மாற்றப்படும் வரலாறுகள்!

அனைவருக்கும் பொட்டலத்தின் இனிய புதுவருட வாழ்த்துக்கள்!

நான் இங்க சொல்ல வருவது சிறியதொரு தகவல்தான். ஆனால் இவை ஏற்படுத்தப்போகும் தாக்கங்கள், இப்போது அற்பசுகங்களில் திளைத்திருக்கும் எமக்கு தெரிவதில் நியாயம் இல்லை. இதை மாதிரி இன்னும் எத்தனையோ எனக்கும் உங்களுக்கும் தெரியாமல் மாற்றப்பட்ட வரலாறுகள் பல இருக்கின்றன. எம்மண்ணை பற்றி மற்றவர்கள் சொல்லும் வரலாறுகளை கேட்டபடி இருக்க நாங்கள் ஒன்றும் கிளிப்பிள்ளைகள் இல்லைதானே. யார்யாரோ எப்பிடியெல்லாம் மாற்றினாலும் பிரச்சினையில்லை. நீங்கள் உங்கள் வாரிசுகளிற்கு வருங்கால சந்ததிக்கு சரியானதை சொல்லுங்கள் அதுவே பெரிய விசயம்.



அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில் கந்தரோடையில் உள்ள பிரசித்தமான புராதன சிதைவுகள் உள்ள இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. எவ்வளவோ காலம் யாழ்ப்பாணத்தில் இருந்து குப்பை கொட்டியிருந்தாலும் மிகவும் அண்மையில்தான் கந்தோரடையில் உள்ள அந்த பிரசித்தம் பெற்ற இடத்திற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘கதுறுகொட்ட புராதன விகாரை‘ எனப்பெயரிடப்பட்ட அந்த இடத்தில் விகாரைகள் போன்ற உருவமைப்பில் ஏறாத்தாழ 20 தொடக்கம் 30 வரையிலான புராதன கட்டிட அமைப்புக்கள் காணப்பட்டன.



ஆனால் வழமையான, ஏன் சிறிய அளவிலான விகாரைகளைவிடவே அளவில் சிறியனவாக காட்சியளித்தன அவ்உருவ அமைப்புக்கள். அதைப்பார்த்த கணமே என்மனத்தில் பல கேள்விகள்.  தமிழர் பகுதியிலே விகாரைகள் எவ்வாறு முளைத்தன? மிகப்பழைய காலத்திலே பொதுவாக 50mஐயும் விட உயரமான விகாரைகளே அமைக்கப்பட்டன. இதெப்படி 5mலும் குறைவான உயரத்தில் விகாரைகள்? இந்த அளவு விகாரைகளை இதைவிட வேறஇடத்தில் பார்த்ததுண்டா?


எனது கேள்விகளுக்கான பதில்கள் உரியவரிடமிருந்தே கிடைத்தது. அந்த இடத்திற்கு பொறுப்பாக அரசாங்கத்தால் அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். கவனிக்கவும் அவர் ஒரு தமிழர். அவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்துப்பார்த்தேன். அவர் 40வருடங்களுக்கு மேலாக தொல்பொருட் திணைக்களத்தில் வேலை பார்க்கிறாராம். வேலைக்கு சேர்ந்த காலத்தில் 300/= சம்பளமாம் இப்போ 20 000/=  வரை கிடைக்கிறதாம். அவர் கூறியது இதுதான் "1965 ம் ஆண்டுவரை இது வெறும் அத்திவார அடித்தளங்களாகதான் இருந்தது. பின்புதான் இவ்வாறு விகாரை வடிவமைப்பில் கட்டப்பட்டது. எறாத்தாழ 60அளவான அடித்தளங்களில் 30 வரையிலானவை இப்படி விகாரை அமைப்பில் கட்டப்பட்டது. ஏனையவை அவ்வாறே இருக்கின்றது"



இப்படங்களை முகப்புத்தகத்தில் தரவேற்றியபோது பதிவர் பால்குடி போட்ட கருத்து "கந்தரோடையில் புத்த விகாரை இருந்ததுக்கான சான்றல்ல இது. உண்மையில் வட்ட வடிவில் காணப்படும் அடித்தளங்களே இங்கு அகழ்வாராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்டன. 1960 ஆம் ஆண்டளவிலேயே விகாரை போன்று வடிவமைக்கப்பட்டது. பழங்காலத்தில் மனிதர்களை புதைக்கப் பயன்பட்ட இடமே இது என்ற முடிவே உண்மையானது."

எனது நண்பர் ஆதி கூறிய கருத்து "பழங்கால நாகர்களின் "முதுமக்கள் தாழி" என்ற இறந்தவர்களை அடக்கம் செய்ய பயன்படும் மிக பெரிய கோள வடிவ மண்பாண்டங்களின் அரை மேற்புறமே இவ்வாறு விகாரைகளாக சொற்திரிபுபடுத்தப்பட்டன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்பதே உண்மை!"

இவர்களின் கருத்திலிருந்து நீங்கள் எது உண்மை என்று அறிந்து கொள்ளலாம். இவ்வாறாக வரலாறுகள் மாற்றப்படுவதும் திரிவுபடுத்தப்படுவதும் ஏன் என்று என் போன்ற பாமரர்களுக்கு புரிவதில்லை. உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

பிற்குறிப்பு:அண்மையில் தேரர் ஒருவர் கூறியிருந்தார் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்தது சிங்களவர்தான் என்று. வழமைபோல் இச்செய்தி எல்லா தமிழ் பத்திரிகைகள் வழியேயும் பிரதான செய்தியாக ஆரவாரமாக வந்து கடைசியில் பிசுபிசுத்துப்போனது. அதற்கும் இப்பதிவிற்கும் எதுவிதமான சம்பந்தமம் இல்லை.

தற்கால இசையமைப்பாளர்கள் – சிறுபார்வை

இப்போதைய காலப்பகுதியில் வெளிவரும் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கும் தென்னிந்திய தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய இசையமைப்பாளர்களை பற்றிய ஒரு சிறு அலசலை/ எனது பார்வையை தர இக்கட்டுரை முயல்கிறது . சின்ன வயசிலிருந்து ஒவ்வோர் பாடலை கேட்கின்றபோதும் அதை பாடியவர்கள், இசையமைத்தவர் யார் என்று அவர்களது பின்னணி பற்றி அறிந்து கொள்வதில் நான் காட்டிய ஆர்வம் இதை எழுத என்னை துாண்டியது. முதல் இரு இடங்களை பிடித்து முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளர்களான A.R.Rahman மற்றும் ஹாரிஷ் ஜெயராஜ் பற்றி ஏலவே அனைவருக்கும் பரீட்சயம் என்பதால் அவர்களை தவிர்த்து ஏனைய சிலரை பார்ப்போம்.

யுவன் சங்கர்ராஜா

மிக இளவயதில்(16) திரைத்துறைக்கு நுழைந்து, பல இளவட்டங்களின் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளராக இருக்கும் இவர், எனது கணிப்பின்படி திறமை அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இளையராஜாவின் வாரிசாகவே திரைத்துறைக்கு அறிமுகமானாலும் தனது திறமையால், முயற்சியால் படிப்படியாக உயர்ந்து தற்போது உச்ச நிலையை அடைந்துள்ளார். கைவசம் கூடுதலான படவாய்ப்புக்களை கொண்டவர்கள் வரிசையில் முதலிடத்திலிருக்கும் யுவன் தற்கால இளைஞர், யுவதிகளுக்கு பிடித்தவகையில் இசையமைப்பதில் கைதேர்ந்தவர்.

அதனால்தான் கூடுதலான இளவட்டங்கள் இவரின் ரசிகர்கள். ‘அரவிந்தன்‘ திரைப்படத்துடன் சறுக்கலாக 1996ல் ஆரம்பமான இசைப்பயணம். 1999ல் வெளிவந்த ‘பூவெல்லாம் கேட்டுப்பார்‘ திரைப்படம் மூலமாக முற்றிலும் மாறியது. அதில் இடம்பெற்ற அனைத்துப்பாடல்களும் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து வாய்ப்புகள் குவியலானது. ‘7G Rainbow Colony‘, ‘காதல் கொண்டேன்‘ இவரது இசையில் வெளியான சில Box Office Hit திரை அல்பங்களாகும். அண்மையில் வெளியான ‘பையா‘ பாடல்களும் சந்து பொந்தெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இசையமைப்பதில் மட்டுமல்லாது தனது சொந்தக்குரலில் Stylishஆக பாடவல்ல திறமைபடைத்த, இவரது சொந்தக்குரல் பாடல்கள் எல்லாம் பாரிய வெற்றியை பெற்றுள்ளது.

G.V.பிரகாஷ்குமார்

இப்போதுள்ள இசையமைப்பாளர்களில் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் திறமை வாய்ந்த இசையமைப்பாளர்கள் வரிசையில் GVற்குதான் எனது கணிப்பில் முதல் இடம். திரைத்துறைக்கு செல்வாக்கால் சுலபமாக இளவயதில்(19) நுழைந்தவராக பார்க்கப்படுகின்ற போதிலும் குறுகிய காலத்தில் பலர் மத்தியில் பிரபலமடைந்தவராக இருக்கிறார் GV.பிரகாஷ். Mozart of Madras என செல்லமாக அழைக்கப்படும் A.R.Rahmanனின் மருமகனான இவர் மிகவும் சிறுவயதிலேயே பல பாடல்களை மாமனின் இசையில் பாடியுள்ளார்.

‘வெயில்‘ படம் மூலமாக பலரும் வியக்கும் வகையில் தனது திரை அறிமுகத்தை ஆணித்தரமாக பதித்தார். வேற்றுமொழிகளில் உள்ள முன்னணி பாடகர்கள் பலரை தனது இசையில் பயன்படுத்தும் இயல்பை கொண்டவர். இவர் பயன்படத்திய பிறமொழிபாடகர்களாக கைலாஷ்கர், அல்க்னா யாக்கீட், சோனு நிகம், டலர் மெஹந்தி, றுாப்குமார் ரதோட் போன்றோரை குறிப்பிடலாம். ரஜினியின் ‘குசேலன்‘ படத்தில் இசையமைக்க கிடைத்த வாய்ப்பானது இவரது திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகும். Remake பாடல்களுக்கு இசையமைக்ககூடாது என்ற கொள்கையை கொண்ட இவர், இயக்குனரின் வேண்டுகோளிற்கு பணிந்தே ‘ஆயிரத்தில ஒருவன்‘ படத்தில் ‘அதோ அந்த பறவை‘ பாடலை Remake செய்யாது Original பாடலின் Sound trackற்கு மேலதிகமாக இசைச்சேர்க்கை செய்து பழைய பாடலின் சிறப்பு மங்காது தனது இசையால் அந்த பாடலை மெருகேற்றினார். பின்னணி இசையில் இவரது தேர்ச்சியை ‘ஆயிரத்தில ஒருவன்‘ படம் மூலம் நீங்கள் உணரலாம். A.R.Rahmanனின் சாயலில் அல்லது அவரது மெட்டுக்கள் சிலவற்றை இவர் சுட்டு பயன்படுத்துவதாகவும், சில ஆங்கில பாடல்களை ஆட்டையை போடுவதாகவும் இவரை சிலர் குறைகூறுவது மறுக்கமுடியாத உண்மையாகும். பாடகராகவும் விளங்கும் இவர் ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் கிட்டத்தட்ட 5பாடல்கள் வரை பாடியுள்ளார். யுவன்சங்கர்ராஜாவின் நேரடி போட்டியாளராக இவரை கருதலாம்.

விஜய் அன்ரனி

யாருடைய செல்வாக்குமின்றி திரைத்துறைக்கு நுழைந்தவர்களில் இவரும் ஒருவர். குத்துப்பாட்டுக்களின் தனிக்காட்டு ராஜாவாக திகழும் இவரது இசையில் முதலாவதாக ‘சுக்ரன்‘ படப்பாடல்கள் வெளியாகியது. அந்தகாலத்தில் ‘Suppose’ பாடலை வாயில் முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதல் அல்பம் மூலமாக தனெக்கென தனிமுத்திரையை பதி்த்த விஜய் அன்ரனி பல புதிய இளைய பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இவரது இசையில் வெளிவரும் படங்களில் ஒரு குத்துப்பாடலாவது இருப்பதும் அது ஹிட் ஆவதும் தவிர்க்க முடியாதவொன்று. ‘நாக்க முக்க‘ பாடல் இவரது fast beat பாடல்களில் ஒரு மைல்கல்லாகும். இப்படியான பாடல்களுக்கு பாடலை எழுதுவதும் இவரே. ‘சுக்ரன்‘, ‘டிஷ்யும்‘, ‘நான் அவனில்லை‘, ‘நினைத்தாலே இனிக்கும்‘ இவரது இசையில வெளியாகி பலராலும் பேசப்பட்ட பாடல்கள். குத்துப்பாடல் மட்டுமல்லாது இவரது மெலடி பாடல்களும் மிகவும் இனிமையானவை, தனித்தன்மையானவை. ‘அங்காடித்தெரு‘ படத்தில் ‘அவள் அப்படி ஒன்றும்‘ பாடல் அதற்கு மிகச்சிறந்த எடுத்தக்காட்டு.

இமான்

தற்போது இருப்பவர்களில் சிறந்த Remake இசையமைப்பளராக என்னால் பார்க்கப்படும் இசையமைப்பாளராக இமான் காணப்படுகிறார். இவரது பாடல்களை கேட்கும் இசையறிவுள்ள எவரும் இது இமானுடையதென்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். ஏனெனில் ஒரே ஸ்டைலில் வழமையான instrumentsகளை பயன்படுத்தியே இவர் இசையமைக்கிறார். பெரும்பாலும் வர்த்தகரீதியான மசாலா படங்களுக்கே இவருக்கு வாய்ப்புக்கள் கூடுதலாக கிடைக்கிறது. அண்மையில் வெளியான "மைனா" இதிலிருந்து மாறுபட்டது. விஜயின் ‘தமிழன்‘ படத்தில் இசையமைப்பாளராக இவர் அறிமுகமானார். சொந்த குரலில் நெளிவு, சுளிவுகளுடன் பாடல்களை பாடுவதில் இமான் வல்லவர். இவரும் பல புதுமுகங்களை தனது இசை மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இமானின் பாடல்கள் ஒரு போதும் சகிக்கமுடியாமல் இருக்காது (சிறிகாந் தேவாவின் தற்போதைய பாடல்கள் போல்) என்று அறியப்படும் Minimum guaranty இசையமைப்பாளர் இவர்.

ஜேம்ஸ் வசந்தன்

Vijay TV, Sun TVகளிலும் இவர் ஆரம்பத்தில் பணிபுரிந்திருந்தாலும், இவரை நான் முதலில் கண்டது பொதிகை TVயிலாகும். ஆரம்பகால பொதிகை TVஐ பார்த்தவராயின் நீங்களும் நிச்சயம் இவரை கண்டிருப்பீர்கள். தொலைக்காட்சி அறிவிப்பாளராக அறியப்பட்ட ஜேம்ஸ் 2008ல் இவரது மாணவரான சசிக்குமாரால் ‘சுப்பிரமணியபுரம்‘ற்கு இசையமைக்க அழைக்கப்பட்டார். அந்தப்பட்த்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்‘ பாடல் மூலமாகவும், படத்தின் பெருவெற்றியின் மூலமாகவும் உலகம் பூராகவும் இவரது பெயர் பேசப்பட்டது. இவரது எழுச்சி அதன்பின் திரையிசைப்பக்கமாக மாறியது. இவரின் இசையில் வெளியான 4பட பாடல்களும் இனிமையானவையாகும். எனது தெரிவில் இவரது அல்பங்களில் ‘யாதுமாகி‘ முதல் இடம் பெறுகிறது. எனினும் படத்தின் சொதப்பலாலயோ என்னவோ இப்படப்பாடல்கள் வானொலியில் ஒலித்து நான் கேட்டது மிகக்குறைவு. 4படங்களிலும் ஒவ்வோர் Maximum Duet Melody பாடல் இருக்கின்றமை சிறப்பாகும்.

வித்யாசாகர்

தற்காலத்தில் இசையமைத்துக்கொண்டிருக்கும் மூத்த இசையமைப்பாளர்களில் வித்யாசாகர் முதன்மையானவர். இப்போதும் திறமையாக இசையமைத்துவரும் இவருக்கு வாய்ப்புக்கள் தற்போது குறைவாகியுள்ளமைக்கான சரியான காரணத்தை என்னால் அறிய முடியாதுள்ளது. தற்போதைய முதல்தர நடிகர்கள் அனைவரின் படங்களுக்கும் இசைவழங்கிய பெருமையுடைய இவர் ஆரம்பகாலங்களில் தனது இசையில் பாடல்களை பாடியும் வந்துள்ளார். அண்மையில் குருவியில் இடம்பெற்ற ‘பலானது‘ பாடலை பாடியவரும் இவரே. S.P.பாலசுப்ரமணியம், இளையராஜாவிற்கு அடுத்த சிறந்த இசையமைப்பாளராக இவரை தான் கருதுவதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். 1989இலேயே தமிழில் அறிமுகமாகியிருந்தாலும் கர்ணா படத்தில் ‘மலரே மௌனமா‘ பாடல் மூலமாவே தனது இருப்பை வெளி உலகிற்கு உணர்த்தினார். எனினும் 2001ற்கு பிறகே ஸ்திரமாக தமிழ்மொழிப்படங்களில் இவரால் கால்பதிக்க முடிந்தது. ‘அன்பே சிவம்’, ‘கில்லி’, ‘சந்திரமுகி’, ‘மொழி’, ‘பிரிவோம் சந்திப்போம்’ போன்ற படங்கள் இவரது புலமையை எடுத்தியம்பும் ஒருசில படங்கள். பாடகர் மதுபாலகிருஷ்ணரை தனது ஆஸ்தான பாடகராக உபயோகிக்கிறார்.

தேவிசிறி பிரசாத் (DSP)

மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இசைஇயக்குனராக விளங்கும் DSP தனது அறிமுகத்தை தெலுங்கு படத்திலேயே மேற்கொண்டார். ‘ICE’ மூலம் தமிழில் அறிமுகமானாலும் ‘மாயாவி’ படத்தின் மூலமாகவே தமிழில் பேசப்பட்டார். அரைச்ச மாவையே திருப்பி திருப்பி அரைக்கும் ஒரு கம்போஸராகவும், மேடை நிகழ்ச்சிகளுக்கே (Stage Performer) லாயக்கானவராகவுமே இவரை நான் பார்க்கிறேன். (நல்லா டான்ஸ் பண்ணுவார்). அதாவது இசைச்சரக்கு தீர்ந்துவிட்டது இவருக்கு. இவரது இசையில் இப்போது வரும் பாடல்கள் அனேகமானவை இவரின் பழைய பாடல்களை ஞாபகப்படுத்தும். ஆனாலும் DSPக்கு படவாய்ப்புக்களுக்கு குறைவில்லை. ஏனொ தெரியவில்லை. எனினும் ‘கந்தசாமி‘ பாடல்கள் இதிலிருந்து மாறுபட்டவை. ‘மாயாவி’, ’ஆறு’, ‘உனக்கும் எனக்கும்’ போன்றன இவரின் இசையில் பிரபலமானவை.

ஜோஷ்வாசிறீதர் தீனா தரன் தமன் போன்ற ஏனைய இசையமைப்பாளர்கள் பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம். 

Share

Related Posts with Thumbnails

என்னைப் பற்றி

எனது படம்
ஒரு போக்கன். எந்த வெருட்டலுக்கும் பயப்படாது வெட்டியாக பொழுதை கழிக்கும் மொக்கன்!

Catch me on Facebook

Twitterல் பிடிக்க

*பார்வைகள்*

3தரம் யூத்ஃபுல் விகடனில்

3தரம் யூத்ஃபுல் விகடனில்

என்ன கொடுமை

என்ன கொடுமை
நன்றி சுபாங்கன்,கரவைக்குரல்

வலைப்பதிவு காப்பகம்

Live traffic feed

பார்க்கும் பதிவுகள்