவுக்கு Trip போக இருந்தாங்க. எங்கட அண்ணா (நிருத்திகன்) மற்றும் அவரின் நண்பர்கள் சிலர் மலேசியா-லங்காவிக்கு போக பிளான் பண்ணியிருந்தாங்க.

பிரசன்னா சுபோசன்  மணி நிருத்தி சுற்றுலாபெண் கோபிலன் அரவிந்தன் பிரகாஷ்   அமலன் 
நான் சிங்கப்பூர் போக முதல் கிழமைதான் சைனிஸ் New year. அந்த Trip போற பிளான வழமைபோல இரவு அம்மாவோட கதைக்கேக்க அண்ணா சொல்றார். அம்மாவும் ஓகே நல்லா enjoy பண்ணு. ஆனா கடலுக்கு போறியா? கடல் விளையாட்டு வேணாம் கவனமா போட்டு வா எண்டு சொன்னாங்க. ஆனா கேட்டுக்கொண்டிருந்த எனக்கு சும்மா கடல் விளையாட்டை மறிப்பது கொஞ்சம் தேவையில்லாதது மாதரி அப்ப பட்டது. கடலுக்கு போகவே வேணாமெண்ட மாதிரி அப்ப சொல்லியிருந்தாங்க.

லங்காவி போய்ச்சேர்ந்து முதல் நாள் உடனேயே கோல் பண்ணி அப்டேட் பண்ணினார். ஆனா இரண்டாவது நாள் இரவு அண்ணாட்ட இருந்து கோல் வரும் கோல் வரும் எதிர்பாத்தும் வரல. மலேசியா நம்பருக்கும் அடிச்சா ரெஸ்போன்ஸ் இல்ல. கனக்க நேரம் கழிச்சு ஒருமாதிரி போல் வந்துச்சு. ஹோட்டல் வந்துசேர நேரமாச்சு அதாலதான் போன் பண்ண முடியல என்று காரணம் நிருத்தியிடம் இருந்து வந்தது. கோல் வராம இருக்கேக்க தேவையில்லாத பயங்கள் வந்து போயிருந்தாலும் கோல் வந்தாப்பிறகு நிம்மதியா படுக்கப்போனம். 

அடுத்தநாள் கல்யாணவீட்டு நாள் இரண்டு உறவினர் வீட்டு கல்யாணம். முதலாவதுக்கு போய் சாப்பிட்டு அடுத்ததுக்கு போக அம்மா அப்பா பிளான் பண்ணியிருந்தாங்க. முதலாவதுக்கு போட்டு அரக்கபறக்க சரியான பதட்டத்தோடு வந்தாங்க. எல்லாம் வழமை போலல்லாமல் வேறமாதிரி இருந்தது. வந்ததும் வராததுமா Tripக்கு போன 2பேர கடலில காணேலயாம் எண்டு ஒரு கடும் பதட்டத்தோட சொன்னாங்க.

கோபிலன் சுபோசன் JetSkiல் 
கல்யாணவிட்டில இருக்கேக்க அண்ணாட்ட இருந்து கோல் வந்திருக்கு. இந்த விசயத்த கேட்டோன ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு ”ஐயோ முருகா” எண்டு தன்னைஅறியாமல் கத்தியிருக்கிறார் அம்மா. அப்பாவுக்கு உடனே விசயத்த சொல்லேல. அப்பா இன்னும் குழம்பக்கூடியவர். வீட்ட வந்து முற்றத்தில ஏறக்கேதான் அப்பாக்கு விசயம் சொல்லப்படுகிறது. அப்பாவும் என்ன நடந்திச்சு? எங்க நடந்திச்சு? எண்டு என்ன செய்யிறதெண்டு தெரியாமா அம்மாட்ட கேக்கிறார். அம்மாவோ சரியான depressionனோட தேவையில்லாம அப்பாவோட சண்டை பிடிக்கிறார். போக வேண்டிய அடுத்த முக்கிய உறவுக்காரருக்குரிய கல்யாண வீடும் செல்லாக்காசாகிறது. ஒருத்தருக்கும் என்ன செய்யிறதெண்டு விளங்கேல.


அண்ணா லேசில கஸ்டமான விசயங்கள அம்மா அப்பாக்கு சொல்லமாட்டார். ஆனா இப்ப சொல்லியிருக்கிறார் எண்டபடியா விசயம் சரியான பாரதூரம் எண்டு எனக்கு விளங்கினது. ஆனா matter பெரிசா இருக்காதெண்டமாதிரி நான் முகத்த pleasanta வைச்சிருக்க try பண்ணிக்கொண்டிருந்தேன். ஏனெண்டா அம்மா அப்பாவுக்கு இருக்ககூடிய ஒரே ஒரு ஆறுதளிக்ககூடிய நபராக நான் மட்டுமே அப்போது இருந்தேன்.

அப்பா கதிரையில இருக்கிறதும், hallல இருக்கிற சாமிப்படங்கள ஒவ்வொண்டா கும்பிடுறதும், அங்கயும் இங்கயும் நடக்கிறதுமா ஒரு விசர்பிடிச்ச மாதிரி நடந்துகொண்டிருந்தார். கடவுள் மேல் எல்லா பாரமும் பொறுக்கப்பட்டிருந்தது. அம்மா இடக்கிடை இவங்களுக்கு சும்மா ஒரு இடத்தில இருக்கதெரியாது சும்மா trip fun எண்டு சுத்தி விலங்கத்தில மாட்டத்தான் தெரியும்; நிருத்திக்கு கட்டுப்பாடு இல்ல எண்டு தங்களது இயலாமையை வேறொருவிதமா காட்டிக்கொண்டிருந்தாங்க. இது பெரிய்ய மாட்டர் இல்ல ஒரு பிரச்சினையும் இருக்காது எங்கிறமாதிரி காட்டி சமாளிப்பம் எண்டு நிருத்தி ஆக்களுக்கு சப்போர்ட் பண்ணி கதைக்க போய் நான் நல்லா வேண்டிக்கட்டிக்கொண்டேன்.


ஒரு கிழமைல நான் சிங்கப்பூருக்கு வெளிக்கிடணும் போக முதல் interviewக்கு prepare பண்ணி பாக்கவேண்டியதொன்றும் பாக்கிற மனநிலை அப்போது சுத்தமா இல்ல. எல்லாம் சுத்த சூனியமா இருந்தது. அந்தநேரம்வரை காணம போன இரண்டு பேரின்ர பெயரும் வடிவா கேக்க முடியல. அவங்க கோபிலன் சுபோசன் அண்ணா எண்டு கொஞ்சம் கழிச்சுதான் தெரிய வந்திச்சு. இதில கோபிலன் அண்ணா எங்கட  பாடசாலை தமிழ்மன்றத்தின் தலைவர், இந்துமாமன்றத்தின் செயலாளாளரா இருந்த 6.2அடி வரையுள்ள உயரமான அக்ரீவான ஆள். சுபோசன் அண்ணா எனக்கு கம்பஸுக்கு வர கொஞ்சம் முதல்தான் தெரியும். கம்பஸில் எங்கட அண்ணன்ர batch. எங்கட ஒருவருட சீனியர். அடக்கமான கோபிலன் அண்ணாக்கு உயரத்தில எதிர்மாறான கட்டையான ஆள்.

அமலன் பிரகாஷ்  மணி சுபோசன் நிருத்தி கோபிலன் அரவிந்தன் பிரசன்னா
Chinese New Year விடுமுறை திங்கள் செவ்வாய் இருந்ததால் லங்காவி நோக்கி அண்ணனின் (நிருத்தியின்) நண்பர்கள் எல்லாமாக ஒன்பதுபேரின் பயணம் வெள்ளிக்கிழமை இரவு (2013-02-08) சிங்கையிலிருந்து ஆரம்பாமாகியிருக்கிறது. சனி நண்பகல்1மணி அளவில் லங்காவி செல்வதற்கு ஜெட்டியை(லங்காவி ஒரு தீவு) அடைகின்றனர். லங்காவியை சனி சாயங்கால வேளை 6:30 அளவில் வந்தடைகின்றனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழைமை காலையிலிருந்து பல விளையாட்டு activityகளை முடித்துவிட்டு இறுதியாக ஞாயிறு மாலை மங்கும் நேரத்தில். ஏறத்தாழ 7:00PM அளவில் லங்காவி Tripன் அடுத்த உச்சகட்ட FUN ஆனா JetSki சவாரிக்கு ஆரம்பமாகிறார்கள். JetSki என்பது கடலில் போவதற்குரிய Scooter போன்ற ஒரு vehicle. இதன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால் என்னதான் பெரிய்ய அலை அடித்தாலும் இது இலகுவில் பிரளாது தாழாது.


வந்தவர்கள் இரண்டு இரண்டு சோடியாக பயணிக்கிறார்கள். முதலில் கோபிலன் சுபோசன் அண்ணாமார் சேர்ந்து பயணிக்க ஆரம்பிக்கிறார்கள்.  (உண்மையில் முதலில் கோபிலனும் நிருத்தியும் ஒன்றாகவே JetSkiல் செல்வதாக இருந்தது. ஆனாலும் பராசேலிங்(Para sailing) இலிருந்து நிருத்தி வருவது தாமதமாகியமையால். கோபிலனும் சுபோசனும் சேர்ந்து செல்ல தொடங்கினர். ) ஏறத்தாழ 20நிமிடப்பயணத்தின் பின் இவர்கள் பயணித்த JetSkiன் எஞ்ஜின் செயலிழக்கிறது. இதுவரை இருவரையும் அவ்வளவாக நெருங்காத சனி இவர்களை கட்டி அணைக்க ஆரம்பிக்கிறது. மீள எஞ்ஜினை தொடக்க எடுத்த முயற்சிகள் பயனளிக்காமல் போகிறது. அக்கணமே கடல் அந்த செயலிழந்த JetSkiஐ தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவருகிறது.

7மணி ஆகியிருந்தாலும் கடற்கரையில் இருக்கின்றபோது இருட்டாகின்றதை உணரமுடிவது கடினம். இருந்தபோதிலும் அப்படியே சூரியன் மறைகின்றபோது சடுதியாக கும்மிருட்டாகிவிடக்கூடிய, அபாயம் அப்போது இவர்களுக்கு எமனாக மாறுகிறது. இவர்கள் சுதாரிப்பதற்குள் கடும்வேகமாக இருளதொடங்குகிறது. இந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலிருந்து தப்பிக்க 2வழிகள்தான் அப்போது இருந்தது.

கோபிலன் சுபோசன் JetSkiல் புறப்பட தயாராக
ஒன்று மெதுவாக நீந்தி Life Jacket உதவியுடன் கரையை அடைவது. இன்னொன்று எதாவது உதவிவரும்வரை காத்திருப்பது. இருவருக்கும் நீச்சல் தெரியாது. JetSkiயை விட்டு இறங்கி நீரில் நீந்த முயற்சித்து கரையை அடைய முடியாத சந்தர்ப்பத்தில் மீண்டும் JetSkiயை அடைவதோ கனக்கநேரம் கடலிலேலே அப்படியே இருப்பதோ முடியாத காரியம். எனவே இரண்டாவது வழி புத்திசாலித்தனமாக தெரிவதால் அதையே தேர்ந்தெடுக்கின்றனர்.

இவர்களுடன் இந்த கடல் விளையாட்டுக்கு வந்த மற்றவர்கள் கரையை அடைந்து இவர்களுக்காக காத்திருக்கும்போதுதான் இவர்கள் காணாமல் போனது தெரியவருகிறது. உடனே JetSki சொந்தக்காரர்களுடன் சேர்ந்து இவர்களை தேட ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் இவர்கள் தேடியது கொஞ்சம் கரையை அண்டித்தான். ஆனால் காணமல் போன அந்த JetSki கரையை கடந்து கொஞ்சம் ஆழ்கடலுக்கு சென்றது மட்டுமில்லாமல் கடல் அலையும் தன்பாட்டிற்கு இன்னும் உள்ளே அவர்களை இழுத்துக்கொண்டிருந்தது.


காப்பாற்ற சென்றோர் சென்ற JetSkiகளின் அசமாத்தத்தை காணாமல் போன கோபி சுபோ தூரத்தே கண்டிருந்தாலும் அவர்களை கூப்பிடவோ சைகை காட்டவோ முடியாத நிலை. காப்பாற்ற சென்ற படகு ஒன்று இவர்களுக்கு கொஞ்சம் அண்மையில் சென்றும், இவர்களது கத்தல் கேட்கவில்லை. கும்மிருட்டு நிலமையை மேலும் மோசமாக்கி கொண்டிருந்தது. இரவு 10மணி அளவில் JetSkiன் சொந்தக்காரர்களால் பொலீசுக்கு தகவல் அறிவிக்கப்படுகிறது .

JetSkiers, மற்றைய படகுகளில் தொடர்ந்த தேடுதல் அன்று  நள்ளிரவு ஏறத்தாழ 12மணியை எட்டியும் பயனளிக்கவில்லை. அந்த ஞாயிறு இரவை கழித்தால் எப்படியும் மறுநாள் காலை தங்களை பிடித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை காணமல்போன சுபோ கோபிக்கு இருந்தது. ஆயினும் லங்காவியை விட்டு கடலலை தங்களை தூரத்தே தள்ளிக்கொண்டு போவதை அவர்களால் அப்போது உணர முடிந்தது.

மற்ற ஆறு பேரும் வாழ்க்கையை சுத்தசூனியமாக வெறுமையாக உணர்ந்தனர். ஹொட்டலுக்கு சாப்பாட்டை வாங்கிச்சென்று ஒருவரும் ஒருவருடனும் ஒரு வார்த்தை பேசாமல் கடமைக்கு சாப்பிடுகின்றனர். நிருத்தியும் கோபிலனும் ஒரே அறையிலே அந்த ஹொட்டலில் தங்கியிருந்தனர். கோபிலன் உபயோகித்த பச்சை தூவாய் அப்படியே கட்டிலில் விரித்தபடி கிடந்தது. அதை பார்த்தபோது கோபிலனே அங்க இருப்பது போல ஒரு பிரமையை நிருத்திக்கு ஏற்படுத்தி கிலேசப்படுத்தியது. குழப்பத்துடன் அந்த அறையை விட்டு வெளியேறி வேறு அறைசென்று கழித்தார் அந்த இரவை.

அடுத்த நாள் விடிய 8மணியளவில் நிருத்தி அரவிந்தன் அண்ணா ஆகியோர் சம்பவ இடத்துக்கு செல்கிறார்கள். அப்போது பொலிஸ் ஒரு JetSki கண்டெடுத்ததாகவும் அதில் Body ஒன்றும் பிடிபடவில்லை என்றும் சொன்னார்கள். தேடச் சென்றவர்களுக்கு இப்படியான தகவல் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இறுதியில் அது காணாமல் போனோர் சென்ற JetSki இல்லை என்பது தெரியவந்தமை அவர்கள் எப்படியும் உயிரோடுதான் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தது.

நிருத்தி கோபிலன் காணமல் போக முத நாள் பகல்
பொலிசுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டமையால் Navy, Marin Force, Emergency Force ஆகியோர் தேடுதலுக்கு தயாராகி தேடுதலில் ஈடுபட்டனர். எனினும் அவர்கள் முழுமனதோடு தேடினார்களா? என்பது கேள்விக்குறியே. கடலில் சென்று கொஞ்சம் தேடிவிட்டு மீன்பிடிக்க தொடங்கிவிடுவார்கள் என்ற நல்ல அபிப்பிராயம் அவர்களுக்கு அப்போது இருந்தது. எனினும் பொலீசில் இருந்த தமிழர் ஒருவர் செய்யக்கூடிய சில உதவிகளை செய்ததாக நிருத்தி கூறுகிறார்.

இதே நேரத்தில்  சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் மலேசியாவுக்கான இலங்கை தூதரகங்களிற்கு தகவல் அறிவிக்கப்பட்டு அவர்கள் மூலமான எதாவது உதவி கிடைக்குமா என்று இவர்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் விடுமுறை காலம் என்பதால் அவர்களின் மூலம் ஒரு உதவியும் கிடைக்கவில்லை.

இவர்களுக்கு விடயம் அறிவித்தமையால் எதாவது செய்திகளில் வந்து இலங்கையில இருக்கிற அப்பா அம்மாக்கு தெரிய வந்தால் அதை அவர்களால் தாங்க இயலாது என்பதால் கடைசியாக நிருத்தி யாழ்ப்பாணத்திலுள்ள எங்களுக்கு தகவல் தர முடிவெடுக்கிறார். மதியம் போல் Tripற்கு வந்த மற்றவர்களும் இணைந்து காணாமல் போனவர்களின் பெற்றோருக்கு அறிவிப்பதன் அவசியத்தை வெளிப்படுத்த அவர்களின் உறவினர்களுக்கு தகவலளிக்கப்படுகிறது.

இதன்பின் மாறிமாறி இவர்களின் உறவினர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள். ”நீங்கள் அவர்களுடன் சண்டையிட்டீர்களா? ஏன் கடலுக்கு சென்று வீழ்நதார்கள்” என்று விளக்கமில்லாமல் சகட்டு மேனிக்கு கேட்கவும் செய்திருந்தார்கள். என்ன செய்வது எல்லாத்தையும் சகித்து அவர்கள் இயன்றளவு சமாதானமாக பதிலளித்துக்கொண்டிருந்தார்கள்.

நேரம் போகப்போக அவர்கள் இன்னும் பிடிபடாமை அவர்கள் சென்ற JetSkiயை கூட கண்டுபிடிக்க முடியாமை அவர்கள் எங்கயோ தப்பி இருக்ககூடும் என்ற நம்பிக்கையை கூட்டியிருந்தது. இந்த நம்பிக்கைக்கு மகுடம் சூட்டுவதுபோல் இறுதிக்கட்ட மிகவும் பலமான ஆயுதம் தேடுதலுக்கு எடுக்கப்படுகிறது. Helicopter எடுத்து கொஞ்சநேரம் தேடுதலில் ஈடுபட்டால் அவர்கள் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை இவர்களுக்கு துளிர்க்கிறது. மலேசியா மற்றும் சிங்கப்பூர் High commissioner ஊடாக அதை செய்யலாம் என்றால் அவர்கள் விடுமுறையில் இருந்தமையால் அது கைகூடவில்லை.

நண்பர்களுக்காக இவர்கள் தேடி அலைவதை பார்த்த சுற்றுலாப்பயணி ஒருவர் அவர்கள் எப்படியும் இந்தோனேசியாவை அடைந்திருப்பார்கள். கவலைப்பட தேவையில்லை என்று ஆறுதல் கூறியிருந்தார். திங்கள் அன்று சப்பாடு ஒன்றுமே இல்லாமல், இவர்கள் விசர் பிடித்தவர்கள் போல் தேடுகின்றனர்.


Tourist செல்லும் உலங்குவானூர்தியை ஒரு அரைமணி நேரத்துக்கு வாடகைக்கு எடுக்கும் முயற்சியில் வெற்றிபெறுகின்றனர். நிருத்தியும் பிரகாஷ் அண்ணாவும் ஓட்டுனரோடு சென்று அவர்களை தேடுகின்றனர். தேடும்போது Helicopter கதவை துறந்தாலே வடிவாக கீழே பார்க்கலாம் கதவை துறக்கட்டா? என்ற ஓட்டுனரின் கேள்வியுடன் கதவு துறக்கப்படுகிறது. கதவை துறந்தால் இரண்டு பக்கமும் ஒன்றுமே இல்லை. அப்படியே வெளி.

ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு சரியாக இணைக்கப்பட்ட பட்டிகள்(belt) இல்லை. இருப்பது மிகவும் லூசாகவே இருக்கிறது. நடுக்கடலில் சென்று அங்கும் இங்கும் திருப்பும்போது அப்படியே நடுக்கடலில் தேடச்சென்றவர்களே விழக்கூடிய அபாயம். உயிர்காப்பு (life jacket) அங்கிகளே பொருத்தப்படவில்லை. அங்கே இருக்கும் கம்பிகளையே இறுகப்பற்றி தேடுகிறார்கள். நடுக்கடலில் உயரத்திலிருந்து குத்தன பார்த்தபடி ஒழுங்கான பட்டிகள் இல்லாமல் தேடுவதென்பது மிகவும் கடினமான காரியம். ஆயினும் தங்கள் நண்பர்களுக்காக உயிரை பணயம் வைத்து தேடல் தொடர்கிறது. பெரிய்ய எதிர்பார்ப்போடு மேற்கொண்ட இந்தத்தேடுதலும் இறுதியில் தோல்வியில் முடிகிறது.

இதேநேரம் காணமல் போனவர்கள் மலாக்கா கலவாய் ஊடாக அந்தமான் கடலுக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தனர். நடுவெயிலில் நடுக்கடலில் எந்தவொரு உதவிக்கான சமிக்ஞையும் இன்றி இவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர். ஒரு நாள் கடக்கப்போகிறது சப்பாடோ பச்சைதண்ணியே எதுவுமில்லை. இருவரும் ஒரே நேரத்தில் அயர்ந்தால் பிரச்சனை ஒருவர்மாறி ஒருவர்மாறி நித்திரை கொள்கிறார்கள். அதுவரை கிட்டத்தட்ட 15கப்பல்கள் தூரத்தே இவர்களை கடந்துபோகின்றது. இருக்கும் ஒரேஒரு ஆயுதம் இவர்களின் LifeJacket கடும் வெயில் இரவு நேரங்களில் கடும் குளிர்காற்று இவற்றிலிருந்தெல்லாம் பாதுகாக்க இருப்பது அது ஒன்று மட்டுமே.

இருந்த அனைத்துக்கதவுகளும் அடைக்கபட்டுவிட்டது. அந்தநாளுக்கான தேடுதல்களும் நிறுத்தப்டுகிறது. காணமல்போய் சரியாக ஒரு நாள் கழிந்துவிட்டது ஒரு முழுநாள் இரவும் அடுத்தநாள் பகலும். நடுக்கடலில் இருவர்மட்டும் அந்த சிறிய scooterல் சாப்பாடு தண்ணி இன்றி ஒருநாள் முழுவதும் இருப்பதென்பது எவ்வளவு கொடுமையான காரியம். நினைத்துப்பார்த்தலோ அடி வயித்தில் எதோ செய்யும்.

இந்த கடும் வெப்பபத்தில் வெந்தது பற்றி கோபிலன் அண்ணா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
” மதிய நேரங்களில் சூரியனுடைய வெப்பம் மிக கொடூரமானது. சூரிய ஒளி கதிர்கள் நம்மை நேரடியாகவும் கடலில் ரிபிலக்சன் (reflection )  ஆகியும் தாக்கியது. இந்த குறிப்பிட்ட நேரங்களில் எமது கைமுடி எரிந்து மணப்பதை உணர்ந்தோம்! ”


இரண்டாவது இரவு திங்கள் ஆரம்பமாகிறது. இயற்கையும் தன் பங்கிற்க்கு இன்னோர் திருவிளையாடலை மின்னல் வடிவில் அரங்கேற்கிறது. பளிச் பளிச்சென்று வெட்டிச்சென்று இருளை பகலாக்கா முயன்று கொண்டிருக்கிறது மின்னல். மின்னல் தங்களை தாக்கிவிடுமோ என்று சரியாக பயந்தாலும் ஒரு மாதிரி கடவுளின் கருணையால் கொஞ்சநேரத்தில் நின்றுவிட்டது. நன்றாக நடு சமுத்திரத்தை நோக்கி அலையோட்டம் அவர்களை தள்ளிவிட்டதால், குறிப்பிட்ட நேரத்துக்கொருக்கா விட்டுவிட்டு நல்ல பலமான அலை அவர்களை தாக்கியபடியே இருந்தது. இந்தப்போராட்டம் கடலுக்கும் அவர்களுக்குமான உயிருக்கான போராட்டம். கடலோ தனது எல்லா அஸ்திரங்களையும் கொண்டு தான் வல்லவன் என்று நிருபிப்பதிலயே முனைப்பாக இருந்தது. இவர்களோ defensive game modeல். ஒவ்வாரு கணமும் எதாவது கரைவராதா மீட்பு உதவிவராதா என்று ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.

இரண்டாவது நாள் செவ்வாய் காலையும் வந்துவிட்டது. உண்மையில் திட்டமிட்டபடி இவர்கள் அனைவரும் இன்று மீண்டும் சிங்கப்பூருக்கு வெளிக்கிட்டுருக்க வேண்டும். ஆனால் நிருத்தி அரவிந்தன் பிரகாஷ் அண்ணா  லங்காவியிலேயே தங்கி இவர்களை தேடும் பணியிலிருக்க மற்றவர்கள் வேறுசில கடமைகளுக்காக சிங்கப்பூரை நோக்கி புறப்பட்டுவிட்டனர்.


மத்தியானத்துக்கு சற்று தள்ளி மழை முகில்கள் சேர்ந்து மழை வருவதற்கான வாய்ப்புக்களை எதிர்வு கூறியபடி இருந்தது. வரப்போகின்ற மழையிலிருந்து மழைநீர் சேகரித்து தங்கள் தாக்குப்பிடிக்கும் சக்தியை அதிகரிக்க பிளாஸ்ரிக் பாக் எதாவது கடலில் ஆப்பிடுகின்றதா எனப்பாக்கின்றனர் கடலில் தத்தளிக்கும் கோபி சுபோ. ஒரு பை அவர்களது ஜெட்ஸ்கியை நோக்கி மிதந்து செல்வதை அவதானிக்க முடிந்தது. எட்டி லாவகமாக அதை தங்களின் வசப்படுத்துகிறார்கள்.

எடுத்து பார்க்கும்போதுதான் தெரிகிறது அதன் நடுவில் ஓட்டை. சுபோசன் அண்ணா அதில் Made In Indonesia இருப்பதை வாசித்து சொல்கிறார். அதற்கு கோபிலன் நாங்கள் இந்தோனேசியாவை அடைந்திட்டம் போல? என அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக சொல்லியிருக்கார். கனக்க நேரத்திக்கு பிறகு இருவரும் நன்றாக சிரிக்கிறார்கள். ஆனாலும் நிலமை அபாயக்கட்டத்தில் மேலும் உள்நோக்கி செல்கிறது.


அந்த சிறிய JetSkiஇலிருக்கும்போது அவர்களுக்கு ஒரு 20m தூரத்தில் சுறாக்கள் தங்கள் துடுப்புகளுடன் உலாவித்திரிவதை அவதானிக்க முடிந்தது. என்னப்பிரச்சினைகளுக்கெல்லாம் பயப்படுவோமோ எல்லாம் சேர்ந்து ஒருமிக்க மரணபயத்தை காட்டுகின்ற சூழ்நிலை.  இரண்டுநாள் முழுதாக ஆகப்போகிற தருணம். கொடும்வெயில் வாட்டிஎடுத்து இவர்களது தோலெல்லாம் கருகிவிட்டது. மரணமும் எமனும் கிட்ட நிண்டு எகத்தாளம் போடுவதை இவர்களால் உணரமுடியாமல் இல்லை. வேறு வழியில்லாமல் இறுதியாக, தாங்க முடியமால் கடல்தண்ணியை குடிக்கிறார்கள். இதுவரை ஒரு துளி தண்ணியோ சாப்போடோ இல்லை. நட்ட நடு சமுத்திர வெயிலில்.


நீண்ட நேரம் கழித்து ஒரு மீன்பிடிப்படகு கண்ணிற்கு புலப்படுகிறது. இதைவிட்டால் கதை கந்தல். தங்களது Life Jacketஐ உயர்த்தி பிடித்து சைகை காட்டி அவர்களது புலத்திற்குள் தங்களை கொண்டுவர முயல்கின்றனர். பழைய குருடி கதவை துறடி போல இருந்த முதல் கத்தல் பின்னர் முயற்சி பலனளிக்கின்றது. அந்தப்படகு அவர்களை நோக்கி வருகின்றது. வெளிவீதி வலம் வரும் நல்லூர்க்கந்தனின் அழகை அருளை அந்தப்படகில் வரும் மீட்பர்களில் காண்கின்றனர். நாள்தோறும் பத்தோடு பதின்னொன்றாக காணமல் போவோரின் எண்ணிக்கையில் சேர இருந்தவர்களின் விதி மாற்றியமைக்கப்படுகிறது பலரின் வேண்டுதல்களால்.

அவர்களை கண்டவுடன் கத்தி அழுகிறார்கள். இரண்டு நாட்கள் சாவின் விளிம்பில் இருந்து தப்பிய அந்த உணர்ச்சியை ஒப்பிக்க ஒரு உவமையும் இல்லை. அவர்கள் காப்பாற்றி ஏற்றும்போதுதான் தாங்கள் தாய்லாந்தை நோக்கி வந்ததை உணர்கின்றார்கள். படகுக்கப்டன் கரையோரக்காவல்துறைக்கு தகவலளித்து பிடிபட்டவர்களை கூட்டிவர அனுமதிபெற்றார். கயிற்றுஏணி உதவியுடன் அவர்கள் உள்ளே ஏறுகின்றனர். JetSkiம் உள்ளே எடுக்கப்படுகிறது. 46மணி நேரப்போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.

கோபிலன் சுபோசன் Lankgawkiல் மீண்டுவந்தபின் 
குளிர்தண்ணீர், சாப்பாடு, watermelon போன்றன படகிலிருப்பவர்களால் வழங்கப்படுகிறது. முதன்முதலில் அமிர்தம் உண்ட உணர்வு இவர்களுக்கு. லங்காவியிலிருந்து ஏறத்தாழ 90km தூரம் கடல்அலை இவர்கள் தன்பாட்டிற்க்கு இழுத்துச் சென்றிருக்கிறது. அந்ததாய்லாந்து மீனவர்கள் இரண்டு நாட்களாக கடல் மோசமான நடத்தையை காட்டியதாக கூறினார்கள். தாய்லாந்து குடிவரவு குடியகல்வு அலுவலர்கள் மிகவும் அன்பாக இவர்களை மீண்டும் லங்காவி செல்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொண்டனர்.

லங்காவி சென்றதும் அரவிந்தன் நிருத்திகள் பிரகாஷ் போன்றோரின் பூரிப்பிற்கு அளவே இல்லை. பெரிய்ய எதிர்பார்ப்போடு வந்த சுற்றுலா இவர்களது சுற்றுலா இவ்வாறு சோகமாக மாறுமென எதிர்பார்த்திருக்கவில்லை. எனினும் பலரது வேண்டுதல்களால் கடவுள் ஒரு கவலையான முடிவை தருவதை தவிர்த்து பலருக்கும் பல படிப்பினைகளை கொடுத்திருந்தார்.
பிரகாஷ் அரவிந்தன் நிருத்தி சுபோசன் கோபிலன்
Note: இந்த திகில் சம்பவம் பற்றி விபரணப்படம்(Documentary film) நண்பர் குருபரன் அண்ணாவால் தயாரித்து வெளியிடப்பட இருக்கிறது. அந்த Teaserன் தொடுப்பு இங்கே.

நன்றி கடவுளே..


தகவல் உதவி: கோபிலன், நிருத்திகன்

Cricket சர்ச்சை - Bodyline Series (Leg Theory)

தற்போது நடைமுறையில் உள்ள Cricket rules பல காலங்காலமாக மாற்றங்களுக்குட்பட்டு தற்கால trendற்களுக்கமைவாக polish பண்ணப்பட்டவைதான். அப்படியான ஒரு விதி ஏற்படக்காரணமாக இருந்த சம்பவம் பற்றிதான் இந்தபதிவு சொல்லப்போகிறது.

இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஆஷஸ் போட்டிகள் டெஸ்ட் போட்டிகளில் உலககிண்ணத்துக்கு ஒப்பானதாக கிரிக்கெட் கனவான்களால் மதிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தப்போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு உச்சத்தில்தான். இப்பிடி 1932-33 பருவகாலத்தில் போட்டி நடைபெற இருந்த காலத்தில் அவுஸ்திரேலியான அணி துடுப்பாட்டத்தில் Bradman தலமையில் கப்பலமானதாக இங்கிலாந்தின் காதில் குச்சிய விட்டு ஆட்டுமளவிற்கு தனிக்காட்டு ராஜாக்களாக இருந்தது. துடுப்பாட்டத்தில் இதில் போட்டி வேற அவுஸ்திரேலியா மண்ணில் இங்கிலாந்துக்கு வெடிக்கலக்கம் போட்டி ஆரம்பமாக கனகாலத்துக்கு முதலே ஏற்பட்டுவிட்டது.

More fielders behind the popping crease on the on side at striker’s end

கேவலமான தோல்விகள் ஏற்படாமல் தடுக்க இங்கிலாந்து தலைவர் Jardine புத்திசாலித்தனமான(?) ஒரு திட்டத்தை வகுத்தார். துடுப்பாட்டவீரரின் உடம்பை தாக்ககூடிய Short pitch bouncing பந்துகளை leg stump lineல் அடிக்கடி போடவும் கூடுதலான வீரர்களை leg sideல் catching positionsகளில் சுற்றி அடிக்கி விடவும் திட்டம் வகுக்கப்பட்டது. இப்படியான உடம்பை பதம்பார்க்கும் பந்துவீச்சுக்களையே bodyline or leg theory bowling என்று சொல்கிறார்கள்.திட்டத்தை செயல்படுத்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் Harold Larwood மற்றும் Bill Voce தேர்ந்தெடுக்கபட்டு திட்டமும் இரகசியமாக சொல்லப்பட்டது.

Deadly accurate very fast pacer Harold Larwood

இங்கிலாந்து அணித்தலைவர் எதிர்பார்த்தபடி ஆஸி துடுப்பாட்டவீரர்கள் short pitch deliveriesக்கு மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள் தாக்குதலுக்குள்ளானார்கள் legsideல் விக்கெட்டோடு இணைந்த கால்வட்டத்தில் நிறைந்திருந்த களத்தடுப்பாளர்களுக்கு பிடி கொடுத்து ஆட்டமிழந்தனர். 3வது டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பர் Bert Oldfieldன் மண்டையோடு Harold Larwoodஆல் பதம்பார்க்கப்பட்டு உடைக்கப்பட்டது. இதே போட்டியில் Australia captain Woodfullம் எகிறிவந்த Larwoodன் பந்தால் நெஞ்சில் பதம்பார்க்கப்பட்டார். Wisden சஞ்சிகையால் இவ்வளவு காலம் விளையாடினதிலேயே மிகவும் கேவலமான டெஸ்ட் போட்டி என்று வர்ணிக்கப்பட்டும் பல சச்சரவுகள் குழப்பங்களை ஏற்படுத்திய தொடராக மாறி கிரிக்கெட்டில் ஒரு கறுப்பு புள்ளி குத்தப்பட்ட போட்டியாக மாறிப்போனது. எனினும் வலுவான அணியான அவுஸ்திரேலியாவை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றியீட்டியது.

சர்ச்சைக்குரிய அந்தப்போட்டியின் வீடியோக்காட்சிகள்.



சர்ச்சைக்குரிய இந்த போட்டி தொடரின் பின் விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. Leg side ல் (onside) துடுப்பாட்ட வீரர் நிக்கும் விக்கெட்டுக்கு பின்னான கால்வட்டத்தில் விக்கெட் காப்பாளரை விட கூடுதலாக இரண்டு களத்தடுப்பாளர்களே நிற்க முடியும் என்ற விதி இந்த Bodyline Test seriesக்கு பிறகே MCCயால் கொண்டு வரப்பட்டது.



இது சம்பந்தமான சுவராஸ்யமான தகவல்களை இணையத்தில் தேடி விருப்பமுள்ளவர்கள் அறிந்து கொள்ளுங்கள். மிகவும் சுவாரஸ்யமான topic. யாரும் ஒரு producer தயாரா இருந்தா ஒரு Super படமாவே எடுக்க கூடிய Test series.

பாடல்கள் தரும் பழைய நினைவுகள் - I


டிஸ்கி: இந்த தொடர் பதிவுமூலமாக ஒவ்வாரு பாடல்களும் கேக்கும்போது ஏற்படும் நினைவுகள் தொடர்ச்சியாக பகிரப்படும். பாடல்கள் மூலமாக கடந்து வந்த பாதைகளை அசைபோடுதல் பதிவின் நோக்கமாக இருக்கிறது. 

இடம்பெயர்ந்து சாவச்சேரிக்கு வந்து வெறும் ஒரு மாதமும் ஆகியிருக்காது. 1995பிற்பகுதி அது. ஒரு விடிகாலை நேரம், அண்மையில்தான் றேடியோவுடன் setup செய்யப்பட்ட டைனமோவை சைக்கிளை குப்பிற கிடக்கவிட்டு கையால் பெடலை சுழற்ற தொடங்குகிறார் பெரியப்பா. ஒரு பெரிய்யவீட்டில் நாங்கள் 3குடும்பம் தங்கியிருக்கிறோம். நானும் அண்ணாவும் படுத்திருந்த ஹோலுக்கு அண்மையில் நிலையெடுத்திருந்த றேடியோ, இலங்கை சர்வதேச வானொலியின் அறிவிப்புடன் எனது நித்திரையை குழப்புகிறது. எனக்கும் வேறு சிந்தனை இன்றி படுத்திருந்தபடியே சுழலும் பின்பக்கசில்லின் வால்ரியுப்கட்டை பற்றி அலைவுகாலத்தை கண்இமைப்பொழுதை கொண்டு கணக்கிட முயற்சிக்கிறேன். ஒரே சீராக சில்லு சுற்றுகிறதா இல்லையா என்பதை அறியதான் முயல்கிறேன். என்னை அறியாமலே எனது கவனம் சிதறுகிறது.



அந்த மெட்டின் அடி அந்த இனிமை எனது வழுக்கொண்ட கணிப்பை மேலும் கேள்விக்குள்ளாக்கிறது. என்னால் சில்லு சுற்றுவதை இப்போது உணரக்கூட முடியவில்லை. மார்கழி மாதம் நெருங்கிவிட்ட அந்த மழைக்குளிருக்கு மேலாக அந்த பாடல் மேலும் குளிர்ச்சியை அள்ளி கொட்டுகிறது. வானத்தில் பறப்பது போல ஒரு உணர்ச்சி. அப்போது சினிமா தொடர்பில் அறிவுமட்டம் பூச்சியம். யார் பாடினது இசையமைச்சது ஒண்டும் தெரியாது. ஒண்ணு மட்டும் விளங்கியது பாட்டு மக்சிமம் எண்டு.



இந்தப்பாட்டை ஒவ்வொருமுறை கேக்கும்போதும் இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்த நினைவுகளும் அந்த காலைப்பொழுதும்தான் ஞாபகத்தில்!!! ஒவ்வொரு பாடல்களும் தருகின்ற நினைவுகள் ஏராளம்.

-------------------------------------------------------------------------------

அப்போதுதான் எமக்கு A/L ஆரம்பித்திருந்தது. 2003ன் தொடக்கம். பாடகர் கார்த்திக் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த காலப்பகுதி. சனி ஞாயிறு விடிய 7.30க்கு ScienceHallல Class தொடங்கிடும். விடிய செந்தில்ராஜ் Sirன்ர CombinedMaths. அந்தாள் Time எண்டா Time. என்ன இடி இடிச்சாலும் சரியா 7.30க்கு வகுப்பு தொடங்கிடும். (சுனாமி அடிச்ச அடுத்த நாளே அதேநேரத்துக்கு தொடங்கின punctualityஆளு). Startல வேறகொட்டிலுல நடந்தாலும் கொஞ்ச காலத்துக்கு பிறகு Sience Collegedன்ர தொங்கல் கொட்டிலிலயே விடிய Class permanentஆயிடுச்சு. அந்த கொட்டிலுன்ர அமைப்புதான் எனக்கு எமன்; யாரும் வகுப்புக்கு உள்ளுக்கு போகோணுமெண்டா முன்னாலதான் போகோணும். Class தொடங்கினால் பிந்தி வாற ஆக்கள வடிவா படிப்பிக்கிறவருக்கு தெரியும்.
7.30தொடங்கி பின்னேரம் 3.30மட்டும் பாடங்கள் இருக்கிறதால வடிவா சாப்பிட்டு போகணும்.

என்னதான் தலைகீழா நிண்டாலும் என்னால சரியான நேரத்துக்கு என்னால போகமுடியுறேல. அவ்வளவு ஆக்களுக்கு முன்னால ஒவ்வொருதரமும் பிந்திபோறது. சரியான அந்தரம். ஒவ்வொரு தரமும் போறணைக்குள் போற உணர்வுதான். என்னதான் பிந்திப்போட்டுதுன்னு தெரிஞ்சு குதிரை வேகத்தில் பெடலை மிதித்து வரும்போதும், ஸ்ரான்லி Road ஆரியகுளம் ஏறும் சந்தியில் இருக்கும் சாப்பாட்டுக்கடையில் ShakthiFMலிருந்து ”அடிசுகமா சுகமா சுடிதாரே” என்ற பாட்டை கேட்கும்போது. எனது கால்கள் பெடல்களை நோக்கிய தள்ளுகையை பூரணமாக நிறுத்திவிடும். என்னதான் வகுப்புக்கு பிந்தினால் என்ன? அந்த கடையை கடக்கும் நேரத்தை குறைவாக்கினால் பாடல் என் காதில் ஒலிக்கும் நேரம் கூடுமில்லயா. என்ன மாயமோ மந்திரமோ பெரும்பாலும் 7.40/7.35 நேரப்பகுதியில் அந்த பாட்டு அந்த சந்தியில் ஒலிக்கும். நானும் அந்தநேரத்திலெல்லாம் AI Disableஆகின VBS2 Unit மாதிரிதான் தடுமாறுவேன். எனது கூட்டாளிகள் எல்லோரும் Backbenchers என்றபடியால் பிந்திபோனாலும் அவர்களுடன் சேர்ந்து கொள்வேன்.



இந்தப்பாட்டை எப்ப எங்க முதல்கேட்டன் என்று ஞாபகம் இல்லை. இப்போது கேக்கும்போதெல்லாம் ScienceHall, ஆரியகுளம்சந்தி, ALகாலப்பகுதிதான் ஞாபகத்தில். LoveTodayல் SPBன் குரலின் ”என்னஅழகு” பாடலை மெருகூட்டிய அதே இசையமைப்பாளர் சிவா.


Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்